Monday 9 February 2015

தமிழக வரலாறு - 11

                                   தமிழக வரலாறு - 11

6. தமிழ் வளர்த்த சங்கம் 
     வரலாற்றின் உயிர்நாடி காலக்கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன
திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின்
இலக்கணமாகும். பண்டைய தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக்
காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில்
குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம் மன்னர்கள் வாழ்ந்திருந்த
காலத்தைத் தெரிவிப்பதில்லை. அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும்
சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன்
தொடர்புறுத்தி அவற்றின் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியுள்ளது.

     பண்டைய தமிழகத்தின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரியும்
புறச்சான்றுகள் வெகு சிலவே. எனவே, அகச்சான்றுகளை நாடும் தேவை
நேரிடுகின்றது. இவ் வகச்சான்றுகள் அத்தனையும் சங்க இலக்கியங்களுக்குள்
கிடைக்கின்றன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொகைகளில்
சேர்க்கப்பட்டுள்ள இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப் பெயர்
பெற்றுள்ளன. தொல்காப்பியம், பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் சில,
மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் சங்க இலக்கியங்களாகவே
சேர்த்து எண்ணுவதுண்டு.

     பண்டைய தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை
என மூன்று சங்கங்கள் கூட்டி அவற்றில் அமர்ந்து தமிழ் வளர்த்தார்கள்
என்று கூறுவது மரபாக இருந்து வருகின்றது. கடைச்சங்க காலத்தில்
எழுந்தவையே எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்கள் எனக் கொள்ளுவதும்
தமிழகத்தில் வழக்கமாய் இருந்து வருகின்றது. பொதுவாகச் சங்கம் என்னும்
சொல்லானது கடைச் சங்கத்தையே குறித்து நிற்கும்.

     சங்கம் என்னும் சொல் தமிழ் அன்று என்றும் வடமொழிச் சொல்லின்
மரூஉ என்றும் கூறுவர் சிலர். எனவே, தமிழ்நாட்டில் வடமொழி
இடங்கொண்ட பிறகே சங்கம் தோன்றியது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இக் கருத்துப் பிழைப்பட்டதாகும். 
இதற்குப் போதிய சான்றுகள் இல. பண்டைய காலந்தொட்டுத் தமிழகத்தில்

நேர்ந்துள்ள மொழிப் புரட்சிகள் பண்பாட்டுப் புரட்சிகள் பலவற்றினால் பல
தமிழ்ப் பெயர்கள் சிதைந்தும் மறைந்தும் போய்விட்டன. அவற்றுக்கேற்ப
வடமொழிச் சொற்கள் அமையலாயின. ஆரிய நாகரிகம் தமிழகத்தில்
வேரூன்றிப் பரவி வரும்போது ஏற்பட்ட விளைவு இது. ஆகவே, சங்கம்
என்னும் சொல் பிற்காலத்தையதொன்றாக இருக்கவேண்டும் என்பதில்
ஐயமில்லை. இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் உண்டு, கூடல், அவை, 
மன்றம் ஆகியவை சங்கத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாம். தமிழ்ச் சங்கம்
அல்லது கூடல் வளர்ந்த இடமாகிய மதுரையானது கூடல் என்னும் 
பெயராலும் வழங்கி வருகின்றது. இஃது இடவாகு பெயர். தமிழ வளர்ந்த
கூடலைத் ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறப்பாட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.1
சங்கம் என்னும் பெயர் ஏற்படுவதற்கு முன்பு கூடல் என்னும் சொல்லே
வழங்கியிருக்க வேண்டும். சமணரும் பௌத்தரும் தத்தம் சமயங்களை
வளர்ப்பதற்காகச் சங்கங்கள் நிறுவினார்கள். மதுரையில் நடைபெற்று வந்த
கூடலை முதன்முதல் அவர்களே சங்கம் என்று பெயரிட்டழைத்திருக்கக்கூடும்.
வைதிக ஆரியரும், சமணரும், பௌத்தரும் தமிழகத்தில் நுழைந்த பிறகு
ஏற்பட்ட ஆயிரக்கணக்கான பெயர் மாற்றங்களுள் இஃதும் ஒன்றாக
இருக்கவேண்டும். 

     சங்க இலக்கியம் ஒன்றிலேனும் ‘சங்கம்’ என்னும் சொல் காணப்பட
வில்லை என்பது உண்மையே. இதற்குத் தக்கதொரு காரணமும் உண்டு. இக்
காலத்தில் நூல் இயற்றும் ஆசிரியர் ஒருவர் ‘நான் இந்நூலை, இன்ன 
இடத்தில், இன்ன பல்கலைக்கழகம் நிகழும்பொழுது ஆக்கினேன்’ என்று 
கூறித் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மரபு இல்லை. இச் செய்திகளை
நாம் அறிய வேண்டுமாயின் நூல் அச்சிடப்பட்ட ஊர், காலம் இவற்றைக்
காட்டும் ஏட்டைத் திருப்பிப் பார்க்கவேண்டும். பண்டைய புலவர்களும் இம்
முறையைப் பின்பற்றி வந்தனர். தனிப்பாடலாசிரியரோ, நூலாசிரியரோ,
தொகுப்பாசிரியரோ இன்ன ஊரில், இன்ன காலத்தில்தாம் தம் பாட்டையோ,
நூலையோ, தொகுப்பையோ படைத்ததாகக் குறிப்பிடும் வழக்கத்தை
மேற்கொண்டிலர். இக் காரணத்தினாலேயே சங்கம், கூடல், மன்றம் என்னும்
சொற்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. அன்றி, இப்பெயர்கள்
அடங்கியிருந்த 

     1. புறம். 58.
பாடல்களோ, நூல்களோ அழிந்து போயிருக்கக்கூடும் ; அல்லது
அழிக்கப்பட்டிருக்கவுங்கூடும். 

     தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல்
உரையிற்றான் முதன்முதல் காணப்படுகின்றன. தலை, இடை, கடைச்
சங்கங்களின் வரலாற்றை அவ்வுரை சுருக்கிக் கூறுகின்றது. அவ் வரலாற்றைப்
பிற்கால உரையாசிரியர்களான பேராசிரியரும் அடியார்க்கு நல்லாரும்
ஒப்புக்கொண்டுள்ளனர். மூன்று சங்கங்கள் பல்வேறு காலங்களில் மதுரையில்
தமிழ் வளர்த்த வரலாற்றைப் பல புராண ஆசிரியரும் ஏற்றுக் 
கொண்டுள்ளனர். திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதியடிகள்
தம் நூலில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளார். வில்லிப்புத்தூரார் 15
ஆம் நூற்றாண்டினர். அவர் தாம் பாடிய பாரதத்தில், ‘நன்றறிவார்
வீற்றிருக்கும் நன்மாடக் கூடல்’, என்று மதுரையைப் புகழ்கின்றார். தமிழ்
வளர்க்கும் சீரிய நோக்கத்துடன் பண்டைய காலத்துப் பாண்டிய மன்னர்கள்
தமிழ் புலவர் பலரையும் ஒன்று கூட்டித் தமிழ்ச் சங்கங்களை நிறுவித் 
தமிழுக்கு ஏற்றம் புரிவித்தார்கள் என்பதும், இவ்வாறே சங்கம்
தோற்றுவிக்கப்பட்டது என்பதும், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்
கூறும் செய்தியாகும். அஃதுடன் அவர் மேலும் சில விளக்கங்களையும்
அளிக்கின்றார். அவையாவன; கடல்கொண்ட தென்மதுரையில் முதற் சங்கம்
நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள்,
முரஞ்சியூர் முடிநாகனார், குபேரன் முதலாய ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்
அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச் சங்கத்துடன் தொடர்பு
கொண்டிருந்த புலவர்களின் பாடல்களோ, நூல்களோ அழிந்து போயிருக்கக்கூடும் ; அல்லது

அழிக்கப்பட்டிருக்கவுங்கூடும். 

     தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல்
உரையிற்றான் முதன்முதல் காணப்படுகின்றன. தலை, இடை, கடைச்
சங்கங்களின் வரலாற்றை அவ்வுரை சுருக்கிக் கூறுகின்றது. அவ் வரலாற்றைப்
பிற்கால உரையாசிரியர்களான பேராசிரியரும் அடியார்க்கு நல்லாரும்
ஒப்புக்கொண்டுள்ளனர். மூன்று சங்கங்கள் பல்வேறு காலங்களில் மதுரையில்
தமிழ் வளர்த்த வரலாற்றைப் பல புராண ஆசிரியரும் ஏற்றுக் 
கொண்டுள்ளனர். திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதியடிகள்
தம் நூலில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளார். வில்லிப்புத்தூரார் 15
ஆம் நூற்றாண்டினர். அவர் தாம் பாடிய பாரதத்தில், ‘நன்றறிவார்
வீற்றிருக்கும் நன்மாடக் கூடல்’, என்று மதுரையைப் புகழ்கின்றார். தமிழ்
வளர்க்கும் சீரிய நோக்கத்துடன் பண்டைய காலத்துப் பாண்டிய மன்னர்கள்
தமிழ் புலவர் பலரையும் ஒன்று கூட்டித் தமிழ்ச் சங்கங்களை நிறுவித் 
தமிழுக்கு ஏற்றம் புரிவித்தார்கள் என்பதும், இவ்வாறே சங்கம்
தோற்றுவிக்கப்பட்டது என்பதும், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்
கூறும் செய்தியாகும். அஃதுடன் அவர் மேலும் சில விளக்கங்களையும்
அளிக்கின்றார். அவையாவன; கடல்கொண்ட தென்மதுரையில் முதற் சங்கம்
நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள்,
முரஞ்சியூர் முடிநாகனார், குபேரன் முதலாய ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்
அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச் சங்கத்துடன் தொடர்பு
கொண்டிருந்த புலவர்களின் தொகை மொத்தம் 4449 ஆகும். அவர்கள்
பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற
நூல்களையும் இயற்றினார்கள். இத் தலைச்சங்கம் தொடர்ந்து 4440 
ஆண்டுகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. காய்சினவழுதி 
முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் எண்பத்தொன்பதின்மர் இச்
சங்கத்தைப் புரந்து வந்தார்கள். அவர்களுள் எழுவர் தாமே பெரும்
புலவர்களாகவும் திகழ்ந்தவர்கள். அக்காலத்தில் வழங்கிய இலக்கண நூல்
அகத்தியம் ஒன்றேயாம். 

     இடைச் சங்கம் தோன்றி வளர்ந்தது கபாடபுரத்தில். தென்மதுரை கடல்
கோளுக்குள்ளாயிற்று; கபாடபுரம் பாண்டி நாட்டுக்குத் தலைநகரமாயிற்று.
இடைச்சங்கம் அங்கு நிறுவப் பட்டது. வெண்டேர்ச்செழியன் முதலாக,
முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் பாண்டிய மன்னர்கள் இச் சங்கத்தின் புரவலர்களாய் பணியாற்றினார்கள். அவர்களுள் ஐவர் தாமே
புலவர்களாகவும் அச்சங்கத்தில் அமர்ந்திருந்தனர். அகத்தியனார்,
தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழியார், மோசியார், வெள்ளூர்க்
காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன்,
கீரந்தையார் முதலாய ஐம்பத்தொன்பதின்மர் இச்சங்கத்தில் அமர்ந்து
தமிழாராய்ந்தார்கள். இந்தக் கூடலில் வீற்றிருந்த புலவர்கள் மூவாயிரத்து
எழுநூற்றுவர். கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் முதலிய
நூல்களை அவர்கள் பாடினார்கள். அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம்,
இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகிய இலக்கண நூல்களை அவர்கள்
பயன்படுத்தி வந்தார்கள். இச் சங்கம் மூவாயிரம் ஆண்டுகள்
நடைபெற்றதெனவும் கூறப்பட்டுள்ளது. பிறகு கபாடபுரத்தையும் கடல்
கொண்டுபோய்விட்டது. இக் காரணத்தினால் கடைச் சங்கம் உத்தர மதுரையில்
கூடிற்று. இப்போது பாண்டி நாட்டிலுள்ள மதுரை இதுதான். இச் சங்கத்தில்
அமர்ந்து தமிழ் வளர்த்த புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர். இவர்களுள் 
மூவர் பாண்டிய மன்னர். சேந்தம்பூதனார், அறிவுடையரனர், பெருங்குன்றூர்
கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார்,
கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள் ஏனைய புலவர்களில் சிலர்.
இந் நாற்பத்தொன்பதின்மர் பாடிய பாடல்கள் நெடுந்தொகை நானூறு,
குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு,
பதிற்றுப்பத்து, கலி நூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை,
பேரிசை முதலியன. கடைச்சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல்கள்
அகத்தியமும் தொல்காப்பியமுமாம். இச்சங்கம் 1850 ஆண்டுக் காலம்
நீடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இக் கடைச்சங்கத்தை மதுரையில் 
நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன் என்பான். இதன் இறுதி 
யாண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. 

