Monday 9 February 2015

பண்டைத் தமிழரின் வாழ்க்கை


 பண்டைத் தமிழரின் வாழ்க்கை

     தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம். இக் காலத்தில்
தமிழரின் நாகரிகம் முழு மலர்ச்சியுற்றிருந்தது. பாண்டியன், சோழன், சேரன்
என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம்
மதுரை; சோழரின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம். புகார் அல்லது பூம்புகார்
என்றும் இந் நகரத்துக்குப் பெயர்கள் உண்டு. சேரனின் தலைநகரம் வஞ்சி
என்பது. தமிழ்மொழி வழங்கி வந்ததால் நாட்டுக்குத் தமிழகம் என்றும்,
மக்களுக்குத் தமிழர் என்றும் பெயர்கள் எய்தின. ஆகவே, நாட்டுக்கும்,
மக்களுக்கும் அவர்கள் பேசிய மொழிக்குமிடையே நெருங்கிய ஒரு
தொடர்பைக் காண்கின்றோம். தமிழ்மக்கள் தாம் பேசிய மொழியுடன்
இணைந்து வாழ்ந்தனர். தமிழர் வேறு, தமிழ் வேறு என்று பிரிக்க முடியாத
அளவு அம் மொழியானது தமிழர் வாழ்வில் இடங்கொண்டது. தமிழரின்
வாழ்வு, தமிழர் பேசிய மொழி, தமிழர் வாழ்ந்த நிலம் ஆகிய இம்
மூன்றுக்கும் இயல்பான, நெருங்கிய தொடர்பு ஒன்று உண்டு என்ற உண்மை
தமிழரின் நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாக அமைந்துள்ளது. இத்
தத்துவத்தை விளக்குவனவே சங்க இலக்கியங்கள். இவ் விலக்கியங்களின்
துணையின்றித் தமிழரின் பண்டைய வரலாற்றையும் பண்பாட்டையும்
அறிந்துகொள்ள முடியாது. தமிழ் நிலத்தின் உயிர்நாடி தமிழ் மக்கள்; தமிழ்
மக்களின் உயிர்நாடி தமிழ் மொழியாகும். தமிழைப் போற்றி வளர்ப்பதும்,
தமிழ்ப் புலவரைப் பாராட்டிப் புரந்து வருவதுமே தமிழ் மன்னரின்
முதற்கடமையாக இருந்து வந்தது. கோடி கொடுத்தும் புலவர் ஒருவரின்
பாட்டைப் பெறுவதற்கு மன்னர்கள் ஆவலாக இருந்தனர். தமிழ் மன்னன்
ஒருவன் தனக்கு இறவாமை அளிக்கக்கூடிய கனி ஒன்றைத் தான் உண்டு
பயனடையாமல் அதைத் தமிழ்ப் புலவர் ஒருவருக்கு அளித்துத் தனக்கும்,
அவருக்கும், தமிழ்மொழிக்கும் இறவாத புகழைப் பெற்றுக் கொடுத்தான்.
சங்ககால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள்,
மாளிகைகள், அங்காடிகள், கோயில்கள், துறைமுகங்கள், பந்தர்கள்,
அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும் 
இப்போது மறைந்துவிட்டன. ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய

பாடல்கள் பல இப்போதும் எஞ்சி நிற்கின்றன. எட்டுத்தொகையும்,
பத்துப்பாட்டும், பதினெண் கீழ்க்கணக்கும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
பழந்தமிழரின் சால்பை விளக்கிக் காட்டுகின்றன. 

     தாம் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை
முறையும், பண்பாடும் அமையும் என்பது பண்டைய தமிழரின் சிறந்ததொரு
கொள்கையாகும். அஃதுடன் ‘காலம்’ என்ற தத்துவமும் மக்கள் வாழ்க்கையில்
பேரிடங்கொண்டது. ஆகவே, மக்கள் வாழ்ந்த இடமும், காலமும்,
அவர்களுக்குத் தேவையான முதற்பொருள் எனக் கொள்ளப் பட்டன.1
ஓரறிவுடைய புல் முதல் ஆறறிவுடைய மக்கள் ஈறாகிய உயிர்ப்பொருள்களும்
ஏனைய உயிரில்லாத பொருள்களும் முதற்பொருள்களின் சார்பாக நின்று
கருக்கொண்டு உலகின்மேல் தோற்றுகின்றன ஆகையால் அவற்றுக்குக்
கருப்பொருள்2 என்று பெயர் வழங்கிற்று. மக்கள் வாழ்க்கையின் 
செய்திகளைப் புலப்படுத்துவது உரிப்பொருள்3 எனப் பெயர் பெற்றது. 

     முதற்பொருள் இரண்டனுள் நிலமானது நான்கு வகையாகப்
பிரிக்கப்பட்டது: காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை என்றும், 
மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், வயலும் வயலைச்
சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல்
என்றும் பெயர் பெற்றன. முல்லைக்குக் கடவுள் மாயோன் (திருமால்),
குறிஞ்சிக்குக் கடவுள் சேயோன் (முருகன்), மருதத்தின் கடவுள் வேந்தன்
(இந்திரன்), நெய்தலுக்குக் கடவுள் வருணன். இந் நான்கு பிரிவுகளல்லாமல்
வேறொரு நிலப்பிரிவும் உண்டு. அதற்குப் ‘பாலை’ என்று பெயர். ‘முல்லையும்
குறிஞ்சியும் முறைமையின் திரிந்து, நல் இயல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என்று பாலை நிலம்
விளக்கப்படுகின்றது.4 அதாவது கோடை வெய்யிலில் மரஞ்செடிகள் உலர்ந்து,
நீர்நிலைகள் வறண்டு காணப்படும் இடங்கட்குப் பாலை என்று பெயர். இந்
நிலத்துக்குத் தெய்வம் கொற்றவை. இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளுக்குத்
‘திணைகள்’ என்று பெயர். 

     1. தொல். பொருள். அகத். 4
     2. தொல். பொருள். அகத். 18 
     3. தொல். பொருள். அகத். 14.
     4. சிலப். 11 : 64-66
திணை’ என்னும் சொல்லுக்குக் ‘குடி’5 என்றும் ஒரு பொருள் உண்டு. குடிகள்
வாழும் நிலமும் ‘திணை’ எனப்பட்டது. சொல்லிலக்கணத்தில் விளக்கப்படும்
திணைகள் வேறு. அவை உயர்திணை, அஃறிணை என்பன. பொருள்
இலக்கணத்தில் விளக்கப்படும் இவ்வைந்து திணைகளும் மக்கள் 
வாழ்க்கையைப் பற்றியவை. திணை என்னும் சொல் நிலத்தை மட்டுமன்றி
நிலத்தின் அமைப்பு, அங்கு வாழும் மக்கள் இயல்பு, அங்கு உயிர் வாழும்
விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் மரங்கள், உழவுப் பயிர் வகைகள்,
மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்கள் ஆகிய யாவற்றையும் குறித்து நிற்கும். 

