Monday 9 February 2015

பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 04

                        பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 04

அரசியல் 
     பண்டைய தமிழகத்தில் நாட்டின் தலைவனாகவும், அரசியலின்
தலைவனாகவும் மன்னன் ஒரு தனியிடத்தைப் பெற்றிருந்தான். தமிழகத்தில்
முப்பகுதிகளான சேர சோழ பாண்டிய நாடு மூன்றும் மூன்று மன்னரின்
ஆட்சியின்கீழ் இருந்துவந்தன. அம் மன்னரின்கீழ்ப் பல்வேறு குறுநில
மன்னர்கள் ஆங்காங்கு அரசாண்டு வந்தனர். இம் மூன்று நாடுகளுக்குள்
பாண்டி நாட்டைப்பற்றிய செய்திகள் வடமொழி இராமாயணத்திலும்,
மகாபாரதத்திலும், மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க ஆசிரியரின் குறிப்புகளிலும்
காணப்படுகின்றன. அரசாங்கமானது மன்னனின் பரம்பரை உடைமையாய்
இருந்துவந்தது. மன்னன் ஒருவன் இறந்தால் அவன் மூத்த மகனே
பட்டத்துக்கு வருவான். மகளிர் அரசு புரிந்ததாகச் சங்க இலக்கியத்தில்
சான்று ஏதும் இல்லை.

     வேந்தனின் ஆட்சி ஆண்டுகளின் நிகழ்ச்சிகளைப் பெருங்கணி
எழுதிவைப்பார். அரசவை காலையில் கூடுவது வழக்கம். அதனால் அதற்கு
‘நாளவை’ என்றும், ‘நாளிருக்கை’ என்றும் பெயர்கள் வழங்கி வந்தன.219
அரசனுடன் அவனுடைய மனைவியும்

     219. புறம். 29 : 5. 54: 3.

அரசவையில் அமர்வது மரபாக இருந்துவந்தது. அரசவையில் இசை
முழங்கிக்கொண்டிருக்கும்.220 சிலப்பதிகாரம் குறிப்பிடும் எண்பேராயமும்
ஐம்பெருங்குழுவும் அரசனுடைய ஆணைக்கு வரம்பு விதித்தனவா, அன்றி
அறவுரைகள் மட்டும் எடுத்துக்கூறி அரசனுக்கு அறிவுறுத்தும் உரிமையைச்
செலுத்தி வந்தனவா என்பது விளங்கவில்லை. மன்னனின் அரசியலுக்கு
விதிகள் வகுத்துள்ள திருக்குறளிலும் இவ்விரு நிறுவனங்களைப் பற்றிய
குறிப்புகள் எதுவும் இல்லை.

     அரசர்கள் அவையில் அமைச்சர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
தேவையானபோது அவர்கள் மன்னனுக்கு அறவுரைகளை இடித்து எடுத்துக்
கூறும் உரிமைகளைப் பெற்றிருந்தனர். ஆனால், தம் நோக்கத்தின்படியே
செயல்புரியும் உரிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை; அரசனுடைய
‘தேர்ச்சித் துணை’யாகவே இயங்கி வந்தனர்.221 ஊராண்மையும்
நாட்டாண்மையும் குழுக்கள்பால் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
சங்க கால ஆட்சி முறை

     சங்க காலத்தில் மன்னனாட்சியே நிலவியது. அக்கால அரசர்களில்
தலைசிறந்தவராகிய சேர சோழ பாண்டியர்கள் மூவேந்தர்களெனவும் மற்ற
அரசர்கள் மன்னர்களெனவும் சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்தகைய சிற்றரசர்களாகிய மன்னர் பலர் ஆட்சி புரிந்ததாகவும்
அறிகிறோம். அதியமான் நெடுமான் அஞ்சி, பாரி, ஓரி, காரி, பேகன், ஆய்,
நள்ளி முதலியோர் இச் சிற்றரசருள் சிலராவர்.

