Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Friday, 11 December 2015

விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா

விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர் கட்சிகளின் நடவடிக்கை காரணமாக பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் முடிவடைந்தது. அப்படி சட்டமாக நிறைவேறாமல் போன ஒரு சட்ட மசோதா –விதை சட்ட மசோதா 2010 (Seed Bill 2010). பசுமைப் புரட்சியை தொடர்ந்து புதிய வகை விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு 1966-ம் ஆண்டு விதைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் உலகமய-பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர எண்ணிய மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு விதைகள் சட்ட மசோதாவை   (Seed Bill 2004) கொண்டு வந்தது. இச்சட்டம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விதைகள் அனைத்தும்மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென கட்டாயப்படுத்தியது. அப்படி பதிவு செய்தவர்மட்டுமே விதைகளை விற்பனை செய்ய முடியும் என்றும் கூறியது.மேலும் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருந்த இச்சட்ட மசோதா, பலத்த எதிர்ப்பின் காரணமாக, தேவையான மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பட்டது.

அதன்பின் இந்த சட்ட மசோதா பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்பொழுது விதைகள் சட்ட மசோதா 2010 (Seed Bill 2010) என மறு உருவெடுத்துள்ளது. ஆனாலும் இந்த மசோதா பழைய அபாயமிக்க பிரிவுகளுடனேயே வந்துள்ளது. உதாரணமாக, விவசாயிகளுக்குஇச்சட்டத்தின் கீழ் விதைகளை பாதுகாக்கவும்மறுபயிர் செய்யவும்அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் கூடுதலாக சிலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டின்படிவிவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது.அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளைஇச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும்நாட்டின் பல பகுதிகளிலும்பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளைமட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும்இந்த நிபந்தனை ஒருசாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும்மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும்என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

விவசாயிகளின் பாரம்பரிய விதைகளை இச்சட்டத்தின் கீழ் வேறுயாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஒரு பயிரின் மூலத்தை (Parentage)தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடையபாரம்பரிய விவசாய விதைகளை மரபணுமாற்றம் (Genetic Engineering)செய்து புதிய வகை விதை என்னும் பெயரில் அவற்றை பதிவு செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.

மேலும் இந்த சட்டம்விதை கண்காணிப்பாளருக்கு (Seed Inspector)ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது.தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமானமுன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒருஇடத்தையும்எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்குவிதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ளவிதைகளை கைப்பற்றுவதோடுஅவற்றை பாதுகாத்து வைத்துள்ளவிவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.

முன்பு இருந்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு புதிய சட்டத்தின்  கீழ் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கான பிரதிநிதித்துவமாக வழங்கப்பட்டுள்ளதது. இது மாநிலங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும்.

தாவரங்களுக்கு காப்புரிமை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தாவர ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2001, கூட விவசாயிகளுக்கு உழவர்களின் உரிமைகள் என்னும் பிரிவு இப்படி கூறுகிறது: “இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகத்தை சேமிக்கவும், பயன்படுத்தவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாற்றம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் அல்லது நிலத்தில் விளைவிக்கப்பட்ட விதை உள்ளிட்ட விளைபொருட்களை விற்கவும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்குமுன் ஒரு உழவருக்கு இருந்த அனைத்து உரிமைகளுக்கும் உடையவராகக் கருதப்படுவார்.” ஆனால் இந்த உரிமைகளை பறிக்கின்ற வகையில் விதை சட்ட மசோதா அமைந்துள்ளது. மேலும்  இச்சட்டம் தாவர வகை பயிர்களுக்கு 15 ஆண்டு கால காப்புரிமையும், மரவகைகளுக்கு 18 ஆண்டு கால காப்புரிமையும் கொடுக்கிறது. இதனை மிஞ்சும் வகையில் விதைச் சட்ட மசோதா தாவர வகைகளுக்கு 30 ஆண்டு கால பதிவு உரிமையும் மரம் வகைகளுக்கு 36 ஆண்டு கால பதிவு உரிமையும் வழங்குகிறது. அதாவது, இந்த பதிவு உரிமை காலகட்டத்தில் பதிவு பெற்றவரை தவிர்த்து வேறு யாரும் இந்த விதை வகைகளை விற்பனை செய்ய முடியாது.  

 இந்தியாவில் சுமார் 70 சதவித விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்பட்டால், விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் விவசாயிகளின் அடிப்படை உரிமையான விதை சேமிக்கும் உரிமை  கூட தண்டனைக்குரிய குற்றமாக மாறுகின்ற ஆபத்து உள்ளது. மேலும் விதைகள் உற்பத்தி விநியோகம் அனைத்தும் நிறுவனமயமாக்கப்படும்.  

நிறுவனமயமாகும் வேளாண்மை

விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் சட்டங்களை இயற்றும் இதே மத்திய அரசு பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. இதன் ஒரு அம்சமாக மத்திய அரசின் கீழ் இயங்கும் உயிரி-தொழில்நுட்ப துறையின் தலைமையில் தனியார்-பொதுத்துறை கூட்டுத்திட்டங்கள் Biotechnology Industry partnership Programme (BIPP)  அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி மரபணுமாற்று தொழில்நுட்பம் போன்ற உயிரி-தொழில்நுட்பம் சார்ந்த மரபணுமாற்று விவசாய உற்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு செலவிடப்படும் தொகையை, திட்டதிற்கு ஏற்றவாறு, மத்திய அரசிடம்இருந்து மானியமாக பெறலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழாக மரபணுமாற்று பயிர்களை உற்பத்தி செய்வதற்காக மான்சான்டோவின் இந்திய நிறுவனமான Maharashtra Hybrid Seeds Company, Metahelix Life Science Private Limited மற்றும் Bejo Sheetal Seed Private Limited போன்றவை மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றன. 

விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு போகும் நிலையில் விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் இந்திய அரசு, நிறுவனங்களின் உரிமை காக்கும் சட்டங்களை இயற்றுவதும் மானியங்களை வாரி வழங்குவதும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். 

