கிரெடிட் கார்ட் அராஜகம் - சிக்கியது SBI-GE கூட்டணி
சென்னை, ஆக.21-
சென்னை கிரெடிட் கார்டு ஏஜென்சி ஊழியர் கைது செய்யப்பட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு விவகாரங்களை "ஜி.ஈ. கண்ட்ரிவைடு" என்ற ஏஜென்சி நிறுவனம் கவனித்து வருகிறது. கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தாதவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுப்பது இந்த நிறுவனத்தின் வேலையாகும். இந்த நிறுவனம் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ளது.
நேற்று இந்த நிறுவனத்திலிருந்து டெலிபோனில் பேசி பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை அமீனா கார்த்தி என்பவரை மிரட்டியுள்ளனர். அமீனா கார்த்தி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.15 ஆயிரத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை வசூலிப்பதற்காக சென்னை வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் பேசுவதாக போனில் பேசி மிரட்டியுள்ளார். இதுபற்றி அமீனா கார்த்தி வடக்கு கடற்கரை போலிசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார். துணை கமிஷனர் சூடேஸ்வரன், உதவி கமிஷனர் ராஜகோபாலன் (பொறுப்பு) ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்ட்ர் செல்வமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இன்ஸ்பெக்டர் பெயரில் மிரட்டியதாக "ஜி.ஈ. கன்ட்ரிவைடு" ஏஜென்சியின் ஊழியர் கவுதம் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 மிரட்டல் ஊழியர்களை போலிசார் தேடி வருகிறார்கள். பணத்தை வசூல் செய்வதற்காக போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரை தவறாக பயன்படுத்தியதாக இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
***
சிக்கியது யானையின் வாலில் உள்ள சிறு மயிர்தான். கிரெடிட் கார்டு வணிகம் முழுமையாகவே இது போன்ற மோசடி மற்றும் மிரட்டல் முறையிலேயே நடைபெறுகிறது.
பொதுமக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இதுபோன்ற சமூக அநீதிகளை கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment