Monday 9 February 2015

தமிழக வரலாறு - 10

                                  தமிழக வரலாறு - 10

பௌத்தத் துறவிகளும், சமண முனிவர்களும் தமிழகத்துக்குள்
நுழையும்பொழுதே ஆரியரின் குடியேற்றம் பெருமளவில் பரவிவிட்டிருக்க
வேண்டும். இத் துறவிகளும், முனிவர்களும் தனித்தனியாகவும், குழுக்களாகவும்
தமிழகம் சேர்ந்து தொடக்கத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்து, பிறகு தத்தம் 
சமயக் கோட்பாடுகளை மக்களுக்கு ஓதும் தொழிலில் எழுச்சி
பெற்றிருப்பார்கள். தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சில மலைக்
குகைகளில் கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டுப் பிராமிக் கல்வெட்டுகள்
காணப்படுகின்றன. பஞ்சபாண்டவ மலையென்றும், பஞ்சபாண்டவப்
படுக்கையென்றும் இக் குகைக்குப் பெயர் வழங்குகின்றது. புத்தருக்குப்
‘பாண்டவப் பாதாளன்’ என்றொரு பெயருமுண்டு. எனவே, இக் குகைள்
பௌத்த விகாரைகளாக இருந்தன என்பது தெளிவாகின்றது. பௌத்த
சமயமானது கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே குண்டூர் மாவட்டத்தில்
நுழைந்து நிலைத்துவிட்டதெனப் பட்டிபுரோலு கல்வெட்டுகள் கூறும் 
செய்திகள் மூலம் அறிகின்றோம். அசோகர் காலத்திலேயே காஞ்சிமாநகரில்
பௌத்தம் நிலைபெற்றுச் சிறப்புடன் விளங்கிற்று. மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கி.மு. மூன்றாம், இரண்டாம்

நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அக் காலத்திலேயே சமண 
சமயம் தமிழகத்தில் பரவிவிட்டதற்கு இவை சான்று பகர்கின்றன. வடநாட்டில்
சந்திரகுப்தர் காலத்தில் மிகக் கொடியதொரு பஞ்சம் ஏற்பட்டதாகவும்,
அதனால் பத்திரபாகு என்ற சமண முனிவர் ஒருவர், சமணர் பலர் தம்மைப்
பின்தொடர, தெற்கு நோக்கி வந்து மைசூரில் குடியேறினார் என்றும்
செவிவழிச் சமண வரலாறுகள் கூறுகின்றன. பிறகு விசாகாசாரியார் என்ற
திகம்பர முனிவர் ஒருவரும் அவருடைய மாணவரும் சோழ பாண்டி 
நாடுகளில் பல இடங்கட்கும் வந்து சமண சமயத்தைப் பரப்பலானார்கள்.
முதன்முதல் தமிழகத்தை நாடி வந்தவர்களான சமணர்கள் தனித்திருந்து தவம்
புரிவதையே தம் நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களைத்
தொடர்ந்து பிறகு தமிழகத்திற்கு வந்தவர்கள் சமண சமயத்தின் விரிவையே 
தம் குறிக்கோளாகக் கொண்டனர். அவர்களுள் தலைசிறந்து விளங்கியவர்
குந்தா-குந்தாசாரியார் என்ற புகழ் பெற்ற சமண முனிவராவர். தமிழகத்தில்
ஆண், பெண் ஆகிய இருபால் துறவிகட்கும் சமணப் பள்ளிகள்
அமைக்கப்பட்டிருந்த செய்திகளைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
கூறுகின்றன. சமண முனிவர்கள் கருநாடகம் முழுவதும் பரவினார்கள்.
அப்பகுதியில் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் கங்கர்களின் ஆட்சி 
தோன்றுமுன்பே சமண சமயம் வேரூன்றிவிட்டது. இஃதன்றிச் சேர நாட்டிலும்,
கடற்கரையோரம் சமணர், பௌத்தர் ஆகிய இரு சமயத் துறவிகளும் தம்
சமயப் பணிகளைத் தொடங்கிவிட்டனர். இவர்கள் தங்கியிருந்த குகைகள் பல
திருவிதாங்கூர்ப் பகுதியில் காணப்படுகின்றன. 

     சமணமும் பௌத்தமும் மூண்டெழும் காட்டுத் தீயைப் போலத்
தமிழகத்தில் பரவியதைக் கண்ட பார்ப்பனரும் தம் வைதிக நெறியைத்
தமிழகத்தில் தழைத்தோங்கச் செய்ய வேண்டுமென்று முனைப்புற் றெழுந்தனர்.
தமிழகத்தை நாடி வந்த ஆரியர்களுள் சிலர் தம்மைப் ‘பிருகத்சரணர்’
அதாவது, பெரும் பயணர் என்று கூறிக்கொண்டனர். இன்றும் தமிழகத்துப்
பிராமணருள் பிருகத்சரணர்கள் பெரும்பகுதியினராகக் காணப்படுகின்றனர். 

