Monday 9 February 2015

பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 02

                             பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 02

வாணிகம் 
     பழந்தமிழர் காலத்தில் நடைபெற்ற வாணிக வளத்தைப் பற்றிய
சான்றுகள் அயல்நாட்டு வரலாற்றுக் குறிப்புகளினின்றும் நமக்குக்
கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்திலும் அகச் சான்றுகள் எண்ணற்றவை
உண்டு. வாழ்க்கை நலன்களுக்கான பல பண்டங்களும், ஏற்றுமதி செய்யப்பட்ட
பொருள்களும் தமிழகத்தில் உற்பத்தியாயின. பண்டைய தமிழர் ஈடுபட்டிருந்த
இரு பெரும் உற்பத்தித் தொழில்கள் உழவும் வாணிகமும். உழவுத்
தொழிலைச் சிறப்பித்து மக்களுக்கு அதன் பெருமையையும்
இன்றியமையாமையும் வலியுறுத்திக் கூறும் அளவுக்கு அத் தொழிலைவிட
வாணிகம் வளர்ந்திருந்தது. மக்களுள் பெரும்பாலார் வாணிகத்தில்
ஈடுபட்டிருந்தனர். சிலர் தலைமுறை தலைமுறையாகத் தாம் செய்துவந்த
தொழிலை மாற்றிக் கொண்டு வேறு தொழில்களையும் செய்து வந்தனர்.
புலவர்கள் வாணிகம் செய்தனர். மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார், மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார், உறையூர் இளம்பொன் வாணிகனார்,
உறையூர் மருத்துவன் தாமோதரனார், ஓதலாந்தையார், கச்சுப்பேட்டு
இளந்தச்சனார், கணக்காயன் தத்தனார், கணியன் பூங்குன்றனார், செய்தி
வள்ளுவன் பெருஞ்சாத்தன், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்,
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான், மதுரைக் கொல்லன் புல்லன்,
மதுரைத் தமிழ்க்கூத்தனார் ஆகியவர்கள் சங்ககாலப் புலவர்களுள் சிலர்.
அவர்கள் மேற்கொண்டிருந்த தொழில்களை அவர்களுடைய பெயர்களே
எடுத்துக்காட்டும்.

     இன்ப வாழ்க்கைக்கான பண்டங்கள் பலவற்றை உற்பத்தி செய்வதில்
தமிழ்நாட்டுக் கைவினைஞருடன் அயல்நாட்டுத்

     150. சிலப். 5 : 39, 5 : 58.
     151. மதுரைக். 430, 544; சிலப். 5: 63 (உரை)

தொழிலாளரும் கலந்து கொண்டனர். மகத நாட்டு இரத்தின 
வேலைக்காரர்கள், மராட்டியக் கம்மியர், அவந்தி நாட்டுக் கொல்லர்கள்,
யவனத் தச்சர்கள் ஆகியவர்கள் தமிழ்நாட்டுக் கம்மியருடன் கூடிக் 
கண்கவரும் பொருள்களைப் படைத்தார்கள் என்று மணிமேகலை
கூறுகின்றது.152 கோசல நாட்டு ஓவியர்களும், வத்தவ நாட்டு வண்ணக்
கம்மர்களும் தமிழகத்தில் பிழைப்பை நடத்தி வந்தனர். கம்மியர் செப்புப்
பானையைக் கடையும்போது அது பளபளவென்று மின்னுமாம்.153 

     ஓவியத்துக்கான வண்ணக் குழம்பு, பூசு சுண்ணம், குளிர்ந்த நறுமணக்
கூட்டுகள், விடுபூ, மலர் மாலைகள், பூச்சரங்கள், சந்தனம், பச்சைக் கருப்பூரம்
போன்ற நறுமணப் பண்டங்கள் ஆகியவற்றை விற்பவர்களும், பட்டு 
நூலாலும், எலி மயிராலும், பருத்தி நூலாலும் ஊசியைக் கொண்டு தறியின்
அச்சினைக் கட்டும் காருகர் (சாலியர்)களும், பட்டும், பவளமும், சந்தனமும்,
அகிலும், முத்தும், மணியும், பொன்னும், நோட்டம் பார்க்கின்றவர்களும், 
நெல், புல்லரிசி, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கிலரிசி
வணிகர்களும், பிட்டு வணிகரும், கள் விற்கும் பெண்களும், மீன் விற்கும்
பரதவரும், உப்பு விற்கும் உமணரும், வெற்றிலை வணிகரும், தக்கோலம், 
தீம்பு, இலவங்கம், கருப்பூரம், சாதிக்காய் ஆகியவற்றை விற்பவர்களும்,
எண்ணெய் வாணியரும், ஆட்டு வாணிகரும், வெங்கலக் கன்னார்களும்,
செப்புக் கலங்கள் தட்டுபவர்களும், தச்சர், ஓவியர், சிற்பிகள், சுதைப்பாவை
புனைவோர், பொற்கொல்லர், இரத்தினத் தட்டார், தோலுறை தைப்போர்
முதலியோரும், செயற்கைப் பூங்கொத்துகள், வாடாமாலைகள்,
பொய்க்கொண்டைகள் ஆகியவற்றைச் செய்வோர்களும், சிறுசிறு
கைத்தொழில்களைப் பிறர்க்குப் பயிற்றுபவர்களும் பூம்புகார்
மருவூர்ப்பாக்கத்தில் திரண்டிருந்தார்கள்.154 

     பல தொழிலைச் செய்யும் மக்கள் ஒருங்கு சேர்ந்து வாழ்ந்தனர்;
தொழில்முறையில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு, அக்காலத் தமிழரிடையே
காணப்படவில்லை. நாட்டு வளர்ச்சிக்கும், பொருத்தமான மக்களின் 
வாழ்வுக்கும் தொழிலாளர் அனைவருடைய உழைப்புமே இன்றிமையாததென்ற
மேலான உணர்ச்சியே அவர்களிடம் வளர்ந்திருந்தது. ‘துடியன், பாணன் 

     152. மணி. 19 : 107-9; பெருங்கதை, 1 : 58, 40-44. 
     153. நற்றி. 153.
     154. சிலப். 5 : 9-39.

பறையன், கடம்பன்’ ஆகிய குடிகளைவிடச் சிறந்த குடிகள் வேறு இல என்று
அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார்
பாடியுள்ளார்.155 

     பழந் தமிழகத்தில் நடைபெற்றுவந்த வாணிகங்களுள் சிறப்பானவை 
உடை வாணிகம், ஓலை வாணிகம், கூல வாணிகம், பொன் வாணிகம்
ஆகியவையாம். பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே வாணிகம்
நடைபெற்று வந்தது. தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீனுக்கும்
நறவுக்கும் மாற்றப்பட்டன. கரும்பும் அவலும், மான் ஊனுக்கும் கள்ளுக்கும்
மாறின.156 நெய்யை விற்று எருமை வாங்கினர்.157 உப்புக்கு நெல் மாற்றப்
பட்டது.158 பச்சைப் பயற்றுக்கு ஈடாகக் கெடிறு என்னும் மீன் மாற்றிக்
கொள்ளப்பட்டது.159 பண்டமாற்று முறையில் ‘குறியெதிர்ப்பை’ என்று ஒரு
முறையும் வழங்கி வந்தது. குறிப்பிட்ட ஓரளவு பண்டத்தைக் கடனாகக்
கொண்டு ஒரு காலத்துக்குப் பிறகு அதைத் திருப்பிக் கொடுப்பதுதான்
இம்முறையாகும்.160 

