Thursday, 5 February 2015

வாரிசுச் சான்றிதழ்

வாரிசுச் சான்றிதழ்

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

எங்கே விண்ணப்பிப்பது?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது.
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்
வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்
எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?
ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்திருந்தால் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே சான்றிதழ் பெறமுடியும்.
ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.

விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான காரணத்தைக் கூற வேண்டும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.

இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.
எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

ஒருவர் இறந்து விட்ட பின்பு அவரின் பணம் மற்றும் சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களிடையே பிரச்சனைகள் ஏதும் வராமலிருப்பதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. இந்த வாரிசுச் சான்றிதழ் என்பது சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் தேவைப்படுவதால், இது இன்றியமையாத சான்றிதழாகக் கருதப்படுகிறது.

வாரிசுச் சான்றிதழ் மதச் சட்டங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் சார்ந்துள்ள மதங்களுக்கான தனிச் சட்டங்களின்படி வாரிசுச் சான்று வழங்கப்படுகிறது. இந்து சமயத்தவர்களுக்கு இந்து திருமணச் சட்டத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. வட்டாட்சியர் அளிக்கும் வாரிசுச் சான்றிதழில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் பெயர் விட்டுப்போயிருந்து அது பின்னாளில் ஒரு பிரச்சினையானாலும் அதற்கு வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். எனவே வட்டாட்சியர்கள் இச்சான்றிதழ் அளிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

விண்ணப்பப்படிவம்

இன்றைய நிலையில் உள்ள வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது. இணையத்தில் கிழ்காணும் முகவரிக்குச் சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf

விண்ணப்பிக்கும் முறை

வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தினை நிரப்பி அதற்கான ஆவணங்களை இணைத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் வழியாக அவர்களது விசாரணப் பரிந்துரைகளுடன் வட்டாச்சியரிடம் விண்ணப்பப் படிவத்தை அளிக்க வேண்டும். இதன் மேல் வட்டாட்சியர் தகுந்த விசாரணை அறிக்கைகள் பெறுவதுடன் அந்த விண்ணப்பத்தின் உண்மை நிலை அறிந்து வாரிசுச் சான்றிதழை வழங்குவார்
வாரிசுச் சான்றிதழும் சில பிரச்சனைகளும்

வாரிசுச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தில் முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் இது தவறானதாகும். வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் என அனைத்துத் தகவல்களும் இடம்பெறவேண்டும்.

இந்த விண்ணப்பத்தில் கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் ஐந்தாவது கலத்தில் ஒரு வாரிசு திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்ற ஒரு கேள்வி இடம் பெற்று உள்ளது. அது அத்துடன் முடிந்துவிடுகிறது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒருவர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு, அவர் வாழும் ஊரில் இல்லாமல் சுமார் நூறு 'கிலோ மீட்டர்' தொலைவில் ஒரு ஐம்பது 'ஏக்கர்' விவசாய நன்செய் நிலம் உள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; அந்த இரண்டு மகன்களில் ஒருவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் எனவும் வைத்துக் கொள்வோம். இங்கு இறந்து போனவர் தானாகத் தனது உழைப்பால் சம்பாதித்த தனது ஐம்பது 'ஏக்கர்' நிலத்தை யாருக்கும் உரிமை மாற்றம் செய்யாமல் இறந்து விடுகிறார். அவர் இறந்த உடன் அந்தச் சொத்து சட்டப்படி அந்தக் குடும்பச் சொத்தாக மாறிவிடுகிறது.

அச்சொத்தில் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகனின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உரிமை உள்ளது. தற்போது வழங்கப்படும் வாரிசுச் சான்றிதழில் இறந்தவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மட்டுமே இடம் பெறுவர். ஒருவர் திருமணமானவர் என்று வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அவருடைய மனைவி அல்லது அவருடைய குழந்தைகள் குறித்த எந்த விவரமும் இருக்காது. ஆக, இறந்தவருடைய சொத்துக்கான 'பட்டாவை' மாற்றும் பொழுது வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் இறந்தவரின் மனைவி, மற்றும் இரண்டு மகன்கள் பெயரிலேயே புதிய 'பட்டாவை' வழங்குவார்கள். அப்படி வழங்கப்படும் பட்டாவை வைத்துக்கொண்டு அச்சொத்தை இந்த மூவருமே இன்னொருவருக்கு விற்றுவிட முடியும். திருமணமான மகன் தனது மனைவிக்குத் தெரியாமல் இதைச் செய்யமுடியும். இவர்களின் சொத்து வெளியூரில் இருப்பதால், அங்குள்ளவர்களுக்கு இவர்களின் வாரிசுகள் பற்றிய தகவலும் தெரியாது. அவர்கள் என்ன செய்வார்கள்? பட்டாவை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தான் அச்சொத்தின் முழு உரிமையாளர்கள் என்று நினைத்து விடுவார்கள்; அங்குள்ள ஆவணப் பதிவாளரும் 'பட்டா' மற்றும் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்தின் உரிமையை மாற்றி, எந்தவித ஆட்சேபனையும் இன்றிப் பதிவு செய்து கொடுத்து விடுவார்.



ஒரு சொத்தை வாங்கும் எவரும், சொத்தை வாங்கும் பொழுது வாரிசுச் சான்றின் அடிப்படையிலேயே வாரிசுகளைக் கண்டறிய முடியும். ஆனால், இப்படி வட்டாட்சியர்கள், வாரிசுச் சான்றிதழில் நேரடியான வாரிசுகளை மட்டுமே கொண்டு வருகிறார்கள். ஒருவேளை அந்த நேரடியான வாரிசுகளில் ஒருவர் ஏறகனவே இறந்து விட்டிருந்தால், அவருக்குத் தனியாக இன்னொரு வாரிசுச் சான்றிதழ் வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தேவையற்றது.