     மொழிக்கு மட்டுமன்றி மக்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம்
வகுத்துக்கொண்ட பெருமை பழந்தமிழரைச் சாரும். வாழ்க்கைக்கு
ஒழுங்குமுறைகள் வகுத்துக் கொடுத்த இலக்கணத்துக்குப் பொருள் இலக்கணம்
என்று பெயர். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே திணைகள் வழக்கில்
இருந்துவந்தன. அவை தொல்காப்பியரால் நிறுவப்பெற்றவை அல்ல. எனவே,
பொருளிலக்கணமும் தொல்காப்பியத்துக்கு முன்பு இயற்றப் பட்டிருக்க
வேண்டும். ‘முதலெனப் படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பு என 
மொழிப இயல்பு உணர்ந்தோரே’ என்று தொல்காப்பியர் தமக்கு முன்பு
இலக்கணம் வகுத்திருந்த ஆசிரியர்களைச் சுட்டிக் காட்டுகின்றார். ஒரு
மொழியில் இலக்கணம் வகுக்கப்படு முன் இலக்கியம் வளர்ந்திருக்க வேண்டும்.
மொழியானது பல காலம் வளர்ந்து வந்த பிறகுதான் பொருள்களையும்
அவற்றைக் குறிக்கும் சொற்களையும் திட்டமாக வரையறுத்து உணரவேண்டிய
நெருக்கடி ஒன்று நேரும். அப்படி வரையறுக்கத் தவறினால் எண்ணங்களிலும்
பேச்சிலும் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும். இந்த இழிநிலையை ஒரு
மொழியானது எய்தாதவாறு அதற்கு இலக்கண வரம்பீடு செய்தல்
இன்றியமையாததாகும். அதைப் போலவே, மக்கள் வாழ்க்கைக்கு இலக்கண
விதிமுறைகள் வகுப்பதற்கு முன்னர் அவ் வாழ்க்கை நன்கு வளர்ச்சியும்
வளமும் பெற்றிருக்க வேண்டும். வளர்ச்சி பெற்று நிலைத்து வாழும்
சமூகத்துக்குத் தான் ஒழுங்கு விதிகள் தேவைப்படும். ஒழுக்கமுறைகளை
வகுத்து அவற்றின்படியே மக்கள் வாழ வேண்டுமென்று விதிப்பது 
இயற்கைக்கு முரணாகும். எனவே, தமிழில் பொருள் இலக்கணம் ஒன்று
தோன்றுவதற்கு முன்பே மக்கள் அதில் வகுத்த வாழ்க்கையை வாழ்ந்து
வந்தனர் என்பதில் ஐயமின்று. அவ் வாழ்க்கையை 

     5. புறம். 27

விளக்கிக் காட்டுமளவுக்குத் தமிழரிடையே இலக்கிய வளம் நிரம்பி இருக்க
வேண்டும்.

     நிலத்தைப் பாகுபாடு செய்ததைப் போலவே காலத்தையும் பாகுபாடு
செய்திருந்தனர். காலம், பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும்
இருவகையாகப் பிரிக்கப்பட்டது.

     ஓராண்டின் தட்ப வெப்ப மாறுபாடுகளைக் காட்டிய கார், கூதிர்,
முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய காலங்கள்
பெரும்பொழுதுகள். காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை
ஆகியவை சிறுபொழுதுகள். பெரும்பொழுதை ஆண்டு, திங்கள், கிழமை,
நாள், நாழிகை, நொடி எனவும் பகுத்திருந்தனர். 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைகளில்
வாழ்ந்த மக்கள் உழைத்துப் பொருளீட்டுவர்; காதலிப்பர்; மணப்பர்;
இல்லறத்தில் நின்று இன்பம் துய்ப்பர். இவ்வொழுக்கங்கள் யாவும் மக்களுக்கே
உரியன. எனவே, அவற்றுக்கு உரிப்பொருள் என்று பெயர். ஆணும்
பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதலித்து மணந்து இல்லறம் நடத்தி
வருவதை ‘அகம்’ என்றும், மக்கள் அரசியல் வாழ்விலும் போரிலும்
ஈடுபடுவதைப் ‘புறம்’ என்றும் பொருள் இலக்கணம் குறிப்பிடும். 

     உலக அமைப்பை முதல், கரு, உரி என மூன்றாக வகுத்து, உலகில்
வாழும் மக்களின் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பாகுபடுத்தி,
அதை இயற்கையுடன் இயைபுறுத்தியது பண்டைய தமிழரின் சிறந்ததொரு
பண்பாடாகும். 

     பழந்தமிழகத்தில் மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டி
வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின்
அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்தெய்தும் என்பது தமிழரின் கொள்கையாக
இருந்தது. இக் காரணத்தினாலேயே திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம்
என்னும் முப்பாலை மட்டும் பாடினார்; வீட்டைப்பற்றிப் பாடினாரில்லை.
அவருடைய காலத்திலேயே ஆரியரின் பழக்க வழக்கங்களும், புராணங்களும்,
தத்துவங்களும் தமிழகத்தில் குடி புகுந்து விட்டன. தருமம், அருத்தம், காமம்,
மோட்சம் என்னும் ஆரியரின் புருடார்த்தங்களைத் திருவள்ளுவர்
அறிந்திருப்பார். இருப்பினும் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையே
தமிழரின் பண்பாட்டுக்கு உடன்பாடாகக் கொண்டு, மரபு வழுவாது அவர்
திருக்குறள் என்னும் அறநூலை இயற்றினார். ‘இல்லற மல்லது நல்லற மன்று’
என்பது பிற்காலத்து எழுந்த கொன்றைவேந்தன் மொழியாகும். ஒருவனுடைய
உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத துணை அவன் மனைவியே ஆவாள்.
அவளுக்கு ‘வாழ்க்கைத் துணை’ என்னும் சிறப்பைக் கொடுக்கின்றார்
திருவள்ளுவர். 

     சங்க இலக்கியங்களுள் பெரும்பாலானவை அகப்பொருளையே
பேசுகின்றன. எட்டுத்தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகப்பொருள் சார்புடையவை. பல
வகையிலும் ஒத்த நலன்களையுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுங்காலத்துப்
பிறப்பது இன்பம். அதனை இன்னதென்று சொல்லால் விளக்க முடியாது; அவர்கள் அகத்தால், அதாவது உள்ளத்தால்தான் உணர முடியும். அத்தகைய
இன்பம் அகம் எனப்பட்டது. ஏனைய இன்பங்கள் யாவும் புறமாகும். அகத்தில்
காதல் மலர்கின்றது; புறத்தில் வீரம் சிறக்கின்றது. ஆண் பெண்
விருப்பத்தினால் அகத்திணை உண்டாகின்றது. மண்ணாசையாலும்,
பொன்னாசையாலும், பசியாலும் புறத்திணை உண்டாகின்றது. 

     மணப் பருவம் எய்திய காதலர்கள் தாமாகவே கூடியோ அன்றிப் 
பிறரால் கூட்டப்பெற்றோ கணவன் மனைவியாவர், காதலர்கள் தாமாகக் 
கூடும் கூட்டத்துக்குக் ‘களவு’ என்று பெயர். பிறர்க்கு உரித்தான ஒரு
பொருளை அவரறியாவாறு அவரிடமிருந்து கவர்ந்து கொள்ளுவது ‘களவு’
எனப்படும். பழந்தமிழர் ஊழின் பெருவலியில் நம்பிக்கை கொண்டவர்கள்.
ஆகவே, காதலர்கள் ஒன்றுகூடுவதற்கே அவர்களை ஊழ் கூட்டுவிக்க
வேண்டும் என்று அவர்கள் கருதினர். காதலர் இருவர் ஒருவரையொருவர்
ஒருமுறை கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்து விடுவராயின், மீண்டும் அவர்கள்
வேறு யாரையும் காதலிப்பதில்லை. அவர்களுடைய திருமணம் எவ்விதமான
இடையூறுமின்றி நடைபெறுவதற்குக் காதலனின் தோழனும், காதலியின்
தோழியும் துணை நிற்பர். அகப்பொருள் இலக்கணத்தில் காதலனைத் 
தலைவன் என்றும், காதலியைத் தலைவி என்றும் அழைப்பது மரபாகும். 