     சில பண்டங்கள் உற்பத்தியான இடத்திலேயே விற்பனையாயின.
சிலவற்றை ஊர்ஊராக எடுத்துச் சென்று விற்று வருவார்கள். உப்பு அப்படி
விற்கப்பட்ட பண்டந்தான். மிளகையும் ஊர் ஊராகச் சென்று விற்பதுண்டு.
பண்டங்களை வண்டிகளின் மேலும், கழுதைகளின் மேலும் ஏற்றிச்
செல்லுவர்.161 சரக்குப் பொதிகளின்மேல் அவற்றின் அளவோ எடையோ
பொறிக்கப்பட்டிருக்கும்.162 அவற்றை ஏற்றிச் சென்ற வண்டிகளின்மேலும்
அளவு பொறிக்கப்படுவதுண்டு.163 தாம் விற்கும் பண்டங்களைப் பற்றிய
விளக்கம் எழுதிய கொடிகளை வணிகர்கள் தம் கடைகளின்மேல்
பறக்கவிடுவார்கள்.164 

     வணிகர்கள் கூட்டங் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களைப் பல
ஊர்களுக்கும் விற்பனைக்கு எடுத்துச் செல்லுவார்கள். இக் குழுக்களுக்கு
வாணிகச் சாத்துகள் என்று பெயர். ஆறலைக்கும் கள்வருக்கு அஞ்சி 
அவர்கள் சாத்துகளாகக் கூடிச் செல்லுவது வழக்கம்.165 அளவுக்கு மிஞ்சிக்
கொள்ளாமலும், அளவைக் குறைத்துக் கொடுக்காமலும், வணிகர்கள் தம்
தொழிலை நேர்மையாக நடத்தி வந்தனர்.166 வாணிகச் சாத்துகள்
கழுதையின்மேல் 

     155. புறம். 355.
     156. பெரும்பாண். 161-5 
     157. பெரும்பாண். 164-165.
     158. குறுந் : 269: 5 ; அகம். 140 
     159. ஐங்குறு. 47.
     160. புறம். 163; குறள். 221 (பரிமே-உரை) 
     161. பெரும்பாண். 80-81.
     162. சிலப். 5 : 111-2 
     163. சிலப். 26 : 136. 
     164. மதுரைக். 365-73. 
     165. குறுந். 390.
     166. பட்டினப். 209-10.

மிளகு பொதிகளை ஏற்றிச் செல்லும்போது அவற்றுக்குச் சுங்கம்
செலுத்துவதுண்டு.167 

     கீழைக் கடற்கரையிலிருந்த தொண்டியிலிருந்து மதுரைக்குக் கப்பலில்
அகில் முதலியவை கொண்டுவரப்பெற்றன.168 குதிரைகளை மரக்கலங்களில்
ஏற்றிக் கொண்டுவந்த யவனர்கள் அதே மரக்கலங்களில் பொன்
அணிகலன்களையும், தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகியவற்றையும் தத்தம்
நாடுகட்கு ஏற்றிச் செல்லுவர்; புளியையும் கருப்பங்கட்டியையும் சேர்த்துப்
பிசைந்து அதைப் பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குத்தான் தீம்புளி என்று
பெயர்.169 

     அயல்நாட்டு வாணிகத்தில் தங்க நாணயங்கள் வழங்கி வந்தன.
அவற்றுள் ஒன்றேனும் இப்போது கிடைக்கவில்லை. காணம் என்றொரு
பொற்காசு சங்க காலத்தில் வழங்கி வந்தது. தகடூர்ப் போரில் வெற்றிபெற்ற
பெருஞ்சேரல் இரும்பொறை தன் வெற்றியைப் பாடிய அரிசில்கிழார் என்ற
புலவருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பொன் பரிசில் தந்தான்.170
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் காக்கைபாடினியார் என்ற பெண்பாற் 
புலவருக்கு நூறாயிரம் காணம் பொன் வழங்கினான்.171 பட்டினப்பாலை
ஆசிரியர் உருத்திரங்கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் பொற்காசு
பரிசிலாக வழங்கப்பட்டன. பொற்காசு ஒவ்வொன்றும் வேப்பம் பழம் அளவு
இருந்தது. அவற்றை மாலையாகக் கோத்துப் பெண்கள் கழுத்தில் அணிந்து
கொண்டனர். அக் காலத்தில் வெள்ளியாலான அணிகலன்களையும் மக்கள்
பூணுவதுண்டு. வெள்ளியினால் பெரும்பாலும் பாத்திரங்களே 
செய்யப்பட்டன.172 இரும்புக்கும் பொன்னென்றே பெயர் வழங்கிற்று.173 