     தமிழகத்தில் முதன்முதலாக எப்பொழுது அரசர்களுடைய ஆட்சி
தோன்றியதெனத் திட்டவட்டமாகக் கூற இயலாது. திருக்குறள் உரையாசிரியர்
பரிமேலழகர், உலகம் தோன்றிய காலம் தொட்டே சேர சோழ பாண்டியராகிய
மூவேந்தரும் ஆட்சிபுரிந்து வந்தனரெனக் கூறியிருப்பது
மிகைப்பட்டதென்பதற்கு ஐயமில்லை. அவர் கூறியிருப்பதன் கருத்து,
மூவேந்தர்களும் நெடுங்காலமாகவே அரசாண்டு வந்தனரென்பதே ஆகும்.

     முதன் முதலாக அரசன் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்று சிலர்
ஆய்ந்துள்ளனர். ‘கோன்’ என்னும் சொல் அரசனைக்

     220. மலைபடு. 39-40
     221. குறள். 635.

குறித்தது. ஆனால், முல்லை நிலத்தில் ஆடு மாடுகளைக் காப்பவனையும்
‘கோன்’ என்னும் சொல் குறிப்பிட்டது. ஆகவே, முல்லைநிலப் பகுதியிலே
தான் முதன்முதலாக அரசன் தோன்றியிருக்கலாமென்பது சிலர் கருத்து. 

     இதுபற்றி முடிவாகக் கூறுவதற்கில்லை. சேரநாட்டில் மன்னனின்
அடையாளமாக இருந்தது வில் என்பதை இங்கு எண்ணும்போது ஆதியில்
வேடனாக இருந்தவன் நாளடைவில் மன்னனாகத் திகழ்ந்திருக்கலாம் என்று
கருத இடமுண்டு. பொதுவாகக் கூறுமிடத்து, கூட்டம் கூட்டமாக வாழ்ந்தவருள்
தலைமை நிலைமையை எய்தியிருந்தவர் அரசராக உருவெடுத்தாரெனக்
கொள்ளலாம். 

     சங்க காலத்திற்கு முன்னதாகவே அரசாட்சி தலைமுறை 
தலைமுறையாகத் தகப்பன் பின் மைந்தன் அரசனாகும் முறை அமைந்திருக்க
வேண்டும். மன்னனின் மூத்த மகனே அம் மன்னனாட்சியைத் தொடர்ந்து 
நடத்தும் உரிமை பெற்றிருந்தான். சேர மன்னன் இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனின் மூத்த புதல்வன் செங்குட்டுவன் அரசு கட்டில்
ஏறுவதற்குத் தகுதியற்றவன் என்று கணி கூறியதன் விளைவாகக் குடும்பச்
சச்சரவு நேரிடாமலிருக்கும் பொருட்டு இளையவன் (இளங்கோ) துறவி
யாயினான் என்பது பற்றி அறிகிறோம். இதிலிருந்து மூத்த புதல்வனே அரச
பதவிக்கு உரியவன் என்று கருதப் பட்டமை புலனாகும். இளைய
அரசகுமாரர்களுக்கு இளங்கோ, இளங்கோசர், இளஞ்செழியன், இளஞ்சேரல்,
இளவெளிமான், இளவிச்சிக்கோன் போன்ற பெயர்கள் வழக்கிலிருந்தன. 

     சங்க காலத்திலேயே சேர மன்னரிடை மருமக்கள் தாயமுறை
வழக்கிலிருந்ததா என்ற ஐயப்பாடு தோன்றியுள்ளது. ஆனால், ஆழ்ந்து
ஆராய்ந்தால் அவ்வழக்கம் மிகப் பிற்காலத்திலேயேதான் வந்திருக்க
வேண்டுமெனத் தோன்றுகிறது. 