     தம் காதல் முற்றுப்பெறுவதற்கு இடையூறுகள் நேருமாயின் தலைவனும்
தலைவியும் சேர்ந்து ஊரைவிட்டே வெளியேறிவிடுவதுமுண்டு.6 
அவர்களுடைய காதலின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டி அவர்கள் 
பெற்றோர்கள் அவர்கட்குத் திருமணம் முடித்து வைப்பர். களவு 
ஒழுக்கமானது இரண்டு மாத காலத்துக்குமேல் நீடிக்கக்கூடாது என்பது மரபு.
‘இந்த உலகத்தையே நான் உனக்கு ஈடாகப் பெற்றாலும் நான் உன்னைக்
கைவிடேன்’என்று தலைவன் தலைவிக்கு உறுதி கூறுவான். அவள்
வேப்பங்காயைக் கொடுத்தாலும் அதை வெல்லக்கட்டியென மகிழ்ந்துண்பான்
அவன்.8 தலைவன், ‘உன் கூந்தலைப் போல நறுமணமுள்ள மலர் ஒன்றை
உலகிலேயே நான் கண்டதில்லை’ என்று தன் காதலியின் கூந்தலைப் 
பாராட்டி இன்புறுவான்.9 

     6. பாலைக் கலி, 8. 
     7. குறுந். 300
     8. குறுந். 196.
     9. குறுந். 2
அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப் படுகின்றது.
தலைவன் தலைவியர் இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு
உடன்படுவர்.10 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.11 தீய கோள்கள்
இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும்.
விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல்
பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி
வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் 
முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும்
அகன்ற வாயுடைய கலத்தில் பெய்து கொடுப்பர். குழந்தைகளைப் 
பெற்றெடுத்த மங்கல மகளிர் நால்வர் கூடி அத் தண்ணீரை வாங்கி, அதில்
பூவிதழ்களையும், நெல் மணிகளையும் சொரிந்து அத் தண்ணீரினால்
மணமகளை நீராட்டுவார்கள். இச் சடங்குக்கு ‘வதுவை நன்மணம்’ என்று
பெயர். அப்போது அப்பெண்டிர், ‘இவள் கற்பு நெறியினின்றும் வழுவாமல்,
தன்னைக் கொண்ட கணவனை விரும்பிப் பேணும் விருப்பமுள்ள
துணைவியாவாளாக’ என அம் மணமகளுக்கு வாழ்த்துக் கூறுவர். மணமகளின்
பெற்றோர் ‘பெரிய ஓர் இல்லத்துக் கிழத்தியாக ஆவாய்’ என்று வாழ்த்தி
அவளை மணமகனுக்குக் கொடுப்பர். 

     உளுத்தம் பருப்புடன் கலந்த அரிசிப் பொங்கல் மண விழாவுக்கு
வந்தவர்கட்கு இடையறாது வழங்கப்பெறும்.12 இறைச்சியும் நெய்யும் கூட்டி
ஆக்கிய வெண்சோற்றையும் வழங்குவதுண்டு. திருமண வினைகள்
தொடங்குமுன்பு கடவுள் வழிபாடு நடைபெறும். மணமுழவு முழங்கும்.
வெண்மையான நூலில் வாகையிலைகளையும், அறுகம்புற் கிழங்குகளையும்
கோத்த மாலையை மணமகள் அணிந்து கொள்ளுவாள். மணமகன்
மணமகளுக்குத் தாலி கட்டியதாகச் சங்கத் தமிழில் சான்று ஏதும் 
கிட்டவில்லை. ‘ஈகையரிய இழையணி மகளிரொடு’ - அதாவது பிறர்க்குக்
கொடுத்தற்கரிய இழை-என்று புறப்பாடல் ஒன்றில் குறிப்புக் காணப்படுகின்றது.
ஆனால், அது திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தென்பதற்குச்
சான்றில்லை. ஐம்படைத் தாலியையும் புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக்
காப்பணியாக அணிவிக்கும் வழக்கம் அக் காலத்து உண்டு. ஆனால்,
திருமணத்தின் போது மங்கலநாண் பூட்டும் வழக்கம் பழந்தமிழரிடையே
இல்லை போலும். அவ் வழக்கம் இருந்திருப்பின் 

     10. தொல். பொருள். கற்பு. 1
     11. அகம். 86, 136 
     12. அகம். 86

எல்லாத் திருமணச் சடங்குகளையும் குறிப்பிடும்போது தாலி கட்டுவதென்னும்
தலையாய சடங்கைக் குறிப்பிடாமல் இரார். ஆரியர் பண்பாடும் பழக்க
வழக்கங்களும் பெருகிவந்த காலத்து எழுந்த நூலான சிலப்பதிகாரத்திலும் 
தாலி கட்டும் சடங்கைக் குறிப்பிடவில்லை. ஆனால், தமக்குத் திருமணம்
ஆகிவிட்டதைத் தெரிவிப்பதற்காக அக்காலத்துப் பெண்கள் மங்கல அணி
ஒன்றை அணிந்திருக்க வேண்டுமென்றும், திருமண நாளன்று அம் மங்கல
அணியை ஊர்வலமாகக் கொண்டுவரும் வழக்கம் இருந்தது என்றும்
அறிகின்றோம்.13 இம் மங்கல அணியையே மேலே எடுத்துக் காட்டிய
புறப்பாட்டுக் குறிப்பிடுகிறது போலும்.14 ‘மங்கல அணி’ என்று வரும் வேறு
இடங்களில் அடியார்க்கு நல்லார் அதற்கு ‘இயற்கையழகு’ என்றே உரை
கண்டுள்ளார்.15 எனவே, பழந்தமிழர் மாங்கலிய நாண் பூட்டித் திருமணம்
முடித்தனர் என்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. ஆண்டாள் நாச்சியார்
கண்ணன் தம்மை மணந்ததாகக் கண்ட கனவைத் தம் தோழியினிடம்
கூறும்போது திருமணச் சடங்குகள் அத்தனையும் கூறியவிடத்துத் தமக்குக்
கண்ணன் தாலி கட்டியதாகக் கூறவில்லை. ‘மைத்துனன் நம்பி மதுசூதனன்
வந்தென் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்’ என்று மட்டுந்தான்
தெரிவிக்கின்றார். கந்தபுராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களில்
குறிப்பிடப்படும் திருமணங்களிலும் மணமகன் மணமகளுக்குத் தாலி
கட்டியதாகத் தெரியவில்லை. சீவகசிந்தாமணியில் அரசியர் அணிந்திருந்த
‘நாணுள்ளிட்டுச் சுடர்வீச நன்மாணிக்க நகுதாலி’யும் திருமணத்தின்போது
கட்டப்பட்டதென்று கொள்ளுவதற்குச் சான்றில்லை.16 எனவே,
திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் 
பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படவில்லை என்று ஊகிக்க 
வேண்டியுள்ளது. இவ் வழக்கத்தைத் தெரிவிக்கும் முதல் கல்வெட்டு கி.பி. 958
ஆம் ஆண்டுக்குரியதாகும்.17 

