Monday 9 February 2015

களப்பிரர்கள்

                                            களப்பிரர்கள்

     களப்பிரர் யார், எங்கிருந்து வந்தவர்கள், எப்போது தமிழகத்தில்
நுழைந்தார்கள் என்னும் ஆய்வு இன்னும் முடிந்தபாடில்லை. களப்பிரரைக்
களவர் என்றும், கள்வர் என்றும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தமிழகத்தின் வடவெல்லையான வேங்கடத்துக்கும் மேற்பாலில்
வாழ்ந்திருந்தவர்கள் அவர்கள் என ஆய்வாளர் ஊகிக்கின்றனர். களப்பிரர்கள்
ஆந்திரர்களால் நெருக்குண்டு தெற்கு நோக்கிக் குடி பெயர்ந்தார்கள்.
தமிழகம் முழுவதிலும் இவர்கள் பரவினார்கள். தொண்டை மண்டலம், சோழ
மண்டலம், பாண்டி மண்டலம் ஆகியவற்றுள் ஒன்றேனும் இவர்களுடைய
கொடுமையினின்றும் தப்பவில்லை. தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட
குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள்;
கலியரசர்கள். இவர்களைப் பற்றிய சில விளக்கங்கள் வேள்விக்குடிச்
செப்பேடுகளிலும் பல்லவர்கள், சளுக்கர்கள் ஆகியவர்களுடைய
செப்பேடுகளிலும் கிடைத்துள்ளன. கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன்
ஒருவனாலும்,1 சிம்ம விஷ்ணு,2 முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ
மன்னர்களாலும், முதலாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன்
என்ற சளுக்க மன்னார்களாலும் களப்பிரர்கள் அழிவுற்றனர் என
அறிகின்றோம். இவர்கள் கொடும்பாளூர் முத்தரையருடன் (கி.பி. 8-11ஆம்
நூற்றாண்டு) தொடர்பு கொண்டவர்கள் எனச் சிலர் கருதுவர்.3 மதுரையைச்
சிறிது காலம் ஆண்டுவந்த கருநாடரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து
நிலவுகின்றது. தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும்
குறிப்பிடப்படுபவர்களும், வேளாள குலத்தைச் சார்ந்தவர்களுமான களப்பாளர்
என்பார் களப்பிரர் என்ற பெயரில் விளங்குகின்றனர் என்று சிலர்
ஊகிக்கின்றனர். இவ்வூகம் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

     களவர் இனத்தைச் சேர்ந்தவனான புல்லி என்ற மன்னன் ஒருவன்
வேங்கடத்தை ஆண்டுவந்தான்.4 தமிழகத்திற்கு

     1. வேள்வி. செப். Ep. Ind. XVII-p. 306.
     2. காசக். செப். S.I.I.
     3. Ep. Ind. XV-49.
     4. அகம். 83.
வடக்கே ஆட்சிபுரிந்த சாதவாகனரின் வீழ்ச்சியாலும், பல்லவர்களின் கை 
ஓங்கி வந்ததாலும், சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் கி.பி. 3, 4ஆம்
நூற்றாண்டுகளில் தொண்டை மண்டலத்தில் மிகப் பெரியதோர் அரசியற்
குழப்பம் ஏற்பட்டது. அப்போது வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த
களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து
பல்லவரையும், சோழரையும், பாண்டியரையும் ஒடுக்கித் தமிழகத்தில் கலகமும்
கொள்ளையும் கொலையும் விளைவித்தனர். சோழநாட்டைக் கைப்பற்றி 
ஆண்டு வந்தவன் களப்பிர மன்னனான அச்சுதவிக்கிராந்தன் என்பவன்.
தொண்டை நாட்டில் களந்தை என்னும் இடத்தில் கூற்றுவன் என்றொரு
மன்னன் ஆண்டு வந்தனன் எனவும், அவனே கூற்றுவ நாயனாராகத்
திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றனன் எனவும் பெரிய புராணம்
கூறும்.5 இவன் களப்பிர குலத்தைச் சார்ந்தவன் என்று சிலர்
கொள்ளுகின்றனர். கருநாடக தேசத்துக் கல்வெட்டுகளில் கலிகுலன், 
கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக்
கலிதேவன் ஒருவனைப்பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் பேசுகின்றன.6
களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர்
இராச்சியத்தின் பேலூர்க் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.7 களப்பிரர்
என்போர் கன்னட நாட்டுடன் தொடர்பு கொண்டவர்களா என்று ஐயுறவும்
இடமுண்டு. 