     கடைச் சங்கத்தின் தோற்றத்தைப்பற்றிய செய்தியை இறையனார்
களவியல் உரையாசிரியரே அன்றித் திருவிளையாடற் புராணம் எழுதிய
பரஞ்சோதி யடிகளும் தம் நூலில் விரித்துரைக்கின்றார். அவர் கூறுவதாவது;
முன்னொரு காலத்தில் வங்கிய சேகர மன்னன் என்பவன் பாண்டி நாட்டை
ஆண்டு வந்தான். அப்போது வாரணாசியில் பிரமதேவன் பத்து அசுவமேத
யாகங்களை முடித்துக்கொண்டு கங்கையாற்றில் தன் மனைவியர் சரசுவதி, காயத்திரி, சாவித்திரி ஆகிய மூவருடன் நீராடச்
சென்றான். கந்தருவப் பெண் ஒருத்தியின் இன்னிசையில் தன் உளத்தைப்
பறிகொடுத்த சரசுவதிதேவி சற்றுப் பின் தங்கினாள். அவளை மானிடப் பிறவி
எடுக்குமாறு பிரமன் சபித்தான். கலைமகள் தன் பிழையை மன்னித்துத்
தனக்குச் சாப விடுதலையளிக்கும்படி தன் கணவனிடம் மன்றாடினாள்.
நான்முகக் கடவுளும் உளமிரங்கி அருள்சுரந்து தன் சாபத்துக்குக் கழுவாய்
ஒன்று கூறினான். அஃதென்னவெனின், கலைமகளின் உடல் ஐம்பத்தொரு
எழுத்தால் ஆனது. அவற்றுள் ‘ஆ’ முதல் ‘ஹக’ வரையிலான நாற்பத்தெட்டு
எழுத்துகள் உலகில் புலமை மிக்க சான்றோர்களாய்ப் பிறப்பார்கள்.
அவ்வெழுத்துகள் யாவற்றினுள்ளும் ஊர்ந்து நின்று அவற்றைச் செலுத்தி
வருகின்ற ‘அகரம்’ போன்றவனான சிவபெருமான் நாற்பத்தொன்பதாம்
புலவராக வீற்றிருந்து அப் புலவர்கட்குப் புலமையை வளர்த்து முத்தமிழையும்
நிலைநிறுத்துவான். இவ்வாறு கூறிப் பிரமன் கலைமகளைத் தேற்றினான்.2 

     ‘இறையனார் களவியல்’ என்னும் அகப்பொருள் இலக்கணம்
இயற்றப்பட்ட வரலாறு பின்வருமாறு: பாண்டி நாட்டில் பன்னிரண்டு
ஆண்டுகள் மாபெரும் பஞ்சம் ஒன்று தோன்றி மக்கள் அவலப்பட்டனர்;
உணவின்றிப் பசியினால் வாடினர். அவர்களுடைய துன்பத்தைக் கண்டு
உள்ளமுடைந்த பாண்டியன் கேட்டுக்கொண்டபடியே அவனுடைய அவைப்
புலவர்கள் அனைவரும் பாண்டி நாட்டைத் துறந்து சென்று தத்தமக்கு
விருப்பமான ஊர்களில் தங்கிக் காலங்கழித்து வந்தனர். பன்னிரண் 
டாண்டுகள் கழித்துப் பாண்டி நாட்டில் நன்மழை பெய்தது; பயிர்கள்
செழிப்புற்றன. மக்களும் நல்வாழ்வு எய்தினர். மன்னனும் உளமகிழ்ந்து
புலவர்கள் அனைவரையும் தேடித் தன் அவைக்கு மீண்டும் அழைத்து
வருமாறு பல இடங்களுக்கும் ஆள் போக்கினான். ஆள்கள் பல்வேறு
இடங்களிலும் தேடித் திரிந்து புலவர்களைத் திரட்டிக் கொண்டுவந்து
சேர்த்தனர். ஆனால், திரும்பி வந்த புலவர்கள் அனைவரும் எழுத்து, சொல்
இலக்கணங்களில் மட்டும் வல்லுநராகக் காணப்பட்டனரே யன்றிப் பொருள்
இலக்கணத்தில் தேர்வுடையவர் அவர்களுள் ஒருவரேனும் இலராயினர்.
மன்னன் பெரிதும் கவன்றான். பொருளை யாய்ந்து வாழ்க்கையிற் பயன்
பெறுவதற்காகவே எழுத்தும் சொல்லும் உள்ளன. எனவே, பொருளை
உணர்த்தும் இலக்கணத்தை மீண்டும் மக்கள் யாரிடம் கற்றுப் பயன் பெறுவர் 