     திருமண நாளன்று இரவே மணமக்கள் மணவறையில் கூட்டப் 
பெறுவர்.18 அங்கு மணமகள் கசங்காத புத்தாடையால் தன் உடல் முழுவதும்
போர்த்துக் கொண்டிருப்பாள். சங்க காலத்துத் திருமண விழாவைப்பற்றிக்
கூறும் அகப்பாட்டுகள் இரண்டிலும் புரோகிதன் ஒருவன் இடையிலிருந்து
மணவினைகள் புரிந்ததாகச் செய்திகள் இல. ஆனால், கோவலன் கண்ணகியை
மணந்தபோது மாமுது பார்ப்பான் மறைவழி காட்டியதாகவும் 

     13. சிலப். 1 : 47 
     14. புறம். 127.
     15. சிலப். 4 : 50. 
     16. சீவக.3697
     17. 5.1. XIII No.144
     18. அகம். 136

மணமக்கள் தீ வலம் செய்ததாகவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். சங்க
காலம் முடிவுற்றுக் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள் திருமணங்களில் பார்ப்பான்
புரோகிதம் செய்யும் வழக்கம் மக்களிடையே பரவிவிட்டதென இதனால்
அறிகின்றோம். 

     பெண்ணின் கற்பைப் போற்றி வந்தனர் பழந்தமிழர். கற்புடைய
மனைவியைத் தவிர்த்து ஒருவன் பெறும்பேறு வேறு ஒன்றும் இல்லை என்று
அவர்கள் கருதினர். ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள-கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்?’19 என்றும், ‘புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை
இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை’20 என்றும் ‘தெய்வம் தொழாஅள்
கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’21 என்றும்
பெண்ணின் கற்புத் திறத்தைப் பாராட்டுகின்றார். கற்பு என்னும் ஒழுக்கம்
ஆண்களுக்கும் உரிய பண்பாகவே அந் நாளில் கருதப்பட்டது. நான் ‘இப்
போரில் வெற்றி பெறேனாயின் என் மனைவியை விட்டுப் பிரிந்த பழியைப்
பெறுவேனாவேன்’22 என்று சங்ககாலத்துத் தமிழன் ஒருவன்
சூளுரைக்கின்றான். எனினும் பழந்தமிழரின் சமுதாயத்தில் ஆண்களின்
கற்புநிலையை மன்னனோ, அறமோ, புலவர்களோ வற்புறுத்தியதாகத்
தெரியவில்லை. திருமணம் செய்துகொண்ட ஆடவன் தன் மனைவியை 
விட்டுப் பிரிந்து பரத்தையரைத் தழுவிக் காலங்கழிப்பதும், அவனுடைய
மனைவியானவள் அவனுடைய பிரிவை நினைந்து வருந்தி நைதலும்
வழக்கமாகிவிட்டிருந்தது. 

     பேகன் என்ற மன்னன் தன் மனைவி கண்ணகியைப் பல நாள்
துறந்திருந்தான்.23 மன்னரைப் போலவே பொதுமக்களும் பரத்தையர் நட்பில்
திளைத்து வருவதுண்டு. அருவருக்கத்தக்க இத் தீய ஒழுக்கம் மருதத்திணை
மக்களின்பால் மட்டுந்தான் காணப்பட்டது. மதுரையில் எண்ணற்ற பரத்தையர்
வாழ்ந்திருந்தனர் என்னும் செய்தியை மருதக் கலி24 ஒன்று தெரிவிக்கின்றது.
அங்கு வாழ்ந்த பரத்தையரை ஓரூர் முழுவதிலுமே குடியேற்றலாம் என்று அக்
கலிப்பாட்டுக் கூறுகின்றது. பரத்தையரைத் தொல்காப்பியனார் 
‘காமக்கிழத்தியர்’ என்று குறிப்பிடுகின்றார்.25 இச் சொல்லுக்கு
நச்சினார்க்கினியர் ‘காமக்கிழத்தியராவர் கடனறியும் வாழ்க்கையுடையராகிக்
காமக்கிழமை பூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர்’ என்று விளக்கந்
தருகின்றார். 

    19. குறள். 54.
    20. குறள். 59. 
    21. குறள். 55. 
    22. புறம். 71 : 6. 
    23. புறம். 143, 147. 
    24. மருதக்கலி. 2. 
    25. தொல்.பொருள்: கற்பியல், 10

களவு ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு காமத்துப் பால் வகுத்த
திருவள்ளுவர் கணவன் பரத்தையரை விரும்பித் தன் மனைவியை விட்டுப்
பிரிவதும், மனைவியானவள் தன் கணவனுடைய ‘அடங்கா ஒழுக்கத்தை’க்
கண்டு மனம் புழுங்குவதும் ஆகிய அகத்துறைகட்கு இலக்கணம் கண்டிலர்.
திருக்குறளில் பரத்தையர் என்னும் சொல்லை அவர் ஆளுவதில்லை.
பொருட்பாலில் மட்டும் ஆடவரிடம் காணப்பட்ட சில குற்றங்குறைகளை
விலக்குமாறு விதிகள் வகுக்கும்போது ‘வரைவின் மகளிர்’ அதாவது,
‘பொருட்பெண்டிர்’ உறவு இழுக்குத் தரும் என்றும், ‘பொருட்பெண்டிர்
பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந் தழீஇ யற்று’26 என்றும்,
‘பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவின
வர்’27 என்றும் கூறுகின்றார். ஆகவே, பரத்தையர் ஒழுக்கம் சங்க காலத்தில்
வாழ்ந்த ஆடவரிடம் ஒரு கறையாகவே காணப்படுகின்றது. பரத்தையரிடம்
உறவு பூண்டு ஒழுகின தம் கணவனைப் பெண்கள் பொறுமையுடன்
வாழ்க்கையில் எற்றுக்கொண்டு அவனுடன் புலந்தும், பிறகு அவன் செய்த
பிழையை மறந்தும் வாழ்ந்து வந்தனர் என்று அறிகின்றோம். 

     கணவன் தன்னைப் பிரிந்து சென்றால் மனைவிக்கு ஊடல்
ஏற்படுவதுண்டு. ஒருவர் இவர்கள் வழக்கில் தலையிட்டாலொழிய அவ்வூடல்
எளிதில் தீருவதில்லை. தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி,
இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகியவர்கள்
அனைவருக்குமே இவ்வூடலைத் தீர்த்து வைக்கும் உரிமையுண்டு. கணவன்
மனைவியரிடையே அடிக்கடி ஊடல் ஏற்பட்டால்தான் வாழ்க்கையில் இன்பம்
ஊறும் என்றும், ஆனால் அந்த ஊடலை நீடிக்க விடக்கூடாதென்றும்
திருவள்ளுவர் அறிவுறுத்துகின்றார்.28 

     திருமணமான பிறகு கணவன் மேலும் கல்வி கற்பதற்கோ, பொருள்
தேடுவதற்கோ தன் மனைவியைவிட்டுப் பிரிய நேருவதுண்டு.29 கல்விக்காக
ஏற்படும் பிரிவு மூன்றாண்டுகட்கு மேல் நீடிக்கக்கூடாது என்பது மரபு.
மன்னனுடைய போர்ப்பணியை மேற்கொண்டோ, மன்னனுடைய கடமைகள்
வேறு எவற்றையேனும் ஏற்றோ, அன்றிப் பொருள் தேடவோ கணவன் தன்
மனைவியைவிட்டுப் பிரிய நேர்ந்தால், அப் பிரிவு ஓராண்டுக்கு 

     26. குறள், 913. 27. குறள், 914. 
     28. குறள், 1302 
     29. தொல். பொருள். அகத்திணை, 25.