     வாணிகத்தில் பலவகையான அளவைகள் வழங்கி வந்தன. எடுத்தல்
அளவை சிலவற்றுக்குக் கழங்கு, கழற்சிக்காய் என்று பெயர்.174 ‘எண்’ 
என்னும் சொல் எண்ணுகின்ற எண்ணையும் கணிதத்தையும் குறிப்பிட்டது.
இலட்சம் என்ற பேரெண்ணையும் நூறாயிரம் என்றே குறிப்பிட்டனர்.175
திருவள்ளுவர் காலத்தில் கோடி என்னும் எண்ணும் தமிழில் சேர்ந்து
விட்டது.176 கோடிக்கு மேற்பட்ட எண்களைக் குறிக்கவும் 

     167. பெரும்பாண். 80-81.
     168. சிலப். 14 : 106-110. 
     169. மதுரைக். 318. 
     170. பதிற்றுப். 8-பதிகம்.
     171. பதிற்றுப். 6-பதிகம் 
     172. பெரும்பாண். 477-80 (நச்-உரை)
     173. புறம். 14: 3. 
     174. பதிற்றுப். 32: 7-9.
     175. தொல். எழுத். 471. 
     176. குறள், 377, 639.

தமிழில் சொற்கள் உண்டு. வெள்ளம், ஆம்பல், தாமரை என்பன
அவ்வெண்ணுப் பெயர்களுள் சில.177 நிறுத்தலளவை, முகத்தலளவை,
நீட்டலளவை ஆகியவற்றுக்கும் சங்க இலக்கியத்தில் சொற்கள் உண்டு. 

     தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலாக விளங்கியது உழவுதான். சங்க
இலக்கியத்தில் இதற்கு அளவற்ற சிறப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்
யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் ஏழு ஆண் யானைகட்கு 
அளிக்கப்படும் தீனியளவு உணவுப் பண்டம் உற்பத்தியாகக்கூடிய செழிப்பான
நாட்டை உடையவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று
ஆவூர் மூலங்கிழார் பாராட்டிப் பரவுகின்றார்.178 உழவு நிலம் மிகவும்
செழிப்பாய் இருந்ததால் உணவுப் பண்டங்களின் விளைச்சல் வரம்பின்றிக்
காணப்பட்டது. நெல்லும் கழைக் கரும்பும், தென்னையும் வாழையும், 
மஞ்சளும் இஞ்சியும், பருத்தியும் தமிழகமெங்கணும் பயிராயின. நிலத்தை
உழுவதும், எருவிடுவதும், நாற்று நடுவதும், தண்ணீர் கட்டுவதும், களை
எடுப்பதும், பயிரைக் காவல் காப்பதும் உழவுப் பணிகளுள் சிலவாகும்.179 

     விருந்தோம்பல் பழந்தமிழரின் மிகச் சிறந்ததொரு பண்பாடாகும்.
உறவினரும் நண்பருமின்றிப் புதிதாக வருபவர்கட்கு விருந்து என்று 
பெயர்.180 உண்பதற்குக் கலமும்,181 வாழையிலையும்,182 தேக்கிலையும்183
பயன்பட்டன. 