     களப்பிரர் முதலில் பௌத்தராகவும் பிறகு சமணராகவும் சமயச்
சார்புற்றிருந்தனர். களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் என்றொரு
மன்னன் சோழ நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தான் என 
அறிகின்றோம். இவன் காலத்தில் புத்ததத்தர் என்ற பௌத்த அறிஞர் ‘விநய 
விநிச்சயம்’ என்னும் நூலைத் தாம் எழுதியதாகக் கூறுகின்றார். பிற்காலத்தில்
களப்பிரர்கள் சமண சமயத்தைத் தழுவி அதன் வளர்ச்சிக்குத் துணை
புரியலானார்கள். களப்பிரர் காலத்தில் ஆக்கத் துறைகள் பலவற்றில் வளர்ச்சி
காணப்பட்டது. பௌத்த சமண ஒழுக்கங்கட்குச் செல்வாக்கு உயர்ந்தது.
பௌத்தரும் சமணரும் வைதிகச் சடங்குகளையும், வேள்விகளையும், ஆரிய
சமய தத்துவங்களையும் மறுத்தவர்கள். கொல்லாமை, புலால் உண்ணாமை,
பொய்யாமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு காணாமை என்னும் உயர்ந்த
அறங்களை ஒம்பி வளர்த்தவர்கள். ஆயிரம் வேள்விகள் 

     5. பெரிய பு. கூற். நாயனார். 8. 
     6. Ep. Ind. XVIII. P. 259. line 8. 
     7. My. AR. 1936. No. 16, line, 2.
வேட்பதினும் ஓர் உயிரைக் கொல்லாமையே மேலாம் அறமாகும் என்று 
புத்தர் போதித்த அறத்தை வலியுறுத்தி வந்தனர் பௌத்தர்கள். நாடெங்கும்
சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வந்தன.
மக்களுக்குள் ஒழுக்கத்தையும், அமைதியையும், பிற உயிர்கள்மாட்டு
அன்பையும் வளர்ப்பதில் சமண பௌத்தத் துறவிகள் முனைந்து வந்தனர்.
பாண்டி நாட்டில் சமண நிர்க்கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் வாழ்ந்து வந்தனர்
என யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் எழுதுகின்றார். இக்
காரணங்களால் வேள்விகளையும், குல வேறுபாடுகளையும் படிகளாகக் 
கொண்டு உயர்ந்து வந்த வைதிக சமயம் தன் செல்வாக்கை இழந்து வந்தது. 

     களப்பிரர் காலத்தில் தமிழ் மொழிக்குத் தாழ்வும், பிராகிருதத்துக்கும்
பாலி மொழிக்கும் அரசாங்கச் செல்வாக்கும் கிடைத்தன. எனினும் தமிழ்,
மன்னரின் ஆட்சி மொழி என்ற ஓர் உயர்நிலையினின்றும் இழிந்ததாயினும்
சமயத்தையும் தத்துவத்தையும் ஒழுக்கத்தையும் பொதுமக்களுக்குப் புகட்டும்
நிலைமையை எய்திற்று. தமிழில் போதித்தாலொழியத் தத்தம் சமயங்கள்
மக்களின் கருத்தைக் கவரா எனப் பௌத்தரும் சமணரும் நன்கு உணர்ந்தனர்.

     பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில்
‘திராவிட சங்கம்’ ஒன்றை நிறுவினார் (கி. பி. 470). சமண அறத்தைப்
பரப்புவதும், சமணக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத்
தோற்றுவிப்பதுமே இச் சங்கத்தின் நோக்கமாகும். பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் பல இச் சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். 
மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத்
தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி
ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்
திராவிட சங்கத்தின் தொண்டே காரணமாகும். எதையும் ஏற்றுக்கொள்ளும்
விரிந்த உளப்பான்மையும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காணும் பண்பும் வாய்க்கப் பெற்றிருந்த தமிழர்கள் புறச்
சமயத்தார்கள் மேற்கொண்ட தமிழ் வளர்ச்சிப் பணிகளைப் பாராட்டி
ஏற்றுக்கொண்டனர். பௌத்த சமண அறவொழுக்கங்கள் பலவற்றையும்
அவர்கள் பின்பற்றலானார்கள். தாம் எண்ணிய சமயத்தை எண்ணியாங்குத்
தழுவிக்கொள்ளும் பண்பாட்டைச் சிறப்புரிமையாகக் கொண்டிருந்தனர் என
அறிகின்றோம். சமணரும், பௌத்தரும், வைதிகரும், ஏனையோரும்  நெருங்கி நின்று, பூசலின்றி, இணைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால்,
சமயவாதிகளுக்குள் சொற்போர்கள் அவ்வப்போது ஆங்காங்கு நிகழ்வதுண்டு.
குண்டலகேசி என்னும் பௌத்த காவியமும் நீலகேசி என்னும் சமண
காவியமும் இதை உறுதிப்படுத்துகின்றன. வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர் 
பலர் தத்தம் திறங்களை எடுத்துக் கூற மணிமேகலை அவற்றை எல்லாம்
கேட்டதாகத் தெரிகின்றது. இளம் பெண்துறவி ஒருத்தியின் முன்பு தத்துவ
அறிவிற் சிறந்த பல்சமயச் சான்றோர் ஓரவையில் அமர்ந்து தத்தம் சமயக்
கருத்துகளை எடுத்து வாதித்தார்கள் என்பதிலிருந்து அக் காலத்து மக்களின்
அறிவின் உயர்ச்சியும், பண்பாட்டின் மேம்பாடும் தெற்றென விளங்குகின்றன.
களப்பிரர் காலத்தில் வழங்கி வந்த பல்வேறுபட்ட சமயங்களுள் சிறப்பானவை
வைதிகம், சைவம், பிரமவாதம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம்,
பௌதிகம் அல்லது உலோகாயதம் என்பன.8 இச் சமயங்களை வளர்த்த
அறிஞர்கள் வாய்ப்பு நேர்ந்தபோது தத்தம் கொள்கைகளை மக்களுக்கு 
எடுத்து விளக்கி வந்தனர். எனினும், சமயப் போர்கள் ஏதும் நிகழவில்லை. 