Thursday, 9 July 2015

கிராமங்களை அழிக்கும் துணிகர கனிமக் கொள்ளை


      கிராமங்களை அழிக்கும் துணிகர கனிமக் கொள்ளை



தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர பகுதிகளில் 25 ஆண்டுகளாக நடந்துவந்த கார்னெட் கொள்ளைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு. கிரானைட் கிங் பி.ஆர்.பி. மீது வீசப்பட்ட ஏவுகணைகளைபோல இதுவும் வீணாகி விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் கிழக்கு கடற்கரையின் தென் பகுதி மக்கள்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கார்னெட் உள்ளிட்ட கனிமவள வியாபாரம் தொடக்கத்திலிருந்தே வைகுண்டராஜன் கையில் சிக்கிக் கொண்டது. இந்த மாவட்டங்களில், வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ் , இண்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் மற்றும் எஸ்.டி.எஸ்.மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராஜன் ஆகியோரின் நிறுவனங்கள் கார்னெட் ஏற்றுமதியில் ஏகபோகத்தில் உள்ளன. இதில், வி.வி., பீச் , இண்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் வைகுண்டராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமானவை. கிரானைட் வியாபாரத்தில் பி.ஆர்.பி. என்றால் கார்னெட் வியாபாரத்தில் வைகுண்டராஜன். இவர் ராஜாவுக்கெல்லாம் ராஜா.
1974-ல் கனிமவளத்துறை முன்னாள் அதிகாரி செல்வராஜும், தூத்துக்குடி மணல் மாணிக்கமும் இணைந்து முதலில் கார்னெட் மணல் நிறுவனத்தை தொடங்கினர். ஒருகட்டத்தில் செல்வராஜ் துரத்தப்பட்டார். அவரை அழைத்து வந்து கார்னெட் தொழிலை தொடங்கினார் வைகுண்டராஜன். செல்வராஜ் 150 ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்த கார்னெட் உரிமம்தான் இன்றைக்கு வைகுண்டராஜனை பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராக்கி உள்ளது.
கனிம வளத்தை எப்படிச் சுரண்டுகின்றன கார்னெட் நிறுவனங்கள்..?
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட கடற்கரையில் எடுக்கப்படும் கார்னெட் உள்ளிட்ட கனிமங்களை கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் வைகுண்டராஜன் தரப்புக்கு தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் சுமார் 15 கி.மீ. நீளத்திற்கான கடற்கரை ஏரியாவை அரசே 30 ஆண்டுகளுக்கு சொற்பமான குத்தகைக்கு தந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர் அரசு நிலத்தை ஆண்டுக்கு வெறும் ரூ.16.47-க்கு தந்திருக்கிறார்கள். இதுதவிர 2300 ஏக்கருக்கான பட்டா நிலங்களையும் தங்கள் வசம் வைத்திருப்பதாக அந்த நிறுவனமே தனது இணைய தளத்தில் விவரம் தந்திருக்கிறது. தூத்துக்குடி - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் கார்னெட் மணல் நிறுவனத்தினர் கடலை ஒட்டியே தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். அதற்குள்ளே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாபடி பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தி இருக்கிறார்கள்.
வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் வளர்ந்த கதை...
நெல்லை மாவட்டம், திசையன்விளை - கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டராஜன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் அரிசி ஆலை, லாரிகள் வைத்து சாதாரணமாகத் தொழில் செய்தவர். கனிம தொழிலில் கால்பதித்த பிறகுதான் இந்திய பணக்காரர்களில் ஒருவரானார். இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதோடு, உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மிகவும் எளிமையானவர், காலில் செருப்புக்கூட அணிய மாட்டார், தனக்கு உதவியவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் - இதெல்லாம் வைகுண்டராஜனுக்கு வெளியில் இருக்கும் புகழாரங்கள். ஆனால், உள்ளுக்குள் அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. பத்து வருடங்களுக்கு முன்பு, சாத்தான் குளம், திசையன்விளை பகுதிகளில் வரவிருந்த டாடா-வின் டைட்டானியத் தொழிற்சாலையை தடுத்து நிறுத்தியபோது வைகுண்டத்தின் தலையும் உருண்டது. அனைத்து அரசியல் கட்சிகளிலும் அமைப்புகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கார்னெட் அதிபர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினரும், தென்னிந்திய திருச்சபையினரும் மனு கொடுத்ததே இதற்கு சாட்சி!
கடலோர மக்களின் போராட்ட வரலாறு...
கார்னெட் கொள்ளைக்கு எதிராக சுமார் 20 ஆண்டுகளாக அந்த ஏரியா மக்கள் குறிப்பாக மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், பணபலம், அரசியல் பலம் இவைகளுக்கு முன்பாக அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. கார்னெட் நிறுவனங்களுக்கு காவடி தூக்கும் காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது வழக்குகளை பாய்ச்சியதுதான் கடந்த கால வரலாறு.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், முத்தையாபுரம், பெரியசாமிபுரம், மேல்மாந்தை கடற்பகுதி. இவை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதிக்குள் வருகின்றன. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ள பகுதி இது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதியில் பல கிலோ மீட்டர்களுக்கு கடற்கரையை வெட்டி மணலை கடத்தி இருக்கிறார்கள். சில இடங்களில் கடலுக்கு உள்ளேயும் போய்விட்டார்கள். இங்கிருந்த சவுக்கு மற்றும் பனை மரங்களை பிடுங்கி எடுத்து இஷ்டத்திற்கு மணலை சுரண்டி இருக்கிறார்கள்.
பெரியதாழை பகுதியில் கடலில் கழிவு மண்ணை கொட்டி பாலைவனமாக்கி இருக்கிறார்கள். மீனவர்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளும் முழுவதுமாய் நாசம்! நெல்லை மாவட்டம் உவரியில் பசுமை தீர்ப்பாயத்தின் தடையையும் மீறி இஷ்டத்திற்கு தாது மணலை சுரண்டிவிட்டு, அந்தப் பள்ளத்தை கழிவு மண்ணை கொட்டி மூடி வைத்திருக்கிறார்கள். இங்கேயும் கடலுக்குள் மணலை அள்ளி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்...
வடக்கில் பாம்பன் தீவு முதல் தெற்கே தூத்துக்குடி வரை 21 தீவுகள் உள்ளன. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தின் கீழ் வரும் இப்பகுதியைப் பாதுகாக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதியில்தான் இத்தனை அத்துமீறல்கள் நடந்திருக்கு. கடல்சார் உயிரினங்களைப் பெருக்கம் செய்யும், சுனாமியின் வேகத்தை தடுத்து மக்களைக் காக்கும், சதுப்பு நிலக்காடுகளை அழிச்சிட்டாங்க" என்கிறார் தூத்துக்குடிமாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான காந்திமதிநாதன் கீழவைப்பாறு கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி, "கடலுக்குள்ள கழிவு மணலை கொண்டாந்து கொட்டுறதால மீன் பாடே குறைஞ்சு போச்சு. சுனாமியை தடுக்குறதுக்காக தொண்டு நிறுவனங்கள் கடலோரமா நட்டுக்குடுத்த கண்ணா செடிகளையும் வனத் துறை நட்ட சவுக்கு மரங்களையும் நாசம் பண்ணிட்டாங்க. கார்னெட்டை பிரிக்கிறதுக்காக கெமிக்கல் கலந்த தண்ணியைப் பயன்படுத்துறாங்க. அந்த கழிவுநீரால நிலத்தடி நீரும் கெட்டுப் போச்சு. இதனால, எங்க ஊருக்குள்ள புற்று நோய், கல் அடைப்பு, கிட்னி பிரச்னைகளால் பல பேர் பாதிக்கப்பட்டு, இதுவரை ஐம்பது பேர் வரைக்கும் போய் சேர்ந்துட்டாங்க" என்கிறார்.
பெரியதாழை ஆல்ஸ்டன், அமலன் ஆகியோர் கூட்டாக, "கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆட்சியரிடம் மனு குடுத்தோம். அவரு சோதனைக்கு வந்தப்ப, மத்த அதிகாரிகள் அவரை, பாதிப்பு இல்லாத வேற பகுதிக்கு கூட்டிட்டு போனாங்க. நாங்கதான் அவரை இங்க கூட்டிட்டு வந்து காட்டுனோம். ஆட்சியரே மிரண்டு போயிட்டாரு. இப்ப, இந்தப் பகுதியில கழிவு மணலைக் கொண்டாந்து கொட்டி கற்றாழை செடிகளை கொண்டாந்து நட்டு, இயற்கையா இருக்காப்புல செட்-அப் பண்ணிட்டாங்க. இந்த தகவல்களை எல்லாம் ககன் தீப்சிங் பேடியிடம் சொல்லி இருக்கிறோம். கடலை ஒட்டிய உள்பகுதியில் கனிமங்கள் உள்ள செம்மண்ணை வெட்டி எடுக்காங்க. அதை சுத்திகரித்து வெளியாகும் கழிவுநீரை கடல்ல விடுறதால, கடல் நீரே சிவப்பாகி, மீன்களும் அழிஞ்சு போகுது. மொத்தத்துல, அவங்க கொழிக்கிறதுக்காக எங்களை ஒழிக்கப் பாக்காங்க" என்றார்கள்.
தங்களோட சப்போர்ட்டுக்கும் ஆளுங்க வேணும்கிறதுக்காக கார்னெட் முதலாளிகள் பல கிராமங்களை ரெண்டுபடுத்தி வைச்சிருக்காங்க. தூத்துக்குடியில் ககன்தீப்சிங் பேடிக்கிட்ட நாங்க மனு குடுக்க போயிருந்தப்பக் கூட, தலைக்கு ஆயிரமும் பிரியாணி பொட்டலமும் குடுத்து ஆட்களை கூட்டி வந்திருந்தாங்க. கம்பெனிக்கு ஆதரவாக பிஷப் ஒருத்தரும் வந்திருந்தாரு. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் கார்னெட் முதலாளிகளால் பதவிக்கு வந்தவர்களும் வந்துருந்தாங்க" என்று வேதனையை கொட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராம கமிட்டிகளின் கூட்டமைப்பு தலைவர் ஜோசப், ’சின்ன வயசுல, செருப்பில்லாமல் ஊரில் நடப்போம். இப்ப நடந்தா கால் பொத்துடும். இயற்கையான மணலை சூடுபடுத்தினால் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போகாது. எவ்வளவு சூடுபடுத்தினாலும் அதே வெப்பநிலையில் இருக்கும். கார்னெட் சுரண்டலால் மணலின் இயற்கைத் தன்மை மாற்றப்பட்டதால், கதிரியக்கத் தன்மை உருவாகி மணலின் வெப்பம் பல மடங்கு அதிகரிச்சிருச்சு" என்றார்.