விளையாட்டுகள் 

     குழந்தைகள் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடுவர்; முச்சக்கரத்
தேர் உருட்டுவர்; பவழப் பலகைமேல் இரு யானைப் பொம்மைகள் ஒன்று
மற்றொன்றைக் குத்துவதைப்போலச் செதுக்கிப் பொருத்தி வைத்து அவர்கள்
விளையாடுவார்கள்.184 குழந்தைகள் கிலுகிலுப்பை யாட்டி மகிழ்வார்கள்.185குழந்தைகட்கு அம்புலி காட்டுவதும் முத்தங்கொடுப்பதுமுண்டு.186 

     சிறுவர் மடுவில் ‘துடும்’ எனக் குதித்து மூழ்கி மண்ணை எடுத்து வந்து
கரைமேல் நின்ற சிறுமியர்க்கு வியப்பூட்டுவார்கள்.187 

     177. தொல். எழுத். 393.
     178. புறம். 40 : 0-11.
     179. குறள், 038.
     180. பட்டினப். 262.
     181. புறம் 160. 235. 384.
     182. புறம். 168.
     183. பெரும்பாண். 104; அகம்.107: 10
     184. பெரும்பாண். 249; குறுந். 61: 1-3;
         ஐங்குறு. 66; 2-3; கலித்.80, 86.
     185. சிறுபாண். 164
     186. புறம். 160.
     187. புறம். 243.

இளைஞர்கள் ஏறு தழுவுவார்கள்.188 பெண்கள் மணற்பாவை வனைந்து
விளையாடுவார்கள். தண்ணீரில் பாய்ந்து அவர்கள் நீராடுவதுமுண்டு.
அவர்கள் பந்துகளைக் கொண்டு கழங்கு அல்லது அம்மனையாடுவார்கள்;
ஊசலாடுவார்கள். விளையாடும்போது அவர்கள் வரிப்பாட்டுப் பாடுவார்கள்.
சிறுமியர் மிகவும் உகந்து அயர்ந்தது ஓரையென்னும் விளையாட்டுதான்.189
கலைகள்

     கலைகளில் ஓவியம், இசை, கூத்து, நாடகம் ஆகியவை மிக உயர்ந்த
நிலையை எட்டியிருந்தன. பண்டைய காலத்தில் ஓவிய நூல் ஒன்று வழங்கி
வந்ததாகத் தெரிகின்றது.190 நிலைத்து நின்ற பொருளையும், இயங்கி வந்த
பொருளையும் எவ்வாறு வண்ணத்தால் தீட்டுவது என்பதை இந் நூல்
விளக்கிக் காட்டிற்றாம். சுவர்கள் மேலெல்லாம் வண்ண ஓவியங்கள்
தீட்டியிருந்ததைச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. நாடக அரங்கிலும்
அழகழகான வண்ணங்களில் ஓவியம் தீட்டப்பெற்ற திரைச் சீலைகள்,
அதாவது ஓவிய எழினிகள் தொங்கவிடப்பட்டன. சுவரின்மேல் சுதை
ஓவியங்களும் தீட்டப்பட்டன. சிற்பத்தையும் மக்கள் சிறப்பாகப் பயின்று
வந்தனர். சங்ககாலத்து ஓவியங்களும் சிற்பங்களும் முற்றிலும் அழிந்து
மறைந்து போய்விட்டன. எளிதில் அழிந்து போகக்கூடிய வண்ணங்களையும்
பொருள்களையும் ஓவியர்களும் சிற்பிகளும் கையாண்டுவந்தனர் போலும்.
அன்றித் தமிழகத்தின் வரலாற்றில் ஏற்பட்ட நாகரிக மாறுபாடுகளினாலும்
பலவகையான மாறுபட்ட பண்பாட்டினராலும் அவை அழிவுண்டு
போயிருக்கக்கூடும்.