     பௌத்தர்கள் கடவுள் ஒருவர் உளர் என்னும் கொள்கையை
ஒப்புக்கொள்ளுவதில்லை. இக் காரணம் ஒன்றே பௌத்தத்துக்கு
வேர்கொல்லியாக மாறிற்று. சமணர்கள் அருகனைக் கடவுளாக வழிபட்டனர்.
சமணக் கொள்கைகளை விளக்கக்கூடிய பல நூல்களை இவர்கள் தமிழிலேயே
இயற்றிப் பொதுமக்கள், மன்னர்கள் ஆகிய அனைவருடைய கருத்தையும்
கவர்ந்தனர். பௌத்தர்களைப் போலவே சமணரும் கொல்லாமையாகிய
நோன்பை மேற்கொண்டவர்கள் எனினும் இவர்கள் வைதிகச் சமயத்துடனும்
தொடர்புகொண்டு பௌத்தத்துக்கு மாறான சில வைதிகக் கொள்கைகளையும்
சமணத்தில் ஏற்றுக்கொண்டனர். வாசுதேவனையும் பலதேவனையும் தம் 
தெய்வ வரிசையில் இவர்கள் சேர்த்துக் கொண்டனர். திருமகள் வழிபாடும்
இவர்கட்கு உடம்பாடாக இருந்தது. சமணருக்கும் பௌத்தருக்கும் இடையிட்ட
கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி பூசல்கள்
நேர்ந்தன. அவற்றில் சமணரின் கை ஓங்கி வந்தது. பௌத்தர்கள் காஞ்சிபுரம்,
காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெரிய நகரங்களில் மட்டும் விகாரைகள்
அமைத்துச் சமயப்பணி செய்து வந்தனர். ஆனால் சமணரோ நகரங்களிலும்,
நாட்டுப்புறங்களிலும், மலைக்குகைகளிலும், காடுகளிலும் படர்ந்து
சென்றுஎண்ணற்ற சமணப்பள்ளிகள் நிறுவியும், 

     8. மணிமே. 27
தமிழில் அரிய இலக்கிய இலக்கணங்கள் இயற்றியும் பொதுமக்களுடன்
மிகநெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். இக் காரணத்தால்
பௌத்தத்தின் செல்வாக்குக் குறைந்துகொண்டே வந்து இறுதியில் அச்
சமயமானது நாட்டினின்றும் ஒருங்கே மறைந்து போகுமளவுக்கு அதன் நிலை
குன்றிவிட்டது. பின்னர்ப் போட்டியில் எஞ்சி நின்ற சமணம் ஒன்றே
சைவத்தையும் வைணத்தையும் தனித்து நின்று எதிர்த்துப் போராட வேண்டிய
நெருக்கடி நிலை ஏற்பட்டு விட்டது. பௌத்தர் ஒருவர் மறைமுகமாகச் 
சிவனை வழிபட்டதாகவும் பெரியபுராணம் கூறுகின்றது.9 

     சிவன் வழிபாடு தொன்றுதொட்டே தமிழகத்தில் வழங்கி வருகின்றது.
சிவனையே முழுமுதற் கடவுளாகப் பண்டைய தமிழர் வழிபட்டுவந்தனர் எனச்
சங்க இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. பல இடங்களில் சிவனுக்குக்
கோயில்கள் எழுந்தன. சிவனைப் பற்றிய புராண வழக்குகள் அத்தனையும்
தமிழகத்தில் அப்போதே பரவிவிட்டன. சைவ வழிபாட்டில் அடிப்படையான
கொள்கைகள் சில உண்டு. அவை : ஒருவன் செய்கின்ற வினை, வினையைச்
செய்கின்றவன், செய்த வினையால் அவனுக்கு நேரிடும் விளைவுகள்,
வினைபுரிபவனையும் அவன் புரியும் வினையின் பயனையும் ஒன்று கூட்டும்
கடவுள் ஆகிய நான்கு மெய்ப்பொருள்கள் ஆகும். சிவன் வழிபாடும்,
ஊழ்வினையில் ஆழ்ந்த உடன்பாடும் தமிழ்நாட்டில் ஊறிப் 
போயிருந்தமையால் கடவுள் இல்லை என்று திட்ட வட்டமாகக் கூறிய 
பௌத்த சமயத்துக்குச் செல்வாக்குக் குன்றிவந்ததில் வியப்பேதுமில்லை.
அஃதுடன் பௌத்த சமயத் தலைவனான அச்சுத விக்கிராந்தன் கடுங்கோன்
எனற் பாண்டியனாலும், சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னனாலும்
ஒறுக்கப்பட்டு அவனுடைய ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்ட பிறகு
பௌத்தத்துக்கு வெகு விரைவாக இறங்குமுகம் ஏற்பட்டு வந்தது. 

     9. பெரிய பு. சாக்கிய நாயனார். 4.


No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...