வேளாண் விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன், "மோனோசைட்டை தனியார் வைத்திருக்கக் கூடாது. அது சட்டவிரோதம், சமூகவிரோத செயல். மோனோசைட்டில் தோரியம் இருப்பதால் இதற்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கொடுக்கிறார்கள். இதனால், இங்கிருந்து சட்டவிரோதமாக கன்டெய்னர்கள் மூலம் மோனோசைட்டை கடத்துறாங்க.
இங்குள்ள கார்னெட் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவித தடுப்புக் கவசங்களும் இல்லை. இதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துட்டு இருக்காங்க. இப்பகுதியில் கதிர்வீச்சு இருக்கதால கழலைக் கட்டி, இதய நோய்கள், வால்வு பிரச்னைகள் வரும். கேன்சர் வரலாம். நாங்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 31 பேரும் , தோவாளையில் 12 பேரும், நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 42 பேரும் மூளை குன்றிய பிள்ளைகள் இருக்கிறார்கள். கதிரியக்கமானது மரபணுக்களைத் தாக்கி, அடுத்த தலைமுறைக்கும் புற்றுநோயைக் கடத்தும். இது தொடர்பாக பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், பயத்தால் முடிவுகளை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள்" என்கிறார்.
முன்னாள் அரசுச் செயலரும், நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான சுந்தரம், "அந்த முக்கிய நிறுவனம் பல ஆயிரம் கோடிக்கு கார்னெட் மணலை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி இருக்கிறது. அதுகுறித்த ஆவணங்களை நான் திரட்டினேன். மூன்று மாவட்டங்களிலும் நடந்த கடற்கரை மணற்கொள்ளை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் 1500-க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தேன். தமிழக அரசின் தலைமைச் செயலர் தொழில்துறை செயலர் உள்ளிட்டவர்களுக்கும் மனு அனுப்பினேன் எந்த நடவடிக்கையும் இல்லை.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.96,120 கோடி
2011 மே மாதம் வரை தமிழ்நாட்டில் 43 உரிமங்கள் கடற்கரை மணல் எடுக்க வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் 36 வைகுண்டராஜனின் நிறுவனங்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மேலும் எட்டு உரிமங்களை வைகுண்டராஜனுக்கு கொடுத்தார்கள். 1999-ம் ஆண்டிலிருந்து அந்த முக்கிய நிறுவனத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 96,120 கோடி ரூபாய். கார்னெட் நிறுவனங்களுக்காக அரசு புறம்போக்கு நிலங்கள் மிகவும் சொற்பமான தொகைக்கு 30 ஆண்டுகால லீசுக்கு விடப்பட்டுள்ளன. 1996ல் நெல்லை மாவட்டம் , இருக்கன் துறை கிராமத்தில் 34.35 ஹெக்டோ் கடற்கரை புறம்போக்கு நிலத்தை ஆண்டுக்கு வெறும் 16.74 ரூபாய்க்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். இப்படி பல இடங்களில் அரசின் கடற்கரை புறம்போக்கு நிலங்கள் மணல் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.
2007-ம் ஆண்டுதான் இல்மனைட், ரூடைல், சிர்கான் போன்ற அரிய கனிமங்களுக்கு அணுசக்தி சட்டம், 1962-லிருந்து விலக்களிக்கப்பட்டது. ஆனால் இவற்றை, 1998-லிருந்து ஏற்றுமதி செய்வதாக அந்த முக்கிய நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான வரியையும் அந்த நிறுவனம் செலுத்தவில்லை" என்றார்.
விதிமீறல்கள் என்னென்ன...
கார்னெட் மணலை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் மோனோசைட்டை திரும்ப அரசிடம் ஒப்படைக்கவில்லை. இது அணு சக்தி சட்டம் 1962 ற்கு முரணானது . மோனோசைட் போன்ற கதிர்வீச்சு கனிமங்களைப் பிரித்தெடுக்க அணுசக்தித் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. இதுவும் அணுசக்தி சட்டம் 1984 ற்கு முரணானது.
மோனோசைட்டில் தோரியம் உள்ளதால் மோனோசைட் கையாளப்பட்டது தொடர்பான ஆண்டறிக்கை அணுசக்தித் துறைக்கு ஒவ்வோராண்டும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வறிக்கை கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் கார்னெட் நிறுவனங்கள் முறையான அனுமதி பெறவில்லை. கார்னெட் ஏற்றுமதிக்கு முன்பாக அணுசக்தித் துறையின் கனிமப்பிரிவிடம் மாதிரிகளை அனுப்பி மோனோசைட் இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நிலங்கள், காடுகளில் கனிமங்கள் எடுப்பது சட்டப்படி குற்றம். கார்னெட் நிறுவனங்கள் இந்த குற்றத்தைத் தெரிந்தே செய்திருக்கின்றன.
தமிழ்நாடு சிறு கனிம சட்டம் 1959 விதி 36(C)-ன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தொழில் செய்ய வேண்டும். கார்னெட் நிறுவனங்கள் இதையும் கண்டுகொள்ளவில்லை.
உண்மை அறியும் குழு என்ன சொல்கிறது..
கார்னெட் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கம் குறித்தும் அவர்களின் அத்துமீறல்களால் உருக்குலைந்து கிடக்கும் மீனவ கிராமங்கள் குறித்தும் ஐந்து நாட்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு.
இதுகுறித்து வாஞ்சிநாதனிடம் பேசினோம். "மூன்று மாவட்ட கடலோர கிராமங்களிலும் கார்னெட் மாஃபியாக்கள் கைக்கூலிகளை வைத்து பொது அமைதியை குலைத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணமான கார்னெட் அதிபர்கள் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக அரசின் பல்வேறு சட்டங்களை மீறிய குற்றங்களை இழைத்துள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலை ஊட்டி வளர்த்த உள்ளூர் அதிகாரிகளை வைத்து இந்த முறைகேடுகளை விசாரிப்பது கண்துடைப்பு நாடகம். மத்திய மாநில அரசுகளும் இதில் குற்றவாளிகளாக இருப்பதால் ஸ்பெக்ட்ரம் வழக்கைப் போல உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் இந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் போல, அரசு இத்தொழிலை நடத்தி சந்தை விலைக்கு கனிமங்கள் விற்கப்பட்டிருந்தால் இவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்ற முறையில் இழப்பீடு கணக்கிடப்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு அளவிட முடியாதது. கார்னெட் நிறுவனங்கள் மோனோசைட்டைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே இதுவரை பிரித்தெடுக்கப்பட்ட மோனாசைட் குறித்து அணு விஞ்ஞானிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்களின் சட்டவிரோத மணல் கொள்ளையால் மீனவர்களுக்கு புற்றுநோய், சிறுநீரக நோய், தோல்நோய், எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும். இந்த முறைகேடுகளில் சம்பந்தபட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக கார்னெட் மணலை கொள்ளையடித்த நிறுவனங்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். ககன்தீப் சிங்கின் அறிக்கையை உடனடியாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.
என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
*
கொள்ளை போகும் கனிமங்கள்...
தென் மாவட்ட கடற்கரைகளில் உள்ள கார்னெட், இல்மனேட், ரூடைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்கள் மிகவும் அரிய வகையைச் சேர்ந்தவை. ஊட்டி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து ஆறுகளால் கடத்தி வரப்பட்ட இந்தக் கனிமங்கள், தென் மாவட்டக் கடற்கரைகளில் குவிந்துள்ளன. பல லட்சம் வருடங்களாக குவிக்கப்பட்ட இந்தக் கனிமங்கள் தான் இப்போது கொள்ளைபோய்க் கொண்டிருக்கின்றன.
கார்னெட்
மாசு இல்லாத இந்தக் கனிமம் கோமேதகம் வகையைச் சேர்ந்தது. உப்புக்காற்றால் சேதமடைந்த கப்பல்கள், கட்டிடங்கள், சிலைகளைத் தூய்மைப்படுத்த, கண்ணாடி, செயற்கை கற்கள், அலுமினியம், டைட்டானியத்தைத் துண்டிக்க, நீரை சுத்தப்படுத்த, கணினித் திரை, மூக்குக் கண்ணாடி, வால்வுகள் பாலீஷ் செய்ய இப்படி பலவகைகளில் கார்னெட் பயன்படுகிறது.
இல்மனைட்
தேவை அதிகம் உள்ள இக்கனிமம் பெயின்ட், பிளாஸ்டிக் உயர்தர காகிதம், வெல்டிங்ராடு, டைட் டானியம், அணுசக்தி நீர்மூழ்கிக் கட்டமைப்பு, விளையாட்டு, மருந்து, அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
சிர்கான்
18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்ட சிர்கான் உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகள், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்கள் தயாரிக்க, துருப்பிடிப்பு மற்றும் அரிப்பைத் தடுக்க பயன்படுகிறது. அணுஉலைக் கட்டமைப்பில், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை- கழிவறை உபகரணங்கள் தயாரிப்பிலும் சிர்கான் பயன்படுத்தப்படுகிறது.
ரூடைல்
டைட்டானியத்தின் மூலப்பொருள் இது. பெயின்ட், பிளாஸ்டிக், ஜவுளி உற்பத்தி, வெல்டிங்ராடு, நகை, விண்வெளி உபகரணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
மோனோசைட்
தோரியத்தை உள்ளடக்கிய கனிமம் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