மேல் நீடித்தலாகாது.30 பரத்தையர் உறவை மேற்கொண்டு தன் மனைவியைப்
பிரிந்து சென்றவனும் தன் மனைவிக்குப் பூப்புத் தோன்றி மூன்று நாள்
கழித்துப் பன்னிரண்டு நாள் வரையில் மீண்டும் வந்து தன் மனைவியைக் கூட
வேண்டும். ஆனால், கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து நீண்ட நாள்
மாதவியுடனே வாழ்ந்திருந்தான். சங்க காலத்திய கட்டுப்பாடு சிலப்பதிகாரக்
கதை நிகழ்ந்த காலத்தில் தளர்ந்து விட்டது போலும். மருதத்திணை 
ஒழுக்கமாக இருந்து வந்த இவ்விழுக்கானது பிற்காலத்திலும் தமிழர் 
வாழ்வுக்குச் சீர்கேட்டை விளைத்து வந்துள்ளது. 

     கல்வி கற்கவும், பொருளீட்டவும், மன்னனுக்காகத் தூது செல்லவும்
கணவன் பிரியும்போது மனைவி அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை.
பெண்கள் போர்ப் பாசறைகளில் தம் கணவனுடன் தங்கக்கூடாதென்றும் ஒரு
மரபு இருந்து வந்தது.31 

     தான் காதலித்த ஒரு பெண்ணை மணக்க வாய்க்காத ஆண் மகன் சில
சமயம் மடலேறுவதுண்டு. பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து 
அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவந்தீட்டிய கொடி
ஒன்றைத் தன் கையில் ஏந்திக்கொள்ளுவான். இந்த ஊர்தியைத் தெருத்
தெருவாக இழுத்துச் செல்லுவார்கள். பனங்கருக்கினால் அறுப்புண்ட அவன்
உடலில் குருதி வடியும். ஊராரும், பெண்ணின் பெற்றோரும் அவன் துயரைக்
கண்டு இரக்கங்கொண்டு அப் பெண்ணை அவனுக்கே மணமுடிப்பார்கள்.
பெண்கள் மடலேறுதலில்லை.32 ஆனால், பிற்காலத்தவரான
திருமங்கையாழ்வார் தலைவி ஒருத்தி பிரிவாற்றாமை மேலீட்டால் ‘காதல்
கைமிக்கு மடலூரத் துணிந்தாள்’ என்று பாடுகின்றார்.32அ 

     பண்டைய தமிழ் மக்கள் அளவற்ற இன்பத்துடன் இல்வாழ்வில்
ஈடுபட்டனர். அதற்குச் சான்றுகள் பல சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன.
தொழில் புரிவதை ஆடவர் தம் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரைத்
தம் உயிருக்கு நேராகக் கருதினர். சங்க காலப் புலவர்கள் இல்வாழ்க்கையைப்
பற்றித் தீட்டியுள்ள பல அழகிய சொல்லோவியங்கள் சங்க 

     30. தொல். பொருள். கற்பியல், 49. 
        தொல். பொருள். கற்பியல், 34. 
     32. தொல்.பொருள். அகத்திணை. 35 ; குறள், 1137. 
     32அ. திவ்யப், சிறிய திருமடல், பெரிய திருமடல்.

இலக்கியத்தில் மிளிர்கின்றன. கூடலூர் கிழார் தீட்டியளித்துள்ள ஓவியக்
காட்சியிது: புதிதாக மணஞ்செய்துகொண்டு தன் கணவன் வீடு சென்ற ஒரு
பெண், தன் தளிர் விரல்கள் சிவக்குமாறு, புளித்த கட்டித்தயிரைப் பிசைந்து,
கண்ணில் புகை கரிப்பதையும் பாராட்டாமல், அதற்குத் தாளிதம் செய்து,
துழவித் துழாவி அதனை இனிய குழம்பாக்கித் தன் கணவனுக்குப்
படைக்கின்றாள். தாய் வீட்டில் அடுதொழில் பயிலாத சிறு பெண்ணாதலால்
தயிர் தோய்ந்த விரல்களைக் கழுவத் தோன்றாதவளாய்த் தன் 
புடவையிலேயே துடைத்துக் கொள்ளுகின்றாள். உணவு மிகவும் சுவையாக
உள்ளதே என்று கணவன் அவளைப் பாராட்டிப் புகழ்கின்றான்.33 அவள்
முகமும் மலர்ந்தது. மற்றொரு காட்சி : இளம்பெண் ஒருத்தி தன் காதலனுடன்
அவனுடைய ஊருக்குச் சென்று தங்கிவிட்டுமீண்டும் தன் தாய் வீட்டுக்கு
வந்தாள். புகுந்த ஊரில் குடிநீர் இனிமையாக இராது. ஆகையால் 
அதை அப்பெண் எப்படி விரும்பிக் குடித்தாள் என்று அவள் தோழி
வினவுகின்றாள். அதற்கு அப் பெண், ‘தோழி! நீ கூறியபடி என் தலைவரது
ஊர்த் தண்ணீர் பிறர் குடிக்கத் தகாதது தான். அங்கு ஒரு சிறு குட்டையில்
தழைகள் உதிர்ந்து ஊறிக் கிடக்கின்றன. விலங்குகள் அத் தண்ணீரைக்
குடிக்கப்போய் அதைக் கலக்கிவிட்டன. எனினும், அஃது என்னவோ எனக்கு
இனிமையாகவே சுவைக்கின்றது. ஏன், இங்கு நம் தோட்டத்தின் மரங்களில்
பிழியும் தேனையும் பாலையும் கலந்து உண்ணும் போது காணும் சுவையைவிட
அக் குட்டைத் தண்ணீரே எனக்கு மிகவும் இனிமையாகச் சுவைக்கின்றது’
என்று புக்கவீட்டில் தான் காணும் சிறப்பை அவள் எடுத்துப் பெருமை
பாராட்டிக் கொள்ளுகின்றாள்.34 மற்றுமொரு காட்சி : ஒரு பெண்ணும்
அவளுடைய காதலனும் திருமணம் முடிந்து அவன் ஊரில் வாழ்கின்றார்கள்.
பெண்ணின் பெற்றோர்கள் நிறைந்த செல்வம் வாய்ந்தவர்கள். அவளுடைய
கணவன் வீடோ வறண்ட குடி. அவ் வீட்டில் தன் மகள் அவள் கணவனுடன்
இன்ப வாழ்க்கை வாழ்கின்றாள் எனக் கேட்ட தாய் ‘பாலையும் தேனையும்
கலந்த சோற்றைப் பொற்கலம் ஒன்றில் பெய்து செவிலித்தாய் அதை ஒரு
கையில் ஏந்திக் கொண்டு மற்றொரு கையில் பூச்சுற்றிய மெல்லிய கோலைக்
காட்டி மருட்டி இச் சோற்றை உண்ணுவாய் என்று வேண்டவும், யான்
உண்ணேன் என்று பந்தலின்கீழ் ஓடி ஒளிந்து விளையாட்டுக் காட்டுவாளே
என் மகள். அத்தகைய குறும்புக்காரப் பெண் 

     33. குறுந். 167. 
     34. ஐங்குறு. 203.