     சங்க காலத்திய அரசாட்சி, செங்கோலாட்சியாகவே எப்போதும்
விளங்கியதாவென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. ஆனால் அக்காலக்
கொள்கைப்படி அரசர்கள் நீதி, நற்குணம் ஆகிய பண்பாடுகள்
அமைந்தவர்களாகவே இருந்தனரெனக் கருதலாம். சிலர் கொடுங்கோல்
மன்னர்களாகவும் ஆட்சி புரிந்திருக்கக்கூடும். செங்கோலாட்சியின் 
மேன்மையை எடுத்து விளக்கும் திருவள்ளுவர், கொடுங்கோன்மை பற்றியும்
நன்கு விளக்கியுள்ளார்.
அரசனுக்கு உதவி புரிய அமைச்சர்கள் இருந்தனரென்பதற்கு 
ஐயமில்லை. தலைமை அமைச்சரும் அவருடன் இணைந்து ஒத்துழைக்கும் பல
அலுவலாளர்களும் இருந்தனர். பொதுவாகவே அவர்கள் கற்றறிந்தவர்களாகவும்
திறமை வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்தனரெனக் கருதலாம். 

     பண்டைய நூல்கள் சிலவற்றில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகிய
கூட்டத்தினரைப் பற்றி அறிகிறோம். மதுரைக் காஞ்சியிலும் பிற்காலத்தைச்
சார்ந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்களிலும் 
அவை பற்றிக் கூறப்பட்டுள்ளன. மதுரைக்காஞ்சியில் (510) 
நாற்பெருங்குழுவைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். இவற்றின் அமைப்பு,
பொறுப்புகள், உரிமைகள்பற்றிக் கருத்து வேற்றுமைகள் காணப்படுகின்றன. 

     சில சங்க நூல்கள் இக் குழுக்களைப் பற்றிக் கூறவேயில்லை.
திருக்குறளில் இக் குழுக்களைப்பற்றி எதையும் காணோம். எட்டுத்
தொகையிலும் தொல்காப்பியத்திலும் இவைபற்றிய குறிப்பொன்றுமில்லை.
ஆனால், இதிலிருந்து இக் குழுக்கள் மிகப் பிற்காலத்தவை யென்ற முடிவுக்கு
வரமுடியாது. 

     இவற்றின் உறுப்பினர்கள் : 

     சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலிருந்து குறிப்பிட்ட சில
உறுப்பினர்கள் இக் குழுக்களில் இருந்தனரெனத் தெரிகிறது. ஐம்பெருங்குழு
உறுப்பினர்கள் கீழ்க் குறிக்கப்படுவோர் ஆவர்: 

     (1) புரோகிதர் 
     (2) படைத்தலைவர் 
     (3) தூதுவர் 
     (4) ஒற்றர் 
     (5) அமைச்சர். 

     எண்பேராயத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு : 

     (1) கரணத்தியலவர் அதாவது அரசு கணக்கர்கள் 
     (2) கருமகாரர் அல்லது செயலர் 
     (3) கனகச் சுற்றம் அதாவது அரசியல் கஜானா அலுவலர்
(4) கடைகாப்பாளர் அதாவது அரண்மனை காப்போர் 
     (5) நகரமாந்தர் அதாவது நகரில் வாழும் மக்களில் சிறந்த தலைவர்கள் 
     (6) படைத்தலைவர் (காலாட்படையின் தலைவர்கள்) 
     (7) யானை வீரர் (யானைப்படைத் தலைவர்கள்) 
     (8) இவுளி மறவர் அதாவது குதிரைப் படையின் தலைவர்கள். 

     இவருள் மிகப்பலரும் அரசாங்கத்தின் அலுவலர்கள் என்பது தெளிவு;
நகரமாந்தர் எனப்பட்டோரை மக்களின் தலைவர்களாகவும் கருதலாம். 
ஆனால், மக்களின் எல்லாத் தலைவர்களும் இக் குழுவில் இருந்தனரெனத்
திட்டமாய்க் கூறுவதற்கில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவருமில்லை.
ஆயினும் இக் குழுக்களிலிருந்த மற்ற அலுவலர்களைப் போலல்லாது இவர்கள்
மக்களின் பொதுப் பிரதிநிதிகள் எனக் கருதலாம். இக் குழுக்களுக்குக் கூட்டுப்
பொறுப்பு இருந்ததெனக் கூறுவதற்கும் இடமில்லை. பொதுவாக அவரவருக்கு
அளிக்கப்பட்டிருந்த துறைகளின் பொறுப்புகளை அவர்கள் பார்த்து வந்தனர். 

