மூளை

மனித வாழ்நாள் உயர்ந்து கொண்டே வருகின்ற ஒரு காலகட்டத்தில், வரப்போகும் ஆண்டுகளில் நூறாண்டு வாழ்வது ஒரு எளிதான செயலாக இருக்கும் என்று கருதப்படும் நேரத்தில் மூளையின் திறன் மிக்க செயல்பாட்டின் அவசியம் பெரிதும் உணரப்படுகிறது. சிலர் 90 வயதிலும் மாறாத மூளைச் சுறுசுறுப்பு உடனும் மங்காத நினைவாற்றலுடனும் இருக்கின்ற போது சிலர் மட்டும் நடுவயதிலேயே மறதிக்கும், மூளைத் தொய்வுக்கும் ஆட்படுகின்றனர். இது ஏன், என்ன காரணம்?
மனித மூளை மூப்படைகின்ற போது என்ன நேர்கிறது? அதை எவ்வகை யிலும் நம்மால் மாற்ற இயலுமா என்றறிவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
மூளை மூப்படைகின்ற போது மூளையின் அளவு (கன பரிமாணம்) குறைகிறது. சுமார் 80 வயதை எட்டுகின்ற ஒருவர் தமது 1.4 கிலோ எடையுள்ள மூளையில் பத்தில் ஒரு பங்கினை (140 கிராம்) இழந்திருப்பார்.
மூளையின் அளவு குறைவது ஸ்கேன் சோதனைகள் மூலமும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பல ஆய்வுகள் மூளை செல்கள் குறைவதை கண்டு பிடித்துள்ளனர். இவர்களது ஆய்வின் மூலமாக மூளையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள செல்கள் மற்ற செல்களை விட விரைவாக அழிகின்றன என்றும் தெரிய வந்துள்ளது. உடல் இயக்கத்துடன் தொடர்புடைய Substantia Nigra என்னும் மூளைப் பகுதியில் இந்த அழிவு விரைந்து நடக்கிறது. சிறு வயதில் சுமார் 6 லட்சம் எண்ணிக்கை உள்ள இந்த S.N. செல்கள் 80 வயதாகின்ற போது 1 லட்சமாகி விடுகின்றது. இன்னும் சிலருக்கு இது மேலும் குறைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக நாற்பது நாற்பத்தைந்து வயதில் சிலருக்கு இது போல் நடக்கின்றது. இதன் காரணமாகவே பார்க்கின்ஸன்ஸ் நோய் உண்டாகிறது. உடல் விறைத்தல், நடை தள்ளாடுதல், கூன் விழுந்த தோற்றம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
No comments:
Post a Comment