மேற்குலகின் குப்பைக்கூடையாகும் இந்தியா..!

மேற்குலகின் குப்பைக்கூடையாகும் இந்தியா..!

இந்தியர்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பார்கள்: ஆனால் வீட்டின் குப்பைகளை தெருவில் கொட்டிவிடுவார்கள் என்று நகைச்சுவையாக சொல்வதுண்டு. வீட்டில் உருவாகும் குப்பைகள் பெரும்பாலும் எந்த ஆபத்தும் இல்லாதவை. ஆனால் ஆபத்து நிறைந்த குப்பைகளும்கூட, தெருவில் கொட்டப்படுகிறது என்பது கவலைக்குரிய செய்தி.
குறிப்பாக தொழிற்சாலைகளில் உருவாகும் குப்பைகளில் பெரும்பாலானவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த குப்பைகளை கையாள்வோர் மட்டுமன்றி, அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவைகளையும் மாசுபடுத்தும் இயல்புடையவை. உதாரணமாக சாயப்பட்டறைகளையும், தோல் தொழிற்சாலைகளையும் கூறலாம். இங்கு உருவாகும் கழிவுகள் உரியமுறையில் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும்போது நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் பெருமளவில் பாதித்து பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.
மக்கள் நலன் காக்கும் மருத்துவமனைகளிலும் பல்வேறு குப்பைகள் உருவாகின்றன. மருந்துப்பொருட்கள், சிகிச்சைப்பொருட்கள், மனித உடலின் பாகங்கள் உள்ளிட்ட பலபொருட்களும் கழிவாக மாறும்போது பெரும் நச்சுத்தன்மையை உருவாக்குகின்றன. எனவே இந்த கழிவுகளை அவற்றின் நச்சுத்தன்மையை அகற்றிவிட்டே வெளியேற்ற வேண்டும் என்று சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகளும், பிரபல மருத்துவமனைகள் உட்பட தனியார் மருத்துவமனைகளும் இந்த சட்டத்தை எந்த அளவு மதிக்கின்றன என்பது கேள்விக்குறியே.
இதுபோன்ற நச்சுப்பொருட்கள் கேரள மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்டு கோவை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கேட்பாரற்ற நிலங்களில் கொட்டப்படுவதாக வரும் செய்திகளை படித்திருக்கலாம். நம் வீடுகளில் உள்ள கழிவறைக்கழிவுகள் எங்கு செல்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த கழிவுகளும்கூட அருகாமைப்பகுதியில் உள்ள கேட்பாரற்ற நிலங்களில்தான் கொட்டப்படுகிறது.
இந்தக்குப்பை விவகாரம் ஒரு சர்வதேச பிரசினையாகும். இதற்காக ஐ.நா.சபை சார்பில் மாநாடுகள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அது விருப்ப உடன்படிக்கை என்ற பெயரில் சட்டமாகவும் உள்ளது. ஆனால் இந்த விருப்ப உடன்படிக்கை என்பது கட்டாயமானது அல்ல. நாடுகள் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த சட்டத்தை அந்த நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியும். எனவே எந்த சர்வதேச சட்டத்தையும் மதிக்கும் வழக்கம் இல்லாத அமெரிக்கா முதல், அமெரிக்கப்பாதையில் நடைபோட விழையும் இந்தியாவரை பல்வேறு நாடுகள் இந்த விருப்ப உடன்பாட்டை புறக்கணித்துள்ளன. அப்படியே ஏற்பளிப்பு செய்தாலும், முழுமையாக அமல் படுத்துவதில்லை. இதன் விளைவுகள் இந்திய மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.
அமெரிக்காவின் 9/11 கழிவுகள் இந்தியாவில்..!
அமெரிக்கா மிகவும் பாதுகாப்பான நாடு என்ற மாயையை விலக்கிய 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அந்நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்தியாவையும் பலவிதங்களில் பாதித்தது. அதில் முக்கியமானது தாக்கி சிதைக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்துள்ள ட்வின் டவரின் நச்சு நிறைந்த கழிவுகள் இந்தியாவிற்குத்தான் வந்தன.
பிரோஸ்னா, ஷென் குவான் ஹை மற்றும் பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்களில் இரும்புக்கழிவுகள் இந்தியாவிற்குள் வந்தன. அவற்றில் பிரோஸ்னா கப்பலில் மட்டும் சுமார் 30 ஆயிரம் டன் எடையுள்ள இரும்புக்கழிவுகள் வந்ததாக தெரிகிறது. இந்த இரும்புக் கழிவுகளுடன் நச்சுத்தன்மை வாய்ந்த அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின்கள், பாலி குளோரினேடட் பைபினைல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன.
இந்த பிரசினை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் குரல் எழுப்பினர். அப்போது துறைமுக அதிகாரிகள் கூறிய பதில்: இரும்பை இறக்குமதி செய்வது சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையே! அதில் நச்சுக் கழிவுகள் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் நிரூபித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்!!
மின்னணுக் கழிவுகள்!
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பிரசினைகளுள் முதன்மையானது: மின்னணுக் கழிவு மேலாண்மை. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் ஆகிய அனைத்தும் பயன்படுத்தியபின் குப்பையாகி விடுகிறது. ஆனால் இந்த குப்பைகள்தான் மிக அதிக அளவில் நச்சுத்தன்மையுடன் இருக்கின்றன.
இந்த மின்னணு சாதனங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தும் அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளும், மின்னணுக் கழிவுகளை சட்டவிரோதமாக குவித்து வைக்க இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏழை ஆசிய நாடுகளையே குறிவைக்கின்றன.
ஏழை ஆசிய நாடுகளின் குழந்தைகளுக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்துவது போன்ற “தர்ம காரிய”ங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை கொடையாக அளிப்பது என்ற பெயரில் இந்த குப்பைகள் இந்தியாவிற்கு அனுப்பப் படுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடமுடியாது. அவற்றில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கியபிறகே அவற்றை குப்பையில் போட முடியும். அவ்வாறு நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு ஆகும் செலவில் பத்தில் ஒருபங்கு செலவில் அந்த குப்பைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யமுடிகிறது.
இந்த மின்னணுக் குப்பைகள் இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்களால் டன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்கப்படுகிறது. ஒரு டன் மின்னணுக் குப்பையில் சுமார் 10 கிராம் தங்கம், 30-40 கிலோ செம்பு, மேலும் அலுமினியம், வெள்ளி, சில நேரம் பிளாட்டினம் கூட கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் இந்திய தொழிலதிபர் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடிகிறது. ஆனால் இந்தப் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழிலாளர்களுக்கு அந்த மின்னணுக்குப்பைகளில் உள்ள நச்சுப்பொருட்களால் புற்றுநோய், காச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிக்கும். அதனால் என்ன? அவர்கள் படிப்பறிவற்ற, கேட்பாரற்ற தொழிலாளர்கள்தானே??
இவ்வாறு இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் மின்னணுக் கழிவுகள் வருகின்றன. இதில் இந்திய தொழிலதிபருக்கு எத்தனை கோடி லாபம்? அதில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு? என்றுதான் பார்க்கவேண்டும். இந்தியா ஒளிர வேண்டும் அல்லவா!
நகராட்சி குப்பைகள்!
மேற்கூறப்பட்ட இரும்பு, மின்னணு போன்றவை தவிர்த்த குப்பைகளும் இந்தியாவிற்குள் வந்தவண்ணம் உள்ளன. புகழ்பெற்ற ஐடிசி போன்ற நிறுவனங்கள் இந்த கழிவுகளை பல்வேறு பெயர்களில் எடுத்து வருகின்றன. அவற்றில் முக்கியமானவே நகராட்சி குப்பைகள்.இந்த குப்பைகளில் எதுவும் இருக்கும். அண்மையில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏராளமான குப்பைகள் இவ்வாறு வந்து இறங்கி இருப்பதாக செய்திகளை படித்திருக்கக்கூடும். லேடக்ஸ் எனப்படும் ரப்பர் தொழிற்சாலைக்கழிவுகள் என்ற பெயரில் வந்த கழிவுகளில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட நச்சுப்பொருட்கள் கலந்த மருத்துவக்கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் இருந்ததாக தெரிகிறது.
அணுக்கதிர்வீச்சு கழிவுகள்!
மேலை கூறப்பட்ட கழிவுகளைப்போல எளிதில் அடையாளம் காண முடியாதவை அணுக்கதிரியக்க கழிவுகள். ஏனெனில் அணுக்கதிரியக்கத்திற்கு நிறமோ, மணமோ கிடையாது. எனவே மெத்தப்படித்தவர்கள்கூட அணுக்கதிரியக்கத்தை அதற்கான உபகரணங்கள் இல்லாமல் கண்டுணர முடியாது. மேற்கூறப்பட்ட கழிவுகளுக்குள், குறிப்பாக உலோகக்கழிவுகளுக்குள் அணுக்கதிரியக்க கழிவுகள் ஊடுவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் என்ன?
ரஷ்யாவின் செர்னோபில்லில் அணுஉலை வெடித்து விபத்து ஏற்பட்டபோது உருவான அணுக்கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்தியாவிற்குள் வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தபோது இந்திய அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டதா
?அல்லது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப்பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சந்தேகம் எழுப்பப்பட்டதாக மக்கள்தான் கவலைப் பட்டார்களா?
இதற்கிடையில் மரபணு மாற்று உணவுப்பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அறிவியலை மதமாக வழிபடும் சிலர், அறிவியலின் பெயரால் விஷத்தையே கொடுத்தாலும் அமுதமாக நினைத்து அருந்த வேண்டும் என்று கூறுகின்றனர். மரபணு மாற்று உணவுப்பொருட்களால் நுகர்வோருக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் மக்களிடமோ இது குறித்து தேவையான விவாதங்கள் எழவில்லை.
நமக்குதான் பேசுவதற்கு அரசியல், சினிமா என்று எத்தனை முக்கிய விவகாரங்கள் இருக்கின்றன. இப்போது மக்களின் அறிவை மேம்படுத்துவதாகக்கூறி வழங்கப்பட்ட இலவச வண்ணத்தொலைக்காட்சி வேறு வந்துவிட்டது. அதில் "மானாட, மயிலாட" பார்த்துக்கொண்டிருந்தால் போதுமானது.
பாதாள சாக்கடைக்குள் சிக்கி சுகாதாரத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் செய்திகள் நமக்கு புதியவை அல்ல. ஆனால் இதுபோன்ற பிரசினைகள் நமது வீட்டுக்கதவை தட்டும்வரை நாம் கவலைப்படாமல் இருக்கப் பழகிவிட்டோம்.
இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை இந்தியாவிற்குள் அனுமதித்து இந்தியர்களின் உயிருக்கு உலை வைக்கும் இந்த வணிகம் குறித்து படித்தவர்கள் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஏனென்றால் இதுபோன்ற தொழில்கள் ஈடுபடுபவர்கள் கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கிய தலித், சிறுபான்மை மக்களும் பெண்களும்தான். மீறி யாராவது கேள்வி எழுப்பினால், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழலாம். இந்தியாவின் இறையாண்மையை ஏலம் விடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உள்ளது.
நாம் என்னதான் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் நச்சு வளையம் வேகமாக சுருங்கி வருகிறது. நமது கழுத்தை அந்த வளையம் சுருக்குவதற்கு அதிக நாட்கள் இல்லை.
என்ன செய்யப்போகிறோம்?