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்? கொண்ட கொழுநன் குடி
வறுமையுற்றதாகவும், தன்னைப் பெற்ற தன் தந்தை வீட்டு உணவை 
நினையாது இப்போது ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது உண்கிறாள். என்னே
அவள் பாண்பாடு ! என்று வியக்கின்றாள்.35 

     ஒரு பெண்ணிடம் அன்று காணப்பட்டதாகப் புலவர்கள் கற்பிக்கும்
நற்குணம் அக் காலத்து மகளிரின் சிறந்த பண்பாடுகளை
எடுத்துக்காட்டுகின்றது. 

     பெண்கள் பூப்புற்றிருக்கும் நாள்களில் வீட்டுப்பாண்டங்களைத்
தொடாமல் ஒதுங்கியே இருப்பார்கள். இவர்கள் ‘கலந்தொடா மகளிர்’
எனப்படுவர். 

     இல்லறத்தில் நின்று இல்வாழ்க்கையின் கடமைகளையாற்றும் உரிமை
கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்குத்தாம் உண்டு. தன் கணவன்
பொருளீட்டுவதற்காகவோ, அரசனுடைய கடமைகளை மேற்கொண்டோ
தன்னைப் பிரிந்திருக்கும்போதும், அவன் பரத்தையுடன் கூடி வாழும்போதும்
கற்புடைய பெண் ஒருத்தி, ‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர் கோடலும்’
ஆகிய இல்லற உரிமைகளை இழந்து நிற்பாள்.36 அப்போதெல்லாம் அவள்
தன்னை ஒப்பனை செய்துகொள்ளும் வழக்கமும் இல்லை. 

     இல்லற வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக அமைவது நன்மக்கட் பேறு
என்பது பண்டைய தமிழரின் கொள்கையாகும். மக்கட் செல்வத்தைப்
பாராட்டும் நூல்கள் பல உண்டு. திருக்குறளில், ‘பெறுமவற்றுள் யாமறிவ
தில்லை அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற’37 என்று மக்கட்பேறு சிறப்பிக்கப்
படுகின்றது. பலரோடு உண்ணும் பெருஞ்செல்வராக இருப்பினும் குறுகுறுவென
நடந்து, உணவைச் சிறு கையால் பிசைந்து மேலும் கீழும் சிதறிப் பெற்றோர்
அறிவை இன்பத்தால் மயக்கும் மக்களைப் பெறாதார்க்கு உலகில் பயன்படும்
பொருள் ஒன்றும் இல்லை என்று புறப்பாட்டு ஒன்று38 மக்கட்பேற்று
இன்பத்தைப் பரவுகின்றது. குழந்தையைப் பெறுவது தன் கடன் என்றும், அக்
குழந்தைக்குக் கல்வி பயிற்றியும், அறிஞர்களின் அவையில் முன்னணியில்
அவன் 

     35. நற்றி.110.
     36. சிலப். 16 : 71-73
     37. குறள், 61. 
     38. புறம். 188

நிறுத்தப் பெறும் தகுதியைக் கொடுத்தும், அவனுக்குச் சான்றோன் என்ற
பாராட்டுக் கிடைக்கச் செய்வதும் தந்தையின் கடன் என்றும் பெண்கள்
எண்ணினர்.39 

     கணவனை இழந்த பெண் அக் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம்
காணப்பட்டது.40 கைம்மை நோன்பு நோற்கும் வழக்கமும் பெண்கள்
மேற்கொண்டிருந்தனர். கைம்பெண்கள் நெய்யுண்பதில்லை; தண்ணீர்ச்
சோற்றைப் பிழிந்து எடுத்துக் கொண்டு, அதனுடன், அரைத்த எள்ளையும்
புளியையுங்கூட்டி வெந்த வேளைக்கீரையுடன் அவர்கள் உண்ணுவர்.
கைம்பெண்கள் பாய்மேல் படுப்பதில்லை; வெறுந்தரையின்மேல்தான் படுத்துத்
தூங்கினர். இவர்கள் தலையை மழித்துக்கொள்ளும் வழக்கமும் உண்டு.
தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியரும் இக்கைம்மை நோன்பை 
மேற்கொண்டனர். இப்போது பெரும்பாலும் கைம்மைநோன்பு நோற்கும்
வழக்கம் பிராமணக் கைம்பெண்களிடமே காணப்படுகின்றது. வேறு குலத்தைச்
சார்ந்தவர்களும் அண்மைக் காலம் வரையில் தென்னார்க்காடு, தஞ்சாவூர்
போன்ற சில மாவட்டங்களில் தலைமழித்து முக்காடிட்டுக் கைம்மைக் கோலங்
கொண்டதுண்டு. இப்போது பிராமணக் குலத்துக் கைம்பெண்களும்
தலைமழித்துக் கொள்ளுவதையும், வெள்ளாடை யணிவதையும், முக்காடிட்டுக்
கொள்ளுவதையும் தவிர்த்து வருகின்றனர். மங்கல நாணும், நெற்றிப் 
பொட்டும், மஞ்சள் பூச்சும், மலர் சூட்டுந் தவிர, ஏனைய ஒப்பனைகள்
அனைத்தையும் அவர்கள் கைவிடாமல் ஏற்றுக்கொண்டிருப்பதை இந் நாளில்
காணலாம். 

     பழந்தமிழகத்தில் இல்லத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மேற்கொள்ள
வேண்டிய கடமைகள் இன்னின்னவென வகுக்கப்பட்டிருந்தன.41 
‘தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்’ ஆகியவர்களுக்கும் ஒருவன் தன்
வருமானத்தைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். ஒரு பகுதியை தனக்கும் தன்
குடும்பத்துக்கும் நிறுத்திக்கொண்டு, மற்றொரு பகுதியை அரசாங்கக்
கடமைகளுக்குச் செலுத்திவிடவேண்டும். தம் வீட்டில் தங்கி, அதாவது பிறரை
நாடிப் பிழைக்காமல், தம் வருமானத்தைப் பிரித்தளித்து வாழ்வதே இன்ப
வாழ்க்கையாகும் என்பது தமிழரின் மரபாகும்.42 ஆடவரின் சிறந்த 
கடமை, தொழில் புரிந்து பொருள் ஈட்டுவதாம். தன் மனைவியை விட்டுப்
பிரிந்து சென்றிருந்தும் பொருள் ஈட்டுவதைச் சீரிய கடமையாகக் 

     39. புறம். 312. 
     40. புறம். 246.
     41. குறள், 43.
     42. குறள். 1107.

கொண்டிருந்தனர். பொருளைக் கொண்டுதான் ஏனைய அறங்களைச் செய்ய
முடியும் என்று அவர்கள் உறுதியாக எண்ணினர்.43 இரு யானைகள்
ஒன்றோடொன்று மோதிக் கொண்டு போரிடுவதை ஒரு குன்றின் மேலேறி
அச்சமின்றிக் காணலாம் அன்றோ? அதைப்போலக் கையில் பொருளை
வைத்துக் கொண்டு ஒரு தொழிலைப் புரிபவன் எந்த இடையூற்றையும்
பொருட்படுத்த வேண்டியதில்லை.