     இசை, நாடகம், நாட்டியம், கூத்து ஆகிய கலைகளில் பழந்தமிழ் மக்கள்
மிகமிக உயர்நிலையை எட்டியிருந்தனர். சிலப்பதிகார அரங்கேற்று காதையில்
இக் கலைகளின் வளர்ச்சியைப் பற்றிய விளக்கங்களை விரிவாகக் காணலாம்.
ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலாரும் கூத்திலும் இசையிலும்
மேம்பட்டிருந்தனர். பாணரும் விறலியரும் பாடியும் ஆடியும் மக்களை
மகிழ்வித்தனர். மன்னன் முன்பு தம் கலையாற்றலைக் காட்டிப் பெரும்
பரிசில்களைப் பெற்றனர். கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியின் கணவன்
ஆட்டனத்தி என்பான் நடனத்தில்

     188. சிலப். 17, கொளு 1 : 7,
     189. புறம். 176; நற்றி. 68;
         குறுந். 48, 316
     190. சிலப். 8: 23-26 (அடி-உரை)

ஈடிணையற்று விளங்கினான். மதுரைத் தமிழக்கூத்தனார் தமிழரின் கூத்துகளை
ஆடிக்காட்டுவதில் புகழ் பெற்றிருந்தார். 

     நாட்டியங்களிலும் கூத்துகளிலும் அரங்கங்களையமைக்கும்
இலக்கணத்தைப்பற்றியும், கூத்தாடுவோரின் மெய்ப்பாடுகளைப் பற்றியும்
அடியார்க்கு நல்லார் விரிவாகக் கூறுகின்றார். இக் கலைகளைப் பற்றிய 
நூல்கள் தமிழில் பல இருந்தன. அவையனைத்தும் இப்போது
அழிந்துபோய்விட்டன. 

     அரங்கின் முன்பு மூன்று வகைத்தான எழினிகள் தொங்கவிடப்பட்டன.
ஒன்று, மேலிருந்து கீழே விழுவது; இரண்டு, ஒரு பக்கமிருந்து மற்றொரு
பக்கத்துக்கு இழுக்கப்பட்ட ஒற்றைத் திரை; மூன்று, அரங்கத்தின் இரு
புறங்களினின்றும் இழுக்கப் பெறும் இரட்டைத் திரைகள். இவை அரங்கத்தின்
நடுவில் ஒன்றுசேரும். 

     கூத்துகளில் பலவகையுண்டு. மன்னருக்கும் மக்களுக்குமானது ஒன்று.
புகழ்ந்தும் இகழ்ந்தும் ஆடுவது மற்றொன்று. மூன்றாவது, தமிழக் கூத்தும்
ஆரியக் கூத்தும்; நான்காவது, தேசிக் கூத்துகள். பொதுவாகக் கூத்துகளில்
பதினொரு வகையுண்டு. அவை முறையே கடையம், மரக்கால், குடை, துடி,
அல்லியம், மல், குடம், பேடு, பாவை, கொடுகொட்டி, பாண்டரங்கம் என்பன. 

     தமிழரின் கூத்துகள் நாட்டியம் என்னும் பெயரில் சிறிதளவு அயல்
கலப்பேற்று இப்போது நடைபெற்ற வருகின்றன. தமிழக் கூத்தைப்போன்றே
தமிழிசையும் தன் நிலை திரிந்து கருநாடக இசை என்னும் பெயரில் இப்போது
வழங்கி வருகின்றது. ஏழிசையின் தமிழ்ப் பெயர்களான குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை இப்போது வழக்கொழிந்து
போயின. அவற்றின் வடமொழிப் பெயர்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம்,
மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பவை இப்போது வழக்கில் 
இருந்து வருகின்றன. அக் காலத்தில் யாழும் குழலும் இன்னிசைக் 
கருவிகளாகப் பயன்பட்டன. யாழ்வகையில் 21 நரம்புகள் கட்டிய பேரியாழும்,
19 நரம்புகள் கட்டிய மகர யாழும், 14 நரம்புகள் கட்டிய சகோட யாழும்,7
நரம்புகள் கட்டிய செங்கோட்டு யாழும் 1000 நரம்புகள் கட்டிய ஆதியாழும்
இவற்றுள் சிறப்பானவையாம்.

குழலிலும் பலவகை யுண்டு. அவற்றுள் ஆம்பல் குழல் என்பதும் ஒன்று.191
வெண்கலத்தால் ஆம்பற் பூப்போல அணைசு பண்ணி நுனியில்
பொருத்தப்பட்ட கருவி இது. 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...