விவசாயிகளுடன் விளையாடும் மான்சாண்டோ

விவசாயிகளுடன் விளையாடும் மான்சாண்டோ: வேடிக்கை பார்க்கும் அரசு!

உலகில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு 2-வது இடம். ஆண்டுக்கு 240 லட்சம் பேல்கள் பருத்தி (ஒரு பேல் என்பது 170 கிலோ பருத்திப் பொதி) இந்தியாவில் உற்பத்தியாகிறது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை நம்பி 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன.
ஆனால், பருத்தி விவசாயிகளுடன்தான் விளையாடுகிறது மான்சாண்டோ நிறுவனம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. பருத்தி, ஆடைக்குத்தானே பயன்படுகிறது; இதனால் மனிதருக்கு என்ன பாதிப்பு என்று மான்சாண்டோவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. இருந்தாலும்கூட, இந்த பி.டி. பருத்தியில் கிடைக்கும் பருத்திப் பிண்ணாக்கை மட்டுமல்ல, பருத்தி இலையைத் தின்னும் ஆடுகள்கூட இறக்கின்றன. இந்த ஆடுகளின் பால் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூட இயற்கை விவசாயப் போராளிகள் குரல் கொடுத்து ஓய்ந்துபோனார்கள்.

இப்போது மான்சாண்டோ நிறுவனம் ரொம்ப நியாயஸ்தன் போல ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதாவது, "குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுவிட்டதால் இனிமேல் பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' என்று யாரும் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது.

மான்சாண்டோ இந்த அறிக்கையை நியாயஸ்தன் போல வெளியிட்டாலும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் அம்பலப்பட்டு இருக்கின்றன. ஒன்று, புழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை பெற்ற பி.டி. விதைகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரைதான் உரிமத்தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத்தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். ஆகவே, தற்போது புதிய ரகம் என்ற பெயரில் பி.டி.பருத்தியின் இரண்டாவது ரகத்தை மான்சாண்டோ அறிமுகம் செய்கிறது. முதல் ரகம் தகுதியற்றது என்று சொல்வதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இரண்டாவது ரகத்துக்கு மாறியே ஆக வேண்டும்.

இந்த உத்தி இந்தியாவுக்குப் புதிது. அமெரிக்காவுக்குப் பழையது. உலகில் 90 சதவீத உயிரி-தொழில்நுட்பப் பயிர்களைக் கையாளும் மான்சாண்டோ, அமெரிக்காவில் அறிமுகம் செய்த மரபீனி மாற்றப்பட்ட சோயாபீன் விதைகளுக்கான உரிமத்தொகை பெறும் உரிமை 2014-ல் முடிகிறது. ஆகவே, அங்கேயும் புதிதாகக் காப்புரிமை பெற்றுள்ள இரண்டாம் வகை சோயாபீன் விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது மான்சாண்டோ.

மத்திய பருத்தி ஆய்வுக் கழகத்துக்கு இதுபற்றி தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டதாக மான்சாண்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் கூறியபோதிலும், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு இதுவரை தகவல் தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. இத்தகைய பி.டி. ரக விதைகளுக்கு அனுமதி அளிப்பதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். ஆனால் அவர்களுக்கு மான்சாண்டோ அறிக்கை வெளியிட்டு, பத்திரிகையில் வெளியான பிறகுதான் தகவல் தெரியும் என்றால், நம்ப முடிகிறதா!

வியாபாரத்துக்காக மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்தவொரு பி.டி. ரக பயிருக்கும் அனுமதி பெறலாம், திடீரென்று இந்த விதை சரியில்லை; ஆகவே எங்களுடைய அடுத்த தயாரிப்பு விதைகளை வாங்கு என்று சொல்லலாம், விலையை தானே நிர்ணயிக்கலாம் அல்லது தான் விரும்புகிற விலையை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை வளைக்கலாம்...ஆனால் விவசாயிகள்? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பருத்தி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமோ பொறுப்போ இல்லாமல் மத்திய அரசு இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை இந்திய விவசாயிகளிடம் நெருங்கவிடுகிறது. 40 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் முடிவுகளில்தான் இருக்கிறது என்ற பச்சாதாபம்கூட அரசிடம் இல்லை. மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் தெம்பில்லை.

இதே நிலைமைதான் பி.டி கத்தரியிலும் ஏற்படும் என்பது நிச்சயம். இப்போது பி.டி மக்காச்சோளத்தை நமது வேளாண் பல்கலைக்கழகத்தில் கள ஆய்வு நடத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். இன்னும் 40 உணவுப் பயிர்களுக்கு ஆய்வுகள் நடக்கின்றன.

ஒரு விவசாயி, கிராமப்புறச் சூழலில் கிடைக்கும் காட்டுத்தழை, வீட்டுக்குப்பை, ஆடு மாடுகளின் சாணம் என்று வயலில் போட்டு, தனது மாடுகளைக் கட்டி உழுது, அறுவடை செய்து, அடுத்த சாகுபடிக்கு விதைநெல் எடுத்து வைத்து, மற்றதை விற்றுப் பணம் பார்த்து.... அந்த அமைதியான வாழ்க்கையை விரட்டுகின்றன மான்சாண்டோ நிறுவனங்கள். அதற்குத் துணை போகிறது அரசு.

இன்றைய விவசாயி ரசாயன உரத்துக்காகச் செலவிட வேண்டும். ரசாயன உரம் விற்போர் கொழிப்பார்கள். டிராக்டரையும், அறுவடை இயந்திரங்களையும் நம்பியே வாழவேண்டும். இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் கொழிப்பார்கள். விதைகளுக்கும் மான்சாண்டோவைப் போன்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும். இத்தனையையும் மீறி, மழை பெய்து, விளைந்தால், அதற்கும் நியாயமான விலை கிடைக்காது. விவசாயத்தை அழிப்பதற்கு இதைவிட நல்ல உத்தி இருக்க முடியுமா!

இதையெல்லாம் மீறி இந்தியாவில் விவசாயம் நடக்கிறதென்றால், மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேறென்ன!

விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள், தற்சார்பு தன்மைகொண்ட பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுவதைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது

பசுமைப் புரட்சியின் கதை

பசுமைப் புரட்சியின் கதை: எதில் பற்றாக்குறை? யாருக்குப் பற்றாக்குறை?