     இல்லற வாழ்வில் அமர்ந்து வருவிருந்து ஓம்புதல் பண்டைத் தமிழரின்
தனிப்பட்ட பண்பாடாகும்.44 அவர்கள் அமிழ்தம் கிடைத்தாலும் அதைப்
பகிர்ந்து உண்பர்; மதுவையும் விருந்தினருடன் கூடி உவந்து அருந்துவர்.45
உணவு 
     அரிசிச் சோற்றையே பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக்
கொண்டனர். அவர்கள் புழுங்கலரிசியையே உண்பது வழக்கம்.46 அரிசியை
உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டியே உலையிலிடுவார்கள்.47 அவர்கள்
வரகையும் சாமையையும் சமைத்து உண்பதுண்டு.48 தமிழகத்தில்
பல்வகையான நெல் விளைந்தது. சோற்றோடு காய்கறி வகைகளையும் அட்டு
உண்பவர். காய்கறிக்குக் கடுகு தாளிப்பார்கள்.49 மிளகும் புளியும் உப்பும்
உணவில் சேரும்.50 மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப்
புளிக்கவைத்து அதைப் புளியாகப் பயன்படுத்துவது முண்டு. இவையன்றிக்
களாப்பழப் புளி, துடரிப்புளி, நாவற்பழப்புளி ஆகியவும் பயன்படுவதுண்டு.51
கொம்மட்டி மாதுளங்காயை அரிந்து, அதனுடன் மிளகின் பொடியைக் கலந்து
கறிவேப்பிலை கூட்டிப் பசு வெண்ணெயில் அதைப் பொரிப்பார்கள்.52
வடுமாங்காய் ஊறுகாய் அக் காலத்திலேயே உண்டு.53 பலாப்பழம், இளநீர்,
வாழைப்பழம், நுங்கு, சேம்பிலைக்கறி, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு
ஆகியவற்றையும் பண்டைத் தமிழர் உண்டனர்.

     சோற்றுக்கான அரிசி முல்லைப்பூப்போல வெண்மையாகவும்
மென்மையாகவும் இருக்கும். ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ

     43. அகம். 33.
     44. புறம். 182.
     45. புறம். 234, 235
     46. சிறுபாண். 193-4
     47. அகம். 394; புறம். 399
     48. புறம். 143.
     49. புறம். 127, 250.
     50. குறுந். 167
     51. புறம். 239; அகம். 37
     52. பெரும்பாண். 305-310
     53. பெரும்பாண். 108, 110.

முரிவோ காணப்படாது. சோறு ஒன்றோடொன்று இழையாமல் பதமாக
வெந்திருக்கும். பழஞ்சோற்றையும் மக்கள் உண்பதுண்டு.54 அரிசி,
கொள்ளுப்பருப்பு, பயற்றம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் கூட்டிக் கஞ்சி
காய்ச்சிக் குடிப்பார்கள்.55 புளிக்க வைத்த மாவைக் கரைத்துப் புளிங்கூழ்
ஆக்குவார்கள்.56 பல விதமான பணியாரங்கள் செய்யப்பட்டன. வேடர்கள்
விரும்பியுண்ட உணவு புளிச்சோறு.57 

     பழந்தமிழர் புளியங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை ஊறவைத்த
காடியைப் பெரிதும் விரும்பினர்.58 பாலைத் தோய்த்து வெண்ணெய் திரட்டும்
வழக்கம் அந் நாளிலேயே இருந்து வந்தது. வெண்ணெயைப் பதமாகக் 
காய்ச்சி நெய் எடுத்துச் சோற்றில் வார்த்து உண்பார்கள். 

     பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் பரவியிருந்தது.59
பார்ப்பனரும் ஊன் உண்டதற்குச் சான்றுகள் உண்டு.60 வெள்ளாடு,
செம்மறியாடு, மான், முயல், ஆமா, மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி,
காட்டுக்கோழி, காடை, உடும்பு முதலியவற்றின் இறைச்சியைத் தனியாகவோ,
பாலும் அரிசியுங் கூட்டியோ சமைப்பார்கள். ஊன் சோறு என்பது இப்போது
புலவு என்று வழங்குகிறது. அது பழங்காலத் தமிழரின் உணவாக இருந்து 
பிறகு இடையில் சில காலம் வழக்கற்றுப் போயிற்று. முஸ்லிம்கள் நாட்டில்
குடியமர்ந்த பிறகு அது மீண்டும் வழக்கத்துக்கு வந்துள்ளது. ஊனை நெய்யில்
பொரிப்பதுண்டு.61 புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிங்கறி
சமைப்பதுண்டு.62 நெல்லை இடித்து ஆண்பன்றிக்குத் தீனியாகக் கொடுத்து
அதைக் கொழுக்க வைப்பார்கள். அதைப் பெண்பன்றியுடன் சேரவிடாமல்
தனியாகக் குழிகளில் விட்டு வளர்த்துப் பிறகு அதைக் கொன்று அதன்
ஊனைச் சமைத்துத் தின்பர்.63 இக் காலத்து மக்களைப் போலவே
பழந்தமிழரும் ஊனை உப்புக்கண்டம் போடுவதுண்டு.64 அவர்கள் ஊன்
துண்டங்களை இரும்புக் கம்பிகளில் கோத்து நெருப்பில் வாட்டியுண்பார்கள்.65 

     கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக்
காணப்பட்டது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், 

     54. புறம். 399. 
     55. அகம். 37.
     56. புறம். 399. 
     57. பொருநர். 107-8.
     58. பெரும்பாண். 56-7. 
     59. புறம். 14.
     60. புறம். 111. 
     61. குறுந். 39.
     62. புறம். 119. 
     63. பெரும்பாண். 34-35
     64. பெரும்பாண். 100. 
     65. பொருநர். 105.