     2. திருவிளையாடல் (பரஞ்சோதி)-படலம் 51. பாடல் 10-11.
என்று மன்னன் ஏங்கி நின்றான். அவனுடைய கவற்சிக்கு இரங்கியவனாய்
ஆலவாய்க் கடவுள் அகப்பொருளை விளக்கும் அறுபது சூத்திரங்களை 
மூன்று செப்பேடுகளின்மேல் பொறித்துக் கோயிற் கருவறையில் தன்
பீடத்தின்கீழ் இட்டு வைத்தான். கோயில் அருச்சகன் அவ் வேடுகளைக்
கண்டெடுத்து மன்னன் கைகளில் சேர்த்தான். அவற்றைப் பெற்று அளவற்ற
மகிழ்ச்சியில் ஆழ்ந்த பாண்டியன் அச்சூத்திரங்கட்கு உரைகாண முயன்றான்.
நக்கீரனார் அவற்றுக்குச் சிறப்பானதொரு உரையை இயற்றிக் கொடுத்தார்.
முருகப் பெருமானின் கூறான உருத்திரசன்மன் என்பான் இவ்வுரையை
அரங்கேற்றக் கேட்டு மகிழ்ந்தான். இறையனார் அகப்பொருள் நூன்முகம்
தெரிவிக்கும் வரலாறு இது. இவ் வரலாறு கல்லாடத்தின் மூன்றாம் பாடலிலும்
குறிப்பிடப்படுகின்றது. 

     தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் தோன்றி வளர்ந்த வரலாறும், இறையனார்
அகப்பொருளும் அதன் உரையும் எழுந்த வரலாறும், தெய்வீக நிகழ்ச்சிகள்,
அளவைக்கு ஒவ்வாத கால வரைகள் ஆகியவை கலந்துள்ளன என்பது
உண்மை. எனினும், அவற்றை முற்றிலும் கற்பனை என்று புறக்கணித்தலாகாது.
‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது
அறிவு’3 என்பது நியதி. எனவே, இப்புராண வரலாறுகளை நன்கு ஆய்ந்து
அவற்றுள் உண்மை காணலே பொறுத்தமாகும். 

     பரஞ்சோதி யடிகளின் காலம் இன்னதெனத் திட்டமாக அறிய
முடியவில்லை. இவரன்றிப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவரும் ஒரு
திருவிளையாடற் புராணம் பாடியுள்ளார். இவர் 13ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். பரஞ்சோதியடிகள் காலத்தால் இவருக்குப் பிற்பட்டவர். தமிழ்ச்
சங்கத்தைப்பற்றிக் கூறும் புராணங்கள் இவை இரண்டுதாம். மன்னர்களின்
பரம்பரை வரிசையிலும், அறுபத்து நான்கு திருவிளையாடல்களின் வைப்பு
முறையிலும் இவ் விரண்டு புராணங்களும் ஒன்றோடொன்று முரண்படுகின்றன.
இறையனார் களவியல் உரை இவை இரண்டுக்கும் முற்பட்டதாகும். இப்
புராணங்களின் கூற்றுக்கும், களவியல் உரையாசிரியர் தரும்
செய்திகளுக்குமிடையே பல வேறுபாடுகள் உண்டு. எனவே, புராண ஆசிரியர்
இருவரும், களவியல் உரையாசிரியரும் அவ்வக் காலங்களில் தத்தமக்குக்
கிடைத்த குறிப்புகளைக் கொண்டு தமிழ்ச் சங்கங்களைப் 

     3. குறள். 355.

