Monday 9 February 2015

தமிழக வரலாறு - 07

                              தமிழக வரலாறு - 07

பழங்கற்காலம் கி.மு. 35,000 ஆண்டுகட்கு முன்பிருந்து சுமார் கி.மு.
10,000 ஆண்டுவரை நிகழ்ந்திருக்கக்கூடும் என அறுதியிட்டுள்ளனர். உலக
வரலாறுகளில் பழங்கற்காலத்தை முற்பகுதி யென்றும் பிற்பகுதி யென்றும்
வரையறுத்துள்ளனர். இத்தகைய பாகுபாடு ஒன்று தமிழகத்து வரலாற்றுக்குப்
பொருந்துமா என்பதைப் பற்றிப் புதைபொருள் ஆய்வாளரிடையே கருத்து
வேற்றுமை நிலவுகின்றது. 

     பழங்கற் காலத்துக்கும் புதிய கற்காலத்துக்குமிடையே இடைக்கற்காலம்
ஒன்று நிகழ்ந்தது. அக்கால அளவில் வாழ்ந்த மக்கள் மிகச் சிறிய 
கற்கருவிகள் செதுக்கிக்கொண்டனர். சிக்கிமுக்கிக் கல், அகேட் (Agate),
செர்ட்டு ( Chert), ஜாஸ்பர் ( Jasper) போன்ற இரத்தினக் கற்களாலும் இக்
கருவிகள் சமைக்கப் பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் சாயர்புரத்திலும்,
கருநாடக மாநிலத்தில் பிரமகிரியிலும், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்
படுகைகளிலும் இக் கருவிகள் கிடைத்துள்ளன. இடைக் கற்காலத்தின்
முற்பகுதியில் அமைந்த புதைகுழிகளில் மட்பாண்டம் காணப்படவில்லை.
ஏனெனில், மட்பாண்டம் வனையும் கலையைப் பிற்பகுதியிற்றான் மக்கள்
பயின்றனர். இடைக்கால முற்பகுதியிலேயே மக்கள் 

     வேட்டையாடி வயிறு வளர்த்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
அவர்கள் மான், பன்றி, ஆடு, எலி ஆகியவற்றைப் பிடித்துத் தின்று வயிறு
பிழைத்ததற்கும் சான்றுகள் உள்ளன. பிணங்களை மண்ணில் புதைக்கும்
வழக்கமும் அப்போதே தொடங்கிவிட்டது. 

     புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள்
காணப்படுகின்றன. அவர்கள் கற்கருவிகைளை ஒழுங்காகவும் 
வழுவழுப்பாகவும் செதுக்கினர். இவை படிக்கட்டுக் கல்(Trap Rock) என்ற
ஒருவகைக் கல்லினால் செய்யப்பட்டன. உளிகள், சம்மட்டிகள் போன்ற
கருவிகளையெல்லாம் அவர்கள் அழகாகச் செதுக்கிப் பளப்பளப்பாகத் 
தேய்த்து மெருகூட்டியுள்ளனர். திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி,
சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் புதிய கற்காலக்
கருவிகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. 

     புதிய கற்கால மக்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில்
அமர்ந்துவிட்டனர். உழவுத் தொழிலையும் வளர்க்கலாயினர்; ஆடு 
மாடுகளைப் பழக்கிக்கொள்ளத் தொடங்கினர். படகுகள் கட்டிக் கடலில் 
ஓட்டக் கற்றுக்கொண்டனர். இம்மக்கள் பயின்ற கலைகள் அனைத்திலும்
நெருப்புமூட்டக் கற்றுக்கொண்டதுதான் அவர்கள் வாழ்க்கையில் நாம் காணும்

தனிச்சிறப்பாகும். சிக்கிமுக்கிக் கற்களைத் தட்டியும், மரத்தைக் கடைந்தும்
இவர்கள் நெருப்பு மூட்டினார்கள். இவர்கள் மட்பாண்டங்களையும்
வனைந்தார்கள். கையாலும், சக்கரங்களைக் கொண்டும் சட்டிபானைகள்
செய்தார்கள். பஞ்சாலும் மயிராலும் ஆடைகள் நெய்து அணிந்தார்கள்;
ஓவியந்தீட்டவும் இவர்கள் ஓரளவு கற்றிருந்தனர். தம் வீட்டுச் சுவர்களின்மேல்
வேட்டை நிகழ்ச்சிகளையும் நாட்டியக் காட்சிகளையும் ஓவியங்களாகத்
தீட்டினர். புதிய கற்காலப் புதைகுழிகளில் சீப்புகள், எலும்பினாலும்
சிப்பியினாலும் கடைந்த மணிகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. அக்கால
மக்களின் கலையுணர்ச்சியை இச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. 
இவர்களும் பிணங்களைப் புதைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

     தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பெற்ற புதிய கற்காலப்
பொருள்கள் வரலாற்றுச் சிறப்புடையவைதாம். இம்மாவட்டத்தில் பையம்பள்ளி
என்னும் இடத்தில் தேய்த்து மெருகிட்ட கற்கருவிகள் பல கிடைத்துள்ளன.
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் புதிய
கற்காலக் கருவிகளும், வேறு பல வாழ்க்கை வசதிப் பொருள்களும்
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு வகைக் கோடரித்
தலைகளும் (Celts) என்னும் வகைச் சம்மட்டிகளும், இருவகையான கொத்துக்
கருவிகளும் (adzes), அறுவகை உளிகளும், கருமாரப் பட்டடைக் கற்களும்,
உரல்களும், உலக்கைகளும், தட்டுகளும், தண்டுகளும், இருவகை எந்திரக்
கற்களும், அம்மி குழவிகளும், தீட்டு கற்களும், எடைக் கற்களும்,
கற்சட்டிகளும், அம்புத் தலைகளும் அவற்றுள் சிறப்பானவை. 

     வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ் மக்கள் மிகவும் அகன்ற குழிகளில்
பிணங்களைப் புதைக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகள்
‘பெருங்கற் புதைவுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இப் புதைவுகள் 
ஏற்பட்ட காலத்துக்குப் ‘பெருங்கற்புதைவு’ காலம் (Megalithic Period) என்று
பெயர். புதிய கற்காலம் முடிவுற்றவுடன் ஏற்பட்டவை இப் பிணக்குழிகள்.
கற்காலப் பிணக்குழிகள் காணாத பல புதுமைகளை இக்குழிகளில் காணலாம்.
பெருங்கற் புதைகுழிகள் மிகமிகப் பெரியவை. இவற்றுள் புதைக்கப்பட்டிருக்கும்
பொருள்களும் பலவகையானவை. பிணம் புதைப்பதற்காக மட்டும் இவை
ஏற்பட்டனவல்ல; இறந்தவர்களின் நினைவுச் சின்னங்களாகவும் இவைஅமைந்துள்ளன. உழவு நிலங்களையடுத்துள்ள மலைச்சரிவுகளிலும் 
மேடுகளிலும் இப் புதைவுகள் மிகுதியாகக் காணப்படு கின்றன. மக்கள்
நிலையான வாழ்க்கையில் அமர்ந்து உழவை மேற்கொண்ட பிறகு ஏற்பட்ட
குழிகள் இவை எனக் கொள்ளலாம். பெருங்கற் புதைவுகள் வடஆர்க்காடு,
தென்னார்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் 
தோண்டி யெடுக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் கொச்சிப் பகுதியில் ‘குடைக்கல்’
அல்லது ‘தொப்பிக்கல்’ என்ற குழிகளை அகழ்ந்து வெளிப்படுத்தி
யிருக்கின்றார்கள். தென்னார்க்காட்டில் சங்கமேடு என்னும் இடத்திலும்,
செங்கற்பட்டு மாவட்டத்தில் சானூர் அமிர்தமங்கலம், குன்றத்தூர் என்னும்
இடங்களிலும் பெருங்கற் புதை குழிகள் கிடைத்துள்ளன. 

     பெருங்கற் புதைவுகள் மத்தியதரைக் கடற்பகுதியிலும் காணப்படுகின்றன.
அவை கி.மு. 2500-1500 ஆண்டுகளில் ஏற்பட்டவை என்று புதைபொருள்
ஆய்வாளர் அறுதியிட்டுள்ளனர். அக் குழிகளுக்கும் தமிழகத்துப் பெருங்கற்
புதைவுகட்குமிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனால்
வேறுபாடும் காணப்படுகின்றது. மத்தியதரைக் குழிகளில் இரும்புக் கருவிகள்
கிடைத்துள்ளன. தமிழகக் குழிகளில் இரும்பே கிடைக்கவில்லை. ‘கார்பன் 14’
என்னும் வேதியியல் மின்னணுச் சோதனையின் மூலம் பிரமகிரி ‘கற்கோடரி
நாகரிகம்’ கி.மு. 1000 ஆண்டுகட்கும் முற்பட்டதெனத் தோன்றுவதால், 
தமிழகப் புதைகுழிகள் கி.மு. 1000ஆம் ஆண்டளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்
என்று ஊகித்தறியலாம். 