     தமிழகம் நுழைந்து குடியேறிய ஆரிய மக்கள் காலம், இடம் ஆகிய
சூழ்நிலைகளில் சிக்குண்டு தமிழருடன் திருமணத் தொடர்புகள் கொண்டு
தாமும் தமிழராகவே மாறிவிட்டனர். தமிழகத்துப் பழக்கவழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் தாமும்
மேற்கொண்டனர். தமிழகத்தில் தமிழர் யார், ஆரியர் யார் என்று
பிரித்தறியலாகாவண்ணம் ஒரு சமுதாயம் உருவாயிற்று. காலப்போக்கில்
தமிழகத்து ஆரியர் தாம் பேசி வந்த சமஸ்கிருதத்தையே மறந்துவிட்டனர் ;
தமிழையே தம் தாய் மொழியாக ஏற்றுக்கொண்டனர். பிராமணருக்கு
நாளடைவில் ஏற்பட்ட ஏற்றத்தையும் செல்வாக்கையும் நோக்கித் தமிழருள்
சிலரும் தம்மையும் ஆரியர் என்றே கூறிப் பெருமை ஈட்டிக்கொண்டனர்.
ஆரியன் என்னும் சொல் ‘பெரியோன்’10, ‘ஆசாரியன்’11, ‘அறிவுடையோன்’12
என்னும் பொருளை ஏற்றது. ஆனால், திவாகரத்துக்குப் பிற்பட்டு எழுந்த
பிங்கலந்தை நிகண்டு13 மட்டும் ஆரியரை மிலேச்சர் என்று கூறுகின்றது.
அதற்குத் தக்க காரணம் இருக்கவேண்டும். அஃது ஆய்வுக்குரியதாகும். 

     தமிழரின் அயல் தொடர்பை ஆயும்போது கிறித்தவ ஆண்டு
தொடங்குவதற்கு முன்பு மூன்று நான்கு நூற்றாண்டுகளில் இப்பாரத நாடு
முழுவதிலும் அரசியல் நிலைமை எவ்வாறு அமைந்திருந்தது என்று ஒரு சிறிது
அறிந்துகொள்ளுதல் நலமாகும். வடக்கே கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மகதப்
பேரரசராக விளங்கிய நந்தர்கள் தமிழகத்தின்மேல் படையெடுத்ததாகச் சில
வரலாறுகள் கூறுகின்றன. 

     நந்தரை யடுத்து மௌரியக்குடி மன்னர்கள் மகதப் பேரரசைக் 
கைப்பற்றி ஆட்சிபுரியத் தொடங்கினர். அக்காலத்தில் கோசர்கள் தமிழ்
மன்னர்மேல் பகைமை பூண்டிருந்தனர். அவர்களுக்கு உடந்தையாக மோரியர்
தமிழகத்தின்மேல் படையெடுத்து வந்தனர். ஆனால், மோகூர் மன்னன்
பழையன் என்பவன் அவர்களை வெற்றியுடன் எதிர்த்து நின்று
புறமுதுகிட்டோடச் செய்தான். அகநானூற்றுள் மாமூலனார் என்ற பழந்தமிழ்ப்
புலவர் இச் செய்தியைத் தெரிவிக்கின்றார்.14 இவ் வகப்பாட்டுச்
சான்றுகளினின்றும், அசோகரின் கல்வெட்டுச் செய்திகளினின்றும் மோரிய
அரசு இக் காலத்திய சென்னைப்பட்டினம் வரையில் பரவியிருந்தது என
அறியலாம். மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பு வெற்றி பயக்கவில்லை.
அவர்கள் கலிங்கத்தை தாக்காமல் விட்டதற்குத் தென்னாட்டில் தோன்றிய 
கடும் எதிர்ப்புதான் காரணம் என்பதில் ஐயமின்று. தமிழகத்தில் மன்னர்களின்
கூட்டுறவு ஒன்று கி.மு.

     10. இரேவண சித்தர் அகராதி நிகண்டு. 11. திருவாசகம் 1-64. 
     12. திவாகரம்- 13. பிங்கலந்தை நிகண்டு - 797. 14. அகம். 251, 281.

3ஆம் நூற்றாண்டில் நடைபெற்று வந்ததாக ஹாதீகும்பாக் கல்வெட்டு ஒன்று
(கி.மு. 2ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கின்றது. மோரிய பரம்பரையினர்
ஆட்சியின் தொடக்கத்திலேயே இக்கூட்டுறவு அமைக்கப்பட்டிருந்தது போலும்.
மோரியரின் படையெடுப்பை இக்கூட்டுறவு கடுமையாய் எதிர்த்து நின்றது.
ஆனால், கோசருக்குத் துணையாக மோரியர் தமிழகத்தின்மேல் படையெடுத்து
வந்து மோகூர்ப் பழையனால் முறியடிக்கப்பட்டபோது இக் கூட்டுறவு
செயற்பட்டு வந்ததா என அறிய முடியவில்லை. 

     அசோகர் வடக்கே ஆண்ட காலத்திலேயே பௌத்தமும் ஆரியப்
பண்பாடுகளும் தமிழகத்தில் ஆங்காங்கு புகுந்து பரவத் தொடங்கின
வாகையால் ஆரிய தமிழ் மொழிகளுக்குள் ஏற்பட்ட கலப்பினால் பிராகிருதம்
என்ற புதுமொழி ஒன்று உருவாயிற்று. இப்போது திராவிட மொழிகள் 
வழங்கும் இடங்கள் யாவற்றிலும் பிராகிருத மொழி பரவி வந்தது. 

     பண்டைய தமிழகத்தில் சங்க காலம் நடைபெற்றுக் கொண்டிருந்த 
போது தமிழகத்தின் வடக்கிலும், வடமேற்கிலும் சாதவாகனர் செழிப்புடன்
விளங்கினர். இவர்கள் அரசியல் அமைப்பிலும் நிருவாகத்திலும் சிறந்து
விளங்கியவர்கள். இவர்களுடன் வாணிகம் செய்யவந்த சாகர்களும்
கிரேக்கர்களும் இவர்களுடனே தங்கித் தாமும் இவர்களுடைய பழக்க
வழக்கங்களை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...