விறலியர் அனைவருமே மதுவுண்டு களித்தனர். இயற்கையாகக் கிடைத்த
பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த
சோற்றுக்காடி முதலியவற்றைக் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள்
கப்பலில் கொண்டுவந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர்.66
தேறலின் சுவையையும், அது கொடுக்கும் வெறியையும் தூண்டுவதற்காக மது
வகைகளைக் கண்ணாடிக் குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி,
நெடுநாள் மண்ணில் புதைத்து வைப்பர்.67 அத்தகைய மது வகைகளின் வெறி
மிகவும் கடுமையாக இருக்கும். அக் கடுமையைப் பாம்பின் கடிக்கும், தேள்
கொட்டுக்கும்68 புலவர்கள் ஒப்பிட்டுள்ளனர். கள்ளுக்கு இன்சுவையும்
நறுமணமும் ஊட்டுவதுண்டு.69 கள்ளுண்டவர்கள் புளிச் சுவையை விரும்பிக்
களாப்பழம், துடரிப்பழம் (ஒருவகை இலந்தைக் கனி - (Zizy Phus Rugosa),
நாவற்பழம் முதலிய பழங்களைப் பறித்துத் தின்பர்.70 கள்ளைப் பனைமரத்துப்
பன்னாடையால் வடிகட்டுவர்.71 யவனர் இரட்டைப்பிடிச் சாடிகளில்
மரக்கலவழிக் கொணர்ந்த மதுவைத் தமிழர் உண்டுவந்ததற்கான சான்றுகள்
அரிக்கமேட்டுப் புதைகுழிகளில் கிடைத்துள்ளன. சங்ககாலத்தின் இறுதியில்
தமிழ் மக்களிடையே குடிப்பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது.
காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற பெரிய நகரங்களில் வாழ்ந்திருந்த
குடிமக்கள் இத் தீய பழக்கத்தில் மூழ்கிக் கிடந்தனர். வரையற்ற சிற்றின்பமும்,
கட்குடியும் ஒரு நாட்டின் மக்களை இழிந்த நிலைக்கு ஈர்த்துவிடும் என்பது
வரலாறு காட்டும் உண்மையாகும். தமிழரிடையே தம் காலத்திலேயே இத் தீய
பழக்கம் வேரூன்றி வளர்ந்து விட்டதைக் கண்டு திருவள்ளுவர் பெரிதும்
கவன்றார் போலும். குடிப்பழக்கத்தை வன்மையாகக் கடிந்து இயற்றிய
குறட்பாக்களைத் திருக்குறளில் காணலாம். அவர் கள்ளை நஞ்சு என்றே
கூறுகின்றார். ஒழுக்கத்துக்கு முரணான சிற்றின்ப விழைவும், கட்குடியும்
எத்துணைத் தீய பழக்கங்கள் என்பதைக் காட்டவும், இவ் விரண்டும் தம்
காலத்துத் தமிழ் மக்களைப் பெரிதும் ஈர்த்துவிட்டதைக் கடியவுமே வள்ளுவர்
‘வரைவின் மகளிர்’, ‘கள்ளுண்ணாமை’ என்னும் ஈரதிகாரங்களைத்
திருக்குறளில் அடுத்தடுத்து வைத்திருக்கின்றார்.
உடை

     பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள்
பூவையும், தழையையும் கோத்து ஆடையாக

     66. புறம். 56 : 18; மலைபடு. 522.
     67. புறம். 392: 16.; அகம். 348.
     68. சிறுபாண். 237.
     69. பொருநர். 157.
     70. புறம். 170.
     71. அகம். 216.

அணிவது வழக்கம்.72 அவர்கள் கம்பளி ஆடைகளையும் அணிவதுண்டு. நகர
மக்கள் பஞ்சாலும், பட்டாலும், ஒருவகை மலையெலி மயிராலும், வேறு சிறு
விலங்குகளின் மயிராலும் ஆடைகள் நெய்தார்கள்.73 அடியார்க்கு நல்லார் தம்
சிலப்பதிகார உரையில் முப்பத்தாறு ஆடை வகைகளைக் குறிப்பிடுகின்றார்.74
துணிகள் மிகமிக நுண்ணிய நூல்களினால் நெய்யப்பட்டன. அவற்றுள்
தனித்தனி இழைகள் கண்ணுக்குப் புலப்படா.75 புகையைப் போலவும்,
பாலாவியைப் போலவும், பாம்பின் தோலைப் போலவும், மூங்கிலின் உரியைப்
போலவும் துணிகள் நெய்யப் பெற்றன.76 ஆடைகட்குப் பூவேலைகள்
செய்வதுண்டு.77 பட்டுப் புடவைகளின் முன்தானைகளில் குஞ்சம்
கட்டப்பட்டது.78 சில பூந்துகில் வகைகள் மிகவும் வழுவழுப்பாக இருந்த
காரணத்தால் வழுக்கி வழுக்கிச் சரியுமாம்.79 துணிகளுக்கு நறுமணம்
ஊட்டுவதுண்டு.80 

     உயர்குடிப் பிறந்த ஆண்மக்கள் இடையில் ஒரு வேட்டியும்,
மேலாடையும் அணிவர்.81 சிலர் சட்டை யணிவதுமுண்டு.82 அரசரும்,
அவர்களுடைய பணியாளரும் மட்டுமே சட்டை அணிவர்; இச் சட்டைக்குக்
‘கஞ்சுகம்’ என்று பெயர்.83 வாழ்க்கையில் உயர்நிலையில் நின்றவர்கள் மிகக்
குறைந்த உடையையே உடுத்தனர். பணியாளர்கள்தாம் வேட்டியும் சட்டையும்
அணிந்தனர்.84 சிலர் அரையில் மட்டும் ஆடை யணிவதுண்டு. ஊர் ஊராகச்
சென்று பண்டங்களை விற்றுவந்த வணிகர்கள் காலில் செருப்பு
அணிந்திருந்தனர். 

     பெண்கள் இடையில் புடவையை அணிந்திருந்தனர். அவர்கள் தம்
மார்பகத்தை ஆடையால் மறைக்கும் வழக்கம் அக் காலத்தில் இல்லை;
சந்தனத்தால் தொய்யில் எழுதியும் மலர்களை அணிந்துமே மார்பை
மறைப்பர்.85 பெண்மக்கள் இடையில் மேகலை யணிந்து அதன்மேல் பூந்துகில்
சுற்றிக் 

     72. நற்றி. 320, 359; புறம். 61, 116. 
        248, 340, 341; முல்லைக்கலி, 2: 5-7. 
     73. சிலப். 14: 205-7; சீவக. 1898, 2686
     74. சிலப். 14: 106-12. 
     75. பெரும்பாண். 236.
     76. புறம்.337, 338: 9-11. 
        பொருநர். 82-83; 
        சிறுபாண். 235-236. 
     77. புறம். 274.
     78. பொருநர். 155. 
     79. மருதக்கலி, 20.
     80. சிலப். 14 : 205-7. 
     81. புறம். 189 ; 
        மதுரைக். 435.
     82. சிலப். 16 : 106-8; 
         முல்லைப். 66. 
     83. சிலப். 5; (157 உரை) 
         சிலப். 26: 166, சிலப். 28 : 80. 
     84. பெரும்பாண். 75. 
     85. முல்லைக்கலி, 11: 17

கொள்ளுவார்கள்; 86 பாடினிகள் தம் உடம்பின் பெரும் பகுதியையும்
வெளியில் காட்டிக்கொண்டனர். சில சமயம் பெண்டிர் துணியால் தம்மைப்
போர்த்துக் கொள்ளுவதுமுண்டு.87 புதுமணப் பெண்கள் புத்தாடையால் தம்
உடலையும் முகத்தையும் மறைத்துக் கொள்ளுவர்.88 பூத்தொழில் இயற்றப்பட்ட
செம்பட்டாடைகள் கடைகளில் விற்பனையாயின. பூப்போட்ட வெண்ணிறப்
புடவைகளையும் பெண்கள் அணிந்தனர்.89 வெண்ணிறப் புடவைகளை
அணிந்து பெண்கள் பந்தாடுவது வழக்கம். செக்கர்வானைப் போன்ற
செவ்வண்ண மூட்டிய, பூ வேலை செய்யப்பட்ட, மிகமிக நுண்ணிய புடவைகள்
மதுரையிலே அங்காடிகளில் விற்பனையாயின.90 உறையூரில் மிகமிக
மென்மையான மஸ்லீன் துணிகள் நெய்யப்பட்டு வந்ததாகப் பெரிப்புளூஸ்
கூறுகின்றது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...