‘1960களின் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி எப்போது குறிப்பிட்டாலும், அது ‘உணவு உற்பத்தியில் பற்றாக் குறை’ என்றே பரவலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் உணவு உற்பத்தி படிப்படியாக அதிகமானது; இந்த உணவு, விவசாயிகள் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட கிராமப் புறத் தொழிலாளர்களல்லாத, உணவுச் சந்தையை நம்பியிருந்த மற்றவர்களைச் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. 1957இல் வெளிவந்த உணவு தானிய விசாரணைக் குழு அறிக்கை (Foodgrains Enquiry Committee Report) இதை நன்றாக விளக்கியிருக்கிறது. “. . . திட்டங்கள் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு அதன் விளைவாக உற்பத்தியும் அதிகரித்தது. ஆனால் சந்தையில் விளைபொருள்களின் இருப்பை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க இந்த விளைச்சல் உதவவில்லை” ஆக, உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமல்ல நம் அரசாங்கத்தின் பிரச்சினை. உற்பத்தியை நகர்ப்புறச் சந்தைக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பதுதான் அதன் மிகப் பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, விவசாயியை உணவுச் சந்தையுடன் இணையச் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கான ஒரு சின்ன யோசனை இதோ! விவசாயி (இடுபொருட்களுக்காக) கடன் வாங்கி விவசாயம் செய்தால், அவர் தன் கடனை உடனடியாக அடைப்பதற்காக, தானே தக்கவைத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொண்டு, ஒரு பெரும் பங்கைச் சந்தைக்கு விட்டுக் கொடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தலாமே!!
ராக்கஃபெல்லர், ஃபோர்டு ஃபவுண்டேஷன்கள் நம் அரசாங்கத்தின் முன்வைத்த தீர்வு, ‘ஏற்கனவே நல்ல வளமான நிலங்களில் இந்தப் பசுமைப் புரட்சி திட்டத்தைப் புகுத்தினால், மிகையாக வரும் விளைச்சல் தானாகவே நகர்ப்புறங்களை வந்தடையும்’ என்பதுதான். இப்படித்தான், இந்தப் பரிசோதனைக்கு பஞ்சாப் -ஹரியானா பகுதிகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியாவில் பசுமைப் புரட்சி, ஏதோ ஓராண்டில் செயற்படுத்தப்பட்டு முடிக்கப்பட்ட ஒரு திட்டமல்ல. அது 1967இல் தொடங்கி 1978வரை பல திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் தொகுப்பாகும்.
கோதுமையில் “பசுமைப் புரட்சி”
மெக்ஸிகோவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனின் சர்வதேச கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையத்திலிருந்து (CIMMYT) இறக்குமதியான 18,000 டன் லெர்மா ரோஜோ 64-கி, மற்றும் சொனோரா - 64 ஆகிய ரகங்களை 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு கோதுமையில் பசுமைப் புரட்சியைத் தொடக்கிவைத்தது இந்திய அரசு. ஆனால் இந்த ரகங்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமாக இருந்தமையால் அவற்றை இந்தியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பிறகு நிறம் மாற்றி புதிய ரகங்களை வெளியிட்டனர். இந்த விதைகளை ஏற்கனவே மண் வளமும் நீர் வளமும் அதிகமாக உள்ள பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களில் பரவலாகப் பயிர்செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் திட்டம். குட்டை ரகக் கோதுமை விதைகளை நிலத்தில் விதைத்து, தேவையானபோதெல்லாம் நீர் கிடைக்குமாறு நீர்ப்பாசனத்தை அதிகரித்து, இரசாயன உரங்களை அள்ளிக் கொட்டி, பயிர்களுக்கு ஏற்பட்ட பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை ஒழிக்க இரசாயனங்களைத் தெளித்து, பெரிய அளவுகளில் உழுது அறுவடைசெய்ய இயந்திரங்களை உபயோகித்து, “நிலம் பாருங்கள் அள்ளிக் கொடுக்கிறது!” என்று பசுமைப் புரட்சியில் தங்கள் “வெற்றியை”க் கொண்டாடினர்.
பஞ்சாபில் மட்டும் 1965-66இல் 33.89 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 1985-86க்குள் 172.21 லட்சம் டன்னாக உயர்ந்தது. ஹரியானாவில் அதே சமயத்தில், 19.85 லட்சம் டன்னிலிருந்து, 81.47 லட்சம் டன்னாக உயர்ந்தது. பசுமைப் புரட்சியின் அனுகூலங்களை நன்றாக அனுபவித்த பெரிய விவசாயிகளின் உற்பத்தி சந்தைக்கு வந்தது!
பஞ்சாப் - ஹரியானாவில் நிகழ்ந்த கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு ‘பக்ரா நங்கல்’ அணை ஒரு முக்கியக் காரணமென்பதும் பரவலாக நம்பப்படும் ஒரு கருத்து. ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், பக்ரா நங்கல் அணை 1954ஆம் ஆண்டே செயற்பாட்டுக்கு வந்துவிட்டது. 1963-64ஆம் ஆண்டில், ஏற்கனவே (அதன் அதிகபட்சக் கொள்திறனான) 24.8 லட்சம் ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் அளித்துவந்தது. ஆனால் 1972வரை நாம் உணவு இறக்குமதி செய்துகொண்டுதான் இருந்தோம். பக்ராநங்கல் அணை, நீர்ப்பாசன வசதியை ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு சில இடங்களிலிருந்து வேறு சில இடங்களுக்கு மாற்றிவிடுவதை மட்டுமே செய்தது என்றும், கோதுமைப் புரட்சி நிகழ முக்கியமாக, ஆழ்குழாய்க் கிணறுகளே காரணம் என்றும் ஆராய்ச்சிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றன!
நெல்லில் “பசுமைப் புரட்சி”
சி. சுப்பிரமணியனின் சுயசரிதையில், அவருடைய திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த அந்த மூத்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான டாக்டர் ரிச்சாரியா அவர்கள். ஒருவேளை இரசாயன உரங்களையே உபயோகித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தால்கூட, நமது நாட்டு ரகங்களிலேயே குட்டையான, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட, குறுகியகால அறுவடை ரகங்களையே உபயோகிக்கலாம் என்று தன் ஆராய்ச்சியின் மூலம் காட்டினார். தலைசிறந்த நெல் விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவைக் கொண்டு தான் சேகரித்த 17,000 நாட்டு நெல் ரகங்களைக் கொண்டு, அற்புதமான ‘மேம்படுத்தப்பட்ட ரகங்களை’ அவர் உருவாக்கிக்கொண்டிருந்தார். நம் நாட்டில், ஏன் உலகிலேயே நெல் ஆராய்ச்சியில் இத்தனை முக்கியமான பங்கு வகித்த டாக்டர் ரிச்சாரியாவின் பெயர்கூட, சி. எஸ்ஸின் சுயசரிதையில் இடம்பெறவில்லை.
ஹெக்டேருக்கு 3.7 டன்னுக்கு மேல் விளைச்சலைக் கொடுக்கும் ரகங்களைத்தான் ‘உயர் விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties / HYVs) என்று இந்திய அரசாங்கம் நிர்ணயம் செய்திருந்தது. ரிச்சாரியா சேகரித்த 17,000 ரகங்களில் 9சதவிகிதம் இத்தகைய விளைச்சலைக் கொடுத்தன; 8சதவிகிதம் குறுகிய கால அறுவடைப் பயிர்கள். 237 வாசனை ரகங்கள் இருந்தன. விவசாயிகளுக்கு அதிக விலை பெற்றுத் தரும் பல உயர்ந்த (superior) ரகங்களும் உயர் விளைச்சல் ரகங்களாக உருவாக்கப் பட்டிருந்தன. சில முக்கியமான ரகங்களின் பட்டியல் இதோ!
* பஸ்தரைச் சேர்ந்த Gadur Sela (Bd:810) எனும் ரகம், ஹெக்டேருக்கு 9.8 டன், TD2 (Bd:45) 6.1 டன், Balkoni (Bd:504) 5 டன், JS5 (Bd:49) 4.8 டன், CR 1014 (Mrignain) 4.8 டன், Pallavi (Bd:193) 4.2 டன் விளைச்சலைக் கொடுத்தன.
* Badal Phool (Bd:21), Dhour (Bd:23), (Bd:49) மற்றும் Ram Karouni (Bd:1353) ஆகியன குட்டை ரகங்கள்.
* Dokra Dekri எனும் ரகம், உலகிலேயே மிக நீளமான அரிசி ரகம்.
* (பால்)கோவா அரிசி உலர்ந்த பாலைப் போன்ற சுவையைக்கொண்டது.