பற்றிய செய்திகளைத் தத்தம் நூல்களில் சேர்த்திருக்க வேண்டும். பல வேறு
காலங்களில் தமிழ்ச் சங்கங்களைப்பற்றிய செய்திகள் மறைந்து போகாமல் 
செவிவழித் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன என்று ஊகிக்க
இடமேற்படுகின்றது. கற்பனைக் கதைகளும், செய்தித்தாள்களும் செய்திகளைத்
திரட்டித்தராத ஒரு காலத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு
வரலாற்றை முற்றிலும் கற்பனை என்று புறக்கணித்து விடல் பேதைமையாம்.
எனவே, தமிழ்ச் சங்கங்களைப்பற்றிய செய்திகட்கு ஓர் அடிப்படை 
இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம். 

     தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய வரலாறுகளில் வரும் மன்னர்கள்,
புலவர்கள் ஆகியவர்களுள் பலர் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில்
இடம் பெற்றுள்ளன. அதனால் அப் புலவர்கள் உயிருடன் 
வாழ்ந்திருந்தவர்கள்; புனைபாத்திரங்கள் அல்லர் என்பதை மறுக்க முடியாது.
பாண்டிய மன்னர் அவையின் பல புலவர்கள் வீற்றிருந்த வரலாற்றை
வேள்விக்குடிச் செப்பேடுகளும்4 குறிப்பிடுகின்றன. கற்பனை வளம் செறிந்த
வர்கள் உண்மை வரலாற்றுடன் பல பொய்க் கதைகளையும் சேர்த்துத் திரிந்து
வெளியிட்ட செய்திகள் பண்டைய நூல்கள் பலவற்றுள் இடம் பெற்றுவிட்டன.
எனவே, தமிழ்ச் சங்கம் என்று பிற்காலத்தில் பெயரெய்திய கூடல் அல்லது
மன்றம் ஒன்று பாண்டிய மன்னர் தலைமையில் இயங்கி வந்த வரலாற்றை 
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை. 

     அடுத்துத் தமிழ் வளர்த்த சங்கம் எத்தனை, ஒன்றா, மூன்றா என்பதை
ஆய்வோம். கபாடபுரம் பாண்டியனுடைய தலைநகராய் இருந்து பிறகு
தென்மதுரை தலைநகராக மாறியதற்கு இராமாயணம், மகாபாரதம்,
கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ஆகிய நூல்களில் சான்றுகள் 
கிடைக்கின்றன. கன்னியாகுமரிக்குத் தெற்கில் துறைமுகம் ஒன்று இருந்ததாகப்
பிளினி கூறுகின்றார். ‘மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவு
இன்றி மேற்சென்று மேவார்நாடு இடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்
பொறித்த தென்னவன்’5 என்று முல்லைக் கலியிலும், 

     ‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் 
கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையுங் இமயமுங் கொண்டு தென்றிசை
யாண்ட தென்னவன்’6 என்று சிலப்பதிகாரத்திலும் 

     4. எபி. இந்தி xvii- க். 16. 5. முல்லைக்கலி - 4 : 1-4 
     6. சிலப். 11-19, 22

இதைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில் 
நோக்கின் வடமதுரையானது பாண்டி நாட்டின் தலைநகராவதற்கு முன்பு
பாண்டியர்கள் அதற்குத் தென்பால் கபாடபுரத்தில் அமர்ந்தும், அதற்கும்
முன்பு, மேலும் தெற்கில் அமைந்திருந்த தென்மதுரையிலிருந்தும் ஆட்சி
புரிந்து வந்தனர் என்ற வரலாறு உண்மை என்பது உறுதியாகின்றது. 

     தென்மதுரை ஒன்று செயற்பட்டு வந்ததற்குப் புறச்சான்று வேறொன்றும்
உண்டு. இலங்கையின் வரலாற்றைக் கூறும் ‘மகாவமிசம்’ என்னும் நூலில் அந்
நகரம் குறிப்பிடப்படுகின்றது. விஜயன் என்னும் மன்னனும் அவன்
தோழர்களும் அங்கிருந்துதான் தமக்கு மணப்பெண்கள் தேடிப் பெற்றனராம்.
சிங்கள மொழியில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘சத்
தர்மாலங்காரம்’ என்னும் நூலிலும் ‘தட்சிண மதுரான்’ என்ற ஒரு குறிப்புக்
காணப்படுகின்றது. 