     செங்கற்பட்டு மாவட்டத்தில் மட்டும் சுமார் இருநூறு பெருங்கற்
புதைவுகள் அகழப்பெற்றுள்ளன. அவை இருவகையாக அமைந்துள்ளன; ஒன்று
‘குகை வட்டங்கள்’ என்பது. இவ்வகைக் குழிகள் ஓர் அறையைப் போல
அமைக்கப்பெற்றுள்ளன. குழியின் அடிமட்டத்தில் பலகைக்கல் ஒன்று
பாவப்பட்டுள்ளது; மற்றொரு பலகைக்கல் குழியை மூடி நிற்கின்றது.
தரைமட்டத்தில் குழிவாயைச் சுற்றி ஒற்றை வட்டமாகவோ அன்றி ஒன்றுக்குள்
ஒன்றாக இரு வட்டங்களாகவோ கற்கள் செங்குத்தாக நாட்டப்பட்டுள்ளன. 

     இரண்டாம் வகை, ‘குழிவட்டங்கள்’ என்பது. இவை ஒவ்வொன்றிலும் 
ஒரு தாழியோ ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளோ புதைக்கப்பட்டுள்ளன; இத்
தாழிகள் யாவும் மண்ணாலானவை. இவற்றுள் பிணங்கள் புதைக்கப்பட்டன. 
சில தாழிகளுக்குக்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழி வட்டங்களைச் சுற்றி ஒற்றை வட்டக்
கற்களை நாட்டியுள்ளனர். 

     பெருங் கற்புதைவு காலத்தின் மக்கள் கற்கருவிகளைக் கைவிட்டு
இரும்புக் கருவிகளைக் கையாளலானார்கள். 

     தமிழகத்தில் புதிய கற்காலத்தையடுத்து ‘இரும்புக் காலம்’ தொடங்கிற்று.
ஆனால், வடஇந்தியாவில் புதிய கற்காலத்தை யடுத்துச் ‘செம்புக் காலம்’
தொடங்கிற்று. கற்காலத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் இடையில் செம்பு
அல்லது வெண்கலக் காலம் ஒன்று தமிழகத்தில் நிகழாதது வியப்பாகவுள்ளது.
இந் நிலைக்கு இரு வேறு காரணங்கள் காட்டப் பெறுகின்றன. ஒன்று, மக்கள்
வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்குக் குடி பெயர்ந்து வந்தபோது முதன்முதல்
இரும்பைத் தம்முடன் கொண்டு வந்திருக்கலாம் ; மற்றொன்று,
கற்காலத்திலேயே மக்கள் இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத்
தொடங்கியிருக்கலாம். இரண்டாம் காரணமே பொருத்தமானதாகத்
தோன்றுகிறது. மட்கலங்கள் வனைவதற்குத் தகுதியான மண்ணைத்
தேடியபோது பலவகையான மண்ணையும், பாறைகளையும் ஆராய்ந்து
பார்த்திருப்பார்கள் ; பச்சை மட்கலங்களைச் சூளையில் சுட்டிருப்பார்கள்.
அப்போது அவர்கள் தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்திருக்கலாம்.
மத்தியதரைக் கடலிலுள்ள கிரீட் என்னும் தீவிலும் பாலத்தீனத்திலும்
காணப்படுவதைப் போலவே ஆதிச்சநல்லூரிலும் கற்கருவிகளுடன் இரும்புக்
கருவிகளும் கலந்து காணப்படுகின்றன. செங்கற்பட்டில் பெரும்பேயர் என்னும்
இடத்திலும், கேரளத்தில் தலைச்சேரி என்னும் இடத்திலும் இவ்வாறே
கற்கருவிகளும், இரும்புக் கருவிகளும் கலந்தே கிடைத்துள்ளன. எனவே,
தமிழகத்தில் கற்காலம் முடிவுறும் போதே இரும்புக் காலமும் 
தொடங்கிவிட்டது என்று கருத இட மேற்படுகின்றது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...