இத்தனை அற்புதமான நெல் ரகங்கள் நம் நாட்டிலேயே இருக்கும்போது, உருவாகியிருக்கும்போது வெளிநாடுகளிலிருந்து, கோடிக்கணக்கில் பணம் செல வழித்து, பெரிய அளவில் சோதனை செய்து பார்க்காத அந்நிய ரகங்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமே இல்லை என்று ரிச்சாரியா கூறிக்கொண்டிருந்தார். (தாய்வான், ஜப்பான் போன்ற) அன்னிய நாடுகளிலிருந்து டன் கணக்கில் விதைகளை வாங்கி நம் நாட்டின் மண்ணில் விதைத்தால், அதுவரை நாம் கண்டறியாத பூச்சிகளையும் நோய்களையும் கூடவே கொண்டு வந்து விடும் விபரீதத்தில் முடியும் என்று எச்சரித்தார். ஆனால் ஒரு சில அன்னிய ரகங்களை மட்டும் உபயோகித்து, தீவிரமாகக் கண் காணித்து எச்சரிக்கையுடன், நீண்ட நாட்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய ரகங்களை உருவாக்குவதில் ரிச்சாரியாவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. அத்தகைய ஆராய்ச்சியில் அவரே ஈடுபட்டும் இருந்தார்.
‘சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்’ (IRRI) 1960இல் பிலிப்பீன்ஸ், மனிலாவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனால் நிறுவப்பட்டது. இந்த ஐ. ஆர். ஆர். ஐயின் அமெரிக்க இயக்குநரான ராபர்ட் சாண்ட்லர் அவர் தனது சுயசரிதையில் “அப்போது நான் ஒரு நெல் செடியை நேரில் கண்டதுகூட இல்லை!” என்று ஒப்புக்கொண்டுள்ளார். ‘நெல் பயிர் செய்வதில் அனுபவமே இல்லாத, நெல் ரகங்களின் germplasm ஒன்றும் கையில் இல்லாத நாடான அமெரிக்காவுக்கு, ஐ. ஆர். ஆர். ஐ. நிறுவுவதில் அப்படி என்ன அக்கறை?’ என்கிற கேள்விக்கான விடையை (ஆசிய அரசியல்-பொருளா தாரத்தைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனும் நோக்கம்) முன்பே ஆழமாகப் பார்த்துவிட்டுத்தான் இந்தக் கட்டுரைக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைவுகூரவும். ராக்க ஃபெல்லர் ஃபவுண்டேஷன் முதலில் இந்திய அரசாங்கத்தை அணுகி, தரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தைத் (CRRI) தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. அப்போது சி. ஆர். ஆர். ஐயின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் ரிச்சாரியா “நெல் ஆராய்ச்சியைத் தனியார் நிறுவனத்தின் கட்டுப் பாட்டுக்குக் கொடுப்பது, விஞ்ஞானிகளின் சுதந்திரத்தை இழப்பதற்கு வழிவகுக்கும். ஆகையால், இந்த அமைப்பு ஒரு சுதந்திர ஆராய்ச்சி மையமாகவே செயல்பட வேண்டும்!” என்று அரசாங்கத்திடம் தன் கருத்தைத் தெரிவித்தார். அப்போதிருந்த அரசாங்கம், ரிச்சாரியாவின் வார்த்தைக்கு மரியாதை அளித்து, ராக்கஃபெல்லர்களுக்குக் கைவிரித்துவிட்டது. அதற்குப் பிறகுதான் மனிலாவில் அதன் தொடக்கம்.
ஐ. ஆர். ஆர். ஐச் சந்தைப்படுத்திய ஐ. ஆர்-8 நெல் ரகம் டன் கணக்கில் இந்தியாவிற்குக் கப்பலில் வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட ரிச்சாரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நேர்ந்த சந்திப்பொன்றில் சி. எஸ். “அதெல்லாம் எனக்குத் தெரியாது! ராக்கஃபெல்லர் நிறுவனத்தினர் நமக்கு அனுப்பிவிட்டார்கள்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்!” என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டார். இதற்குப் பிறகும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத, தங்கள் வளர்ச்சிப் பாதையில் குறுக்கே நிற்கும் ரிச்சாரியாவைப் பணியிலிருந்து நீக்கினால்தான் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாக சாண்ட்லர் சி. எஸ்ஸை நிர்ப்பந்தித்தார். அவருடைய நிர்ப்பந்தத்துக்கு இணங்க பணி இறக்கம் செய்யப்பட்டார் ரிச்சாரியா. அடுத்த மூன்றாண்டுகள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடியதன் விளைவாக, அவர் குடும்பத்தில் நிம்மதி குலைந்தது; குழந்தைகளின் கல்வியும் மனைவியின் உடல் நலமும் கெட்டன. முடிவில் 1970இல் நீதிமன்றம் ரிச்சாரியாவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து, சிஸிஸிமியில் மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவளித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார் ரிச்சாரியா. பின்னர் மத்தியப் பிரதேச அரசாங்கம் நெல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவுமாறு அவரைக் கேட்டுக்கொண்டது. மனம் தளராத ரிச்சாரியா ராய்பூரில் பிரம்மிப்பூட்டும் ‘மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை’ ஆறே ஆண்டுகளில் உருவாக்கினார். இவருடைய உதவியாளர்கள் இரண்டு வேளாண் பட்டதாரிகளும், ஆறு கிராமப் பணியாளர்களும் மட்டுமே! இந்நிலையத்தின் ஓராண்டு பட்ஜெட் ரூ. 20,000 மட்டுமே!
ஐ. ஆர். ஆர். ஐயிடம் நெல் ஆராய்ச்சியில் அனுபவமோ தரமான நெல் ரகங்களின் மூலப்பொருளோ (germplasm) இல்லாத காரணத்தால் வரிச் சலுகையையும் டாலர் சம்பளத்தையும் வேறு பல பலன்களையும் காட்டித் திறமை வாய்ந்த விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தது; பணத்தைக்கொண்டு மூலப்பொருள்களை வாங்க முயன்றது. இப்படித்தான், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளைத் தன் கீழ் கொண்ட பதவியிலிருந்து, 200 விஞ்ஞானிகளை மட்டும் கொண்ட ஐ. ஆர். ஆர். ஐயில் இயக்குநராகச் சேர்ந்தார் எம்.எஸ். சுவாமிநாதன். உண்மையில் இது ஒரு ‘பணி இறக்கம்’ என்றே பலராலும் கருதப்படுகின்றது.
இதற்கிடையே, ரிச்சாரியா எச்சரித்ததுபோலவே ஐ. ஆர்.-8, ஐ. ஆர்.20, ஐ. ஆர்.-26 என்று ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் இறக்குமதியாகிய ஐ. ஆர். நெல் ரகங்கள் எல்லாம் பூச்சி, நோய் தாக்கி நாடெங்கிலும் பெருத்த (30-100%) சேதங்களைச் சந்தித்தன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்ட ஐ. ஆர். ஆர். ஐ., இந்தியாவில் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த ரகங்களின் - “ஒன்றுக்கும் உதவாத இந்திய நெல் ரகங்கள்” என்று சமீபகாலம்வரை அது கேவலமாகப் பேசிய அதே ரகங்களின் - பூச்சி எதிர்ப்புத் தன்மையைத் தேடி இங்கே வந்தது. இந்தத் தேடுதலுக்காக இங்கே வந்த அமெரிக்கர்கள், அப்போது ஐ. சி. ஏ. ஆரில் பெரிய பதவியிலிருந்த எம். எஸ். சுவாமிநாதனின் உதவி கொண்டு இந்தியாவில் (சி. ஆர். ஆர். ஐ. உள்பட) பல இடங்களிலிருந்தும் நெல் ரகங்களைச் சேகரித்தார்கள். பிறகு ரிச்சாரியாவிடம் வந்து அவர் மத்தியப் பிரதேசத்தில் சேகரித்து வைத்திருந்த தரமான விதைகளைக் கொடுக்குமாறு கேட்டனர். அதற்குப் பதிலாக அவர்கள் தர முன்வந்த ரகங்கள் அனைத்தும் பூச்சி மற்றும் நோயால் எளிதில் பாதிப்படையும் தன்மை கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகத் தான் சேகரித்த விதைகளைத் தற்காலிகமாகத் தர மறுத்த ரிச்சாரியாவை ஒன்றுமில்லாமல் செய்யும் நோக்கத்தோடு, அவர் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி அமைப்பை ஒரேயடியாக மூடவைத்துவிட்டது ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய அறையிலிருந்த ஆராய்ச்சிப் பொருள்கள், அறிவியல்ரீதியான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றிக்கொண்டது. இந்திய அதிகார வர்க்கத்தில் இந்த ஃபவுண்டேஷனுக்கு இருந்த செல்வாக்கு அப்படிப்பட்டது.
இவ்வாறாக இந்திய நெல் ஆராய்ச்சி நிலையங்களில் நடந்து கொண்டிருந்த உயர்ந்த ஆராய்ச்சிகள் முடக்கப்பட்டன; நிறுத்தப்பட்டன. முழுக்க முழுக்க ஐ. ஆர். ஆர். ஐ. அறிமுகப்படுத்திய நெல் ரகங்களைக் கொண்டே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படத் தொடங்கின. கோதுமையைப் போலவே, அதிக அளவுகளில் இடுபொருட்களைக் கொண்டு ஐ. ஆர். ரகங்களின் விளைச்சலும் அதிகரிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டது.
வேளாண் ஆராய்ச்சியில் பொய்கள், ஊழல்கள், மோசடிகள்
சிகப்பு நிற சொனோரா-64 ரகத்தை ஒருவிதக் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி ஷர்பதி சொனோரா என்கிற புதிய ரகத்தை உருவாக்க முன்வந்தார் எம். எஸ். சுவாமிநாதன். இந்த புதிய ரகத்தில் லைசின் எனும் முக்கியமான அமைனோ அமிலத்தின் சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக மாக்சசே விருதையும் பெற்றார். ஆனால் பிறகு போர்லாக் பணிபுரிந்த சி. ஐ. எம். எம். ஒய். டி. நிறுவனமே சொனோராவிற்கும் ஷர்பதி சொனோராவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்தது. இது தனது ஆய்வுக்கூட உதவியாளர் செய்த தவறு என்று கூறிச் சமாளிக்க முனைந்தார் எம். எஸ். எஸ்.