     பொதுவாக அரசு எவ்விதம் நடைபெற்று வந்தது. மக்கள் நலம் 
எவ்விதம் கருதப்பட்டுவந்தது என்பது மன்னனைப் பொறுத்தே இருந்தது.
உண்மையும், மக்கள்பால் வாஞ்சையுமுடைய அரசர் இடைவிடாது செயலாற்றி
வந்தனர். ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு
பணியாற்றி வந்தனர். ஒற்றர்கள் மீது வேறு ஒற்றர்களையும் ஏவி உண்மையை
அறிந்து வந்தனர். சங்க நூல்களிலிருந்து பொதுவாக மன்னர்கள் மக்கள்
நல்வாழ்வுக்காக அரும்பாடு பட்டனர் என்றே கூறலாம்.

ஊராட்சி 
     எக்காலத்திலும் பாரதநாட்டில் அடிப்படையாயிருந்தவை சிற்றூர்களே.
பண்டைத் தமிழகத்திலும் அஃது அவ்விதமே இருந்தது விந்தையன்று.
ஆகவே, ஊராட்சி பற்றி அறிவது மிகத் தேவை. பிற்காலம், குறிப்பாகச்
சோழப்பேரரசு காலத்தில் ஓங்கி வளர்ந்த ஊராட்சிக்கு வழிகோலியாயிருந்தது
சங்ககால வழக்கமேயாகும்.

     ஊர்களில் கூடின கூட்டத்திற்கு மன்றம், பொதியில், அம்பலம், அவை
என்னும் பெயர்கள் விளங்கியிருந்தனவாகப் 
பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். இவை யாவும் ஊர்க்
கூட்டத்தின் பெயர்களெனவே கருதலாம். திருமுருகாற்றுப்படையில் மட்டிலும்,
மன்றமும் அம்பலமும் வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளன. அதன் உரையாசிரியர்
பின்வருமாறு கூறியுள்ளார் : மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடிய
இடம் எனவும், அம்பலம், பொதியில் என்னும் இரண்டும் ஒரு சிறு
மாளிகையைக் குறிப்பிட்டனவென்றும் அதன் நடுவில் ஒரு பீடம்
இருந்ததாகவும் கருதுகின்றார். இதை ஒட்டிப் பலர் பல ஊகங்களை
வெளியிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார்,
மன்றம் என்றது ஒரு மாளிகை என்றும், பொதியில் என்றது ஒரு பொது இடம்
என்றும் கருதுகிறார். பொதியில் என்றது பொது இல் என்னும் சொற்களின்
இணைப்பில் ஏற்பட்டதெனலாம் ; அதாவது பொதுவான இருப்பிடம் என்பது
பொருள். 

     பொதியில் சாணத்தால் மெழுகப்பட்டிருந்ததெனப் பட்டினப்பாலை 
246-49 ஆம் அடிகளிலிருந்து அறிகிறோம். சில ஊர்களில் பெரிய 
மரத்தடியில் மன்றம் அல்லது பொதியில் கூடியது. குறிப்பாக, வேப்ப
மரத்தடியில் இவை அமைந்திருந்தனவெனப் புறநானூற்றுச் 
செய்யுள்களிலிருந்து அறிகிறோம்.222 

     மன்றம் அல்லது பொதியில் என்ற கூட்டங்களின் சிறந்த பணி
மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்ப்பதாகவே இருந்தன. அக்
கூட்டங்களின் முதியோர் இவ் வழக்குகளைத் தீர்த்துவைத்தனர். இத்
தலைவர்கள் ஊர்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரெனக் கூற முடியாது.
வயதிலும் அறிவிலும் முதியோராயிருந்தவர் தாமாகவே தலைவராக
அமர்ந்திருந்தன ரெனவே கருத வேண்டும். வழக்குகளை ஒழுங்கு
படுத்துவதைத் தவிர ஊர்ப் பொதுக்காரியங்களையும் சமூகநலத்
திட்டங்களையும் மன்றத்தார் பொறுப்பேற்று நடத்தி வந்தனரெனவும் 
கூறலாம். அரசு, ஊர்களின் அன்றாடச் செயல்களிலும் பொறுப்புகளிலும்
தலையிட்ட தென்பதற்குச் சான்றுகள் இல்லை. 