     பாண்டி நாட்டின் தலைநகரம் இருமுறை மாற்றப்பட்டிருப்பினும்,
மாறியமைந்த நகரங்களில் மீண்டும் மீண்டும் தமிழ்ச்சங்கம் ஒன்றைப் புதிதாக
நிறுவியதன் காரணம் காண இயலாது. எனினும் செவிவழிச் செய்திகளும், தமிழ்
இலக்கியங்களில் காணக் கிடைக்கும் அகச்சான்றுகளும் மூன்று சங்கங்கள்
இயங்கிவந்த செய்தியை உறுதிப்படுத்துகின்றன. தொல்காப்பியர் இரண்டாம்
சங்க காலத்தில் வாழ்ந்தவர். தொல்காப்பியத்தில் பல நூற்பாக்களில் ‘என்ப’,
‘மொழிப’, ‘என்மனார் புலவர்’, ‘பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை’ 
என்று கூறித் தமக்கு முற்பட்டிருந்த இலக்கண ஆசிரியர்களின்
முடிபுகளின்மேல் தொல்காப்பியனார் தம் முடிபுகளைச் சார்புறுத்துகின்றார்.
எனவே, தொல்காப்பியத்துக்கு முன்பு இலக்கண நூல்கள் வழங்கி
வந்திருக்கவேண்டுமென்றும் அவ்விலக்கணங்கள் தோன்றுவதற்குக் காரணமாக
உயர்வகை இலக்கியம் தமிழ்மொழியில் பெருகியிருக்க வேண்டுமென்றும்
கொள்ளுவதுதான் பொருத்தமாகும். இவ் விலக்கியப் படைப்புகள் யாவும் 
முதற் சங்க காலத்திலோ, அன்றி அதற்கு முன்போ, பின்போ
தோன்றியிருக்கவேண்டும். எனவே, கடைச் சடங்கத்துக்கு முன்பு இரு
சங்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயங்கி வந்தன என்பதைத் திட்டமாக
மறுக்கவே முடியாது. ஆனால், இச் சங்கங்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரம்
ஆண்டுகள் நீடித்து நடைபெற்றுவந்தன என்பதையும் ஒவ்வொன்றுக்கும்
இடையில் இத்தனையாண்டுகள் ஓடின என்பதையும் தக்க சான்றுகள் இன்றி
ஒப்புக்கொள்ளுதல் ஆராய்ச்சி முறைக்கே முரண்பாடாகும். . மூன்றாம் சங்கம் எப்போது கூடிற்று. எத்தனை யாண்டுகள் செயற்பட்டு

வந்தது, என்னும் கேள்விகளுக்கு உடன்பாடான விடை இன்னும்
ஆய்வாளரிடமிருந்து வரவில்லை. மூன்றாம் சங்கத்தின் காலம் கி.மு. 500 
முதல் கி.பி. 500 வரை நடந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் பலவாறு
கருதி வந்துள்ளனர். சிலர் இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே
கடைச் சங்கம் நடைபெற்றது என்றும் கூறுவர். பரிபாடலிலும் சிலப்பதி
காரத்திலும் காணப்படும் சில நிகழ்ச்சிகளைக் கொண்டு வானவியல்
கணிப்பின்படி கணக்கிட்டுக் கடைச் சங்கம் நடைபெற்ற காலம் கி.பி. 7 
அல்லது 8ஆம் நூற்றாண்டாகத்தான் இருக்கவேண்டுமென்று எல்.டி.
சுவாமிக்கண்ணு பிள்ளையவர்கள் கூறுவார். அந் நூல்களில்
கொடுக்கப்பட்டுள்ள காலக் குறிப்புகளைத் திருத்தமாகக் கணித்தறிவதற்குத்
தேவையான குறிப்புகள் அவற்றுள் கிடைக்க வில்லையாகலான் அவருடைய
முடிவை ஏற்றுக்கொள்ள வியலாது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...