மேலும், பசுமைப் புரட்சியை வெளியிட்ட ஐ. ஏ. ஆர். ஐயில் ‘உயர் விளைச்சல் ரகம்’ என்று கூறி ‘பைசாகி மூங்க்’ என்னும் ஒரு ரகப் பருப்பு வகையை வெளியிட்டது. அது அமோக விளைச்சலைத் தரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பயிரிட்ட எங்குமே சொல்லப்பட்ட விளைச்சலில் பாதியைக்கூடத் தாண்டவில்லை! மற்றொரு மக்காச்சோள ரகம், பாலில் உள்ள அளவுக்குச் சத்து நிறைந்தது என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் ஒரு பொய்யென்று நிரூபணம் ஆனது.
அதே சமயம், மிகுந்த சர்ச்சைக்குரிய வேறொரு செய்தி வெளிவந்தது. அது, மே 1972இல் டாக்டர் வினோத் ஷா என்னும் வேளாண் விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்ட செய்தி. மனம் உடைந்துபோன, அவமானத்துக்குள்ளாகிய சில வேளாண் விஞ்ஞானிகளின் தற்கொலைச் செய்திகள் ஏற்கனவே வெளி வந்திருந்தாலும், டாக்டர் ஷாவின் தற்கொலை ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்குக் காரணம், அவர் ஒரு வாலிபர் என்பதும், அவர் தற்கொலைக்கு முன்பு எம். எஸ். சுவாமிநாதனுக்கு எனக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதிவிட்டுச் சென்றதுமாகும். “உங்கள் சிந்தனா முறைக்குப் பொருந்துகிற விதத்தில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான பல புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன . . . சொந்தமான கருத்துகளும் ஆக்கபூர்வமான, அறிவியல்ரீதியான விமர்சனம் கொண்டவர்கள் பலியிடப்படுகிறார்கள்” என்று அதில் அவர் எழுதியிருந்தார். நாடாளுமன்றத்தில் டாக்டர் ஷாவின் தற்கொலை பெரிய புயலைக் கிளப்பிவிட, அரசாங்கம் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான டாக்டர் பி. பி. கஜேந்திர கட்கர் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. விசாரணையின் முடிவில், அது எம். எஸ்ஸுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. “ஐ. ஏ. ஆர். ஐயின் (Indian Agricultural Research Institute / IARI) இளநிலை விஞ்ஞானிகள் பலர் தங்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வெளியிடத் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று - சரியாகவோ தவறாகவோ - கருதுகிறார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துவராத காரணத்தாலோ அல்லது அறிவியல் ஆதாரமற்ற புள்ளிவிவரத்தை மேலிடத்திற்குத் தருவதற்குப் பதிலீடாக ஏதேனும் நன்மைகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதாலோ தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட முடியாத நிலை இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்” என்று அந்தக் குழு எச்சரித்தது.
1974இல், த நியூ சயன்டிஸ்ட் என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானப் பத்திரிகை, எம். எஸ்ஸின் லைசின் பொய்யை அம்பலப்படுத்தியது. எம். எஸ்ஸைக் கேள்வி கேட்ட டாக்டர் ஒய். பி. குப்தாவின் மாணவர்கள் அனைவரும் அவரிடமிருந்து காரணமே இல்லாமல் பிரிக்கப்பட்டனர்; அவருக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் குப்தா “நியாயமற்ற விதத்தில் நடத்தப்பட்டார்” என்றும், அவருடைய மேலதிகாரி நெறியற்ற முறையில் நடந்துகொண்டார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுவாமிநாதன் தலைமை வகித்த நிறுவனத்தின் கல்விப்புலக் குழுவை (academic council) “தடித்தனம் கொண்ட, இதயமற்ற, அதிர்ச்சிகரமான” என்றெல்லாம் விமர்சித்தது.
“அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வீரிய விதைகள் நீங்கள் சொல்வது போலவே நம்முடைய பாரம்பரிய விதைகளைவிடத் தாழ்வானதாகவே இருந்திருந்தால், எப்படி விவசாயிகளால் ஏற்கப்பட்டு கோடிக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டன? நம் விவசாயி என்ன அத்தனை முட்டாளா?” என்ற கேள்வி எழலாம். உலக வங்கியும் யு. எஸ். எய்ட் அமைப்பும் புதிய விதைகளை (அதோடு மற்ற இடுபொருட்களையும்) விவசாயிகள் மத்தியில் பரப்புவதற்காக, ஃபோர்டு மற்றும் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன்களுடன் கைகோத்துக்கொண்டு நிறைய கடனை வாரி வழங்கின. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் யு. எஸ். எய்டின் உதவியுடன் 1963இல் தேசிய விதைக் கழகம் (National Seed Corporation) நிறுவப்பட்டது. உலக வங்கியின் 13 மில்லியன் டாலர் உதவிகொண்டு 1969இல் டெராய் விதைக் கழகம் (Terai Seed Corporation) நிறுவப்பட்டது. 1971இல் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் மெக்நமாரா, விவசாய ஆராய்ச்சிக்கான சர்வதேச ஆலோசனைக் குழு (Consultative Group on International Agricultural Research- CGIAR) என்னும் அமைப்பை நிறுவினார். இதன் முக்கியப் பணி, உலகெங்கும் வளர்ந்துவரும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பது. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் (1966-71) வேளாண்மைக்கான அன்னியச் செலாவணி 1,114 கோடியாக வளர்ந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட முழு நிதியைவிட ஆறு மடங்கு அதிகம்.
புதிய விதைகளைப் பரப்புவதற்காக 1976இல் தேசிய விதைத் திட்டம் (National Seed Project) I-இன் மூலம் 25 மில்லியன் டாலரையும், 1978இல் திட்டம் II-இன் மூலம் 16 மில்லியன் டாலரையும் உலக வங்கி கொடுத்தது. இவை போதாதென்று 1990-91இல் இதே திட்டத்தின் மூன்றாம் நிலையில் 150 மில்லியன் டாலர் கடன் அளிக்கப்பட்டது. “விதைகளுக்கான தொடர்ச்சியான கிராக்கி எதிர்பார்த்த அளவு விரிவடையாததால் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பயிர்கள் விஷயத்தில், குறிப்பாக, நெல், கோதுமை போன்றவற்றில், விவசாயிகள் தங்களிடமே தக்க வைத்துக்கொள்ளும் விதைகள், விவசாயிகளுக்குள் பண்டமாற்று செய்துகொள்ளும் விதைகள் ஆகியவையே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. அதிக விளைச்சல் ரகங்களில் சில, மரபு சார்ந்த ரகங்களைக் காட்டிலும் வீரியம் குறைந்தவையாக இருந்ததால் விவசாயிகளிடத்தில் அவை அதிக வரவேற்புப் பெறவில்லை” என்று தேசிய விதைத் திட்டம்-3இன் ஆவணமே அழகாக விளக்கியுள்ளது.யாருடைய உதவியுமில்லாமல், தாங்களாகவே உருவாக்கிய நல்ல தரமான விதைகளை விவசாயிகள் கைமாற்றம் செய்துகொள்கிறார்கள் என்பது விவசாயியின்மீது உண்மையான அக்கறையுள்ள யாவருக்கும் ஒரு நல்ல சேதிதானே! ஆனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவப் போகிறோம் என்று பச்சைப் போர்வை போர்த்திக்கொண்டு இறங்கிய “பசுமைப் புரட்சி”யாளர்களுக்கு இதைவிட மோசமான சேதி இருக்க முடியாது! ஏனெனில் அவர்களுக்கு உண்மையில் தேவையாக இருந்த பண லாபம், ‘விதைக் கைமாற்றத்தால்’ எப்படி ஏற்படும்? அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மலட்டு விதைகளை விவசாயிகள் அதிகப் பணம் கொடுத்து வாங்கினால்தானே இது சாத்தியமாகும்! இத்தனை வேலைகளையும் திட்டமிட்டு, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, மாபெரும் விதைச் சந்தையை உருவாக்குவதற்காகத்தான் இந்த 150 மில்லியன் டாலர் கடனுதவி!
இத்தனை வன்முறைக்குப் பிறகும், அவையெல்லாம் அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் பசுமைப் புரட்சியின் “வெற்றிக்கொடி” பாமர மக்கள் மத்தியில் மேலோங்கிப் பறந்தது! 50 ஆண்டுகள் ஆகியும், “பசுமைப் புரட்சி”யின் பொய்யான சாகசக் கதைகள் எல்லாப் பக்கமும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் என்ன? நம் விவசாயத்தை மீட்க என்ன வழி?

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...