இந்தத் தேவையற்ற அலைச்சலைக் குறைக்க, இறந்தவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்த விவரங்கள், அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் குறித்த விவரங்களையும் சேர்த்தே வழங்கவேண்டும். அதேபோல, ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதில்லை. மாறாக, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு (பரிகாரம்) தேடிக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இதுவும் தவறு. ஒருவர் இறந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட பின்பு, அவருடைய வாரிசுகளைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தால், அல்லது வாரிசு உரிமையில் சிலர் பிரச்சினை செய்தால் மட்டுமே வட்டாட்சியர் அந்த வாரிசுச் சான்றிதழுக்கான மனுதாரரிடம் நீதிமன்றத்தின் வாயிலாகத் தீர்வு பெற அறிவுறுத்தலாம்.

மேலும், ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக 'அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்' என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம். இல்லையெனில், அதாவது ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர் காணாமல் போனது குறித்துக் காவல்துறையில் சரியான புகார் அளித்தும், 'அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்' எனச் சட்டப்பூர்வமான சான்றுகளின்றி ஒருவர் வந்தால், காணாமல் போனவரின் பெயரையும் சேர்த்தே வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியும். இதையும் பல வட்டாட்சியர்கள் செய்வதில்லை.

ஒருவர் தனது பெயரில் வங்கியில் பலகோடி ரூபாய்களை வைப்புநிதியாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது குடும்பத்துடன் வேறு ஒரு இடத்திற்குத் தனது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கிறார் எனவும் வைத்துக்கொள்வோம். பின்பு சில நாள்களில் அவர் மரணமடைந்து விட்டால், அவருடைய மனைவி வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் பொழுது, 'அவர் தற்போதைய வசிப்பிடத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு முன் தான் வந்தார்; ஆனால் பல்லாண்டுகள் வேறு ஒரு இடத்தில் வசித்திருக்கிறார்; அங்கு இன்னொரு திருமணம் செய்திருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது; அப்படித் திருமணம் செய்திருந்தால் அங்கும் வாரிசுகள் இருக்கலாம்' போன்ற சந்தேகங்கள் வட்டாட்சியருக்கு ஏற்படுமாயின், உடனடியாக அவர், மனுதாரரின் கணவர் முன்பு வசித்த பகுதியின் வட்டாட்சியருக்கு ஒரு அலுவல் சார் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கலாம்.

அப்போது அந்த வட்டாட்சியரும் அவர் முன்பு வசித்த பகுதி சிற்றூர்(கிராம) நிர்வாக அலுவலர் மற்றும் நில வருவாய் அலுவலரிடம் அறிக்கை பெற்று அதை இந்த வட்டாட்சியருக்கு அனுப்பினால், அதையும் ஒரு சான்றாக வைத்துக்கொண்டு இந்த வட்டாட்சியர் சான்று வழங்குவார்.

வாரிசுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவம் 
APPLICATION FORM FOR LEGALHEIRSHIP CERTIFICATE
http://cms.tn.gov.in/sites/default/files/forms/cert-legalheir_0.pdf
1. விண்ணப்பதாரரின் பெயர்
Name of the Applicant: 
2. தகப்பனார் / கணவர் பெயர்
 Father/Husband’s Name: 
3. ஆண் / பெண்
 Sex (M/F) : 
4. இருப்பிட முகவரி
Residential Address : 
5. இறந்தவரின் பெயர்
 Name of the deceased : 
6. இறப்புச் சான்றிதழ் எண். 
 (மூலச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்) 
 Death Certificate No. : 
 (Original Certificate to be enclosed) 
 
7. இறந்தவரின் வாரிசுகள் விவரம்
 Legal Heirs of the deceased * 
 
• மனுதாரர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரெனில் இஸ்லாமிய சட்ட 
விதிகளின்படி வாரிசுதாரர்கள் விவரம் 
• If the applicant belongs to Islam Religion, the details of the 
legalheirs of the deceased as per Islamic Rules may be given. 
வரிசை 
எண். 
Sl.No. 
பெயர் 
Name 
வயது 
Age 
உறவு முறை 
Relationship 
திருமணமாவர் / 
திருமணமாகாதவர் 
Marital Status 
(1) (2) (3) (4) (5) 
 
 8. என்ன காரணத்திற்காக சான்றிதழ் 
தேவைப்படுகிறது? 
 (தேவையான ஆவணத்தின் ¡ 
 நகல்™சமர்ப்பிக்க வேண்டும்) 
Purpose for which the certificate is required. 
 (Necessary documents to be enclosed) 
 அ) இறந்தவர் ஒரு மணதாரரா? இரு மணதாரரா?
 (முதல் மனைவியின் குழந்தைகள் / 
 இரண்டாவது மனைவியின் குழந்தைகள் 
 விவரம் இணைக்கப்பட வேண்டும்) 
 
 Deceased had one wife/ two wives 
 (Details of children of first wife / 
 Second wife to be enclosed) 
ஆ) விவரங்கள் 
 Details 
9. குடும்ப அட்டை எண்.
Ration Card No. 
10. மனுதாரர்˜ இறந்தவருக்கு எந்த வகையில்™ உறவு?
 Relationship of the petitioner with the deceased. 
11. விண்ணப்ப நாள்
 Date of application : 
 
 விண்ணப்பதாரரின் கையொப்பம் 
 Signature of the Applicant 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...