     ஊரின் சில பகுதிகள் சேரிகள் என்று அழைக்கப்பட்டிருந்தன. 
சேரிகளில் சில வகுப்பினர் குடியிருந்துவந்தனர். தாழ்ந்த வகுப்பினர் வாழ்ந்த
இடங்களுக்குத்தாம் அப் பெயர் வழங்கப்பட்டிருந்ததெனக் கூறமுடியாது ;
பறைச்சேரி என்பதுபோல் பார்ப்பனச்சேரி, இடைச்சேரி என்றெல்லாம்
பெயர்கள் 

     222. புறம். 76, 79, 371.இருந்தன. சாதிப் பிரிவுகள் ஊர் அமைப்பில் அக்காலத்திலேயே இடம்
பெற்றுவிட்டதெனத் தோன்றுகின்றது. 

நகராட்சி

     சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்கள் இருந்தன. ஊர்களில் சிற்றூர்,
பேரூர், மூதூர் என இருந்தமைபோல், நகரங்களில் பட்டினம், பாக்கம் எனச்
சில இருந்தன. பட்டினம் என்றது கடலோரமாயிருந்த நகரைக் குறித்தது.
பாக்கம் பட்டினத்தின் ஒரு பகுதியெனலாம். 

     சங்ககாலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நகரங்களுள் சிறந்தவை புகார்
(காவிரிப்பூம்பட்டினம்), கொற்கை, மதுரை, வஞ்சி அல்லது கரூர், முசிறி, 
காஞ்சி முதலியவை. இவற்றைப் பற்றி இலக்கியங்களில் கிடைத்துள்ள
விவரங்கள் முழுவதையும் நம்புவதற்கில்லை. கவிஞர்களின் கற்பனைகளும்
சொல்வன்மைகளும் விவரணங்களில் இடம் பெற்றுள்ளன. 

     ஆயினும், பொதுவாக நகரங்கள் வணிகத்தினாலும் தொழில்
சிறப்பினாலும் வளமுற்றிருந்தன. குறிப்பாக, மதுரையும் காவிரிபூம்பட்டினமும்
சிறப்புற்று வளர்ந்திருந்தன. தமிழக நகரங்களில் மக்களின் சுயாட்சி நிலவிய
தென்பதற்குச் சான்றுகளில்லை. ஆட்சிமுறையும் வடஇந்தியாவில்
பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்ததுபோல் இங்கு நன்கு அமைக்கப்பட்டிருந்த
தென்பதற்கு அறிகுறியில்லை. ஆயினும் மதுரை, வஞ்சி போன்ற 
தலைநகரங்கள் சீராக ஆளப்பட்டு வந்தனவெனக் கூறலாம். மதுரை மாநகரின்
தெருக்கள் அன்றாடம் காலையில் பெருக்கப்பட்டுச் சுத்தமாயிருந்தனவென்று
தெரிகிறது. 

     இராப்பொழுதில் நகரங்கள் அக்கறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன;
ஊர்காவலர் என்று அழைக்கப்பட்ட காவலாளர்கள் அமர்த்தப் 
பெற்றிருந்தனர். பாதுகாப்புக்காகக் காவல் நாய்களும் பயன்படுத்தப்
பட்டிருந்தன. மன்னர்களது அரண்மனைகள் ஆழ்ந்த அக்கறையுடன்
பாதுகாக்கப்பட்டமை விந்தையன்று. 

     பொதுவாக சங்க காலத்தில் சிற்றூர்களும், பேரூர்களும், நகரங்களும்
அவற்றிற்குத் தகுந்தவாறு ஆளப்பட்டு வந்தன வெனக் கூறலாம். அவை மிகச்
சிறந்த முறையில் நடைபெற்று வந்தனவென்றோ பிற்காலங்களில் திகழ்ந்த
முறைக்கு ஒப்பாக இருந்தனவென்றோ கருத இடமில்லை.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...