Wednesday, 4 February 2015

கிரெடிட் கார்டு - தகவல் உரிமைச் சட்டம் - அரசின் பதில்

கிரெடிட் கார்டு - தகவல் உரிமைச் சட்டம் - அரசின் பதில்

தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன் அட்டையால் நுகர்வோருக்கு பலனா? அல்லது சுமையா?” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் சில தகவல்களை கேட்டு மனு அளிக்கப்பட்டது.

அந்த கேள்விகளும், அதற்கு அத்தறையின் தகவல் வழங்கும் அலுவலர் திருவாளர் சி. கோதண்டன் அளித்த பதில்களும்.
...
கேள்வி 1. இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? ஆம் எனில் எந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது? (இலவசமாக “இன்றைய நிகழ்ச்சி” பகுதியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தவிர)

பதில்: இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படவில்லை.
...
கேள்வி 2. இந்த நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு?

பதில்: இந்த நிகழ்ச்சிக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.72,388/- ஆகும்.
...
கேள்வி 3. சென்னையில் அரசுக்கு சொந்தமான அரங்குகளும், மாநகராட்சிக்கு சொந்தமான அரங்குகளும் பல இருக்கும் நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏன்?

பதில்: இந்த துறை மூலம் நுகர்வோர் நலன் தொடர்பாக நடத்தப்படும் கருத்தரங்குகளின் பொருளினை பொறுத்து கூட்ட அரங்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த துறையால் நடத்தப்பட்ட, ரியல் எஸ்டேட் தொடர்பான கருத்தரங்கு சேவை வழங்குபவர் அரசுத்துறை மற்றும் தனியாளர்கள் என்ற முறையில் அரசுக்கு சொந்தமான அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திலும், மருந்துகள் விற்பனை தொடர்பான கருத்தரங்கு சமூக சேவை நிறுவனத்தின் அரங்கான ஆஷா நிவாஸிலும் நடத்தப்பட்டது. கடன் அட்டைகள் தொடர்பான கருத்தரங்கினை பொறுத்த மட்டில் சேவை வழங்குபவர்கள் அரசுடைமை/ தனியார் / பன்னாட்டு வங்கிகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் என்ற முறையிலும் கடன் அட்டையைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் சமூகத்தில் நடுத்தர மற்றும் மேல்நிலை வாழ்க்கைத்தரத்தில் உள்ள நிலையிலும் இக்கருத்தரங்கினை தனியார் ஓட்டலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
...
கேள்வி 4. கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2007 ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட முதன்மை சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் நிகழ்ச்சியில் 2005ம் வருடத்திய (பழைய) சுற்றறிக்கையை வழங்கியது ஏன்?

பதில்: இத்துறை வாயிலாக கருத்தரங்கின்போது வழங்கப்பட்ட விவரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இருந்தும் இத்துறையில் பதிவு செய்துள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் வாயிலாகவும் பெற்று தொகுத்து வழங்கப்பட்டன. அதில் கூடுதல் விவரங்கள் மற்றும் நுகர்வோர்க்கான தெளிவுரைகள் வழங்கவே இந்த கருத்தரங்கிற்கு ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மேன் அலுவலர் சிறப்பு அழைக்கப்பட்டிருந்தார். அவர் வாயிலாக ரிசர்வ் வங்கியின் தற்போதைய நெறிமுறைகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டன.
...
கேள்வி 5. கருத்தரங்கம் முடிவடைந்த பின் அரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களிலிருந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் தீர்மானங்கள், நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமானது?

பதில்: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் / புகார்கள் தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க தொகுக்கப்பட்டன. மனுதாரர் கூறியவாறு தீர்மானங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக இத்துறையின் இணை ஆணையாளர் வாயிலாக கருத்தரங்கின் ஆலோசனைகள் தொகுத்து வழங்கப்பட்டன.
...
கேள்வி 6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் உங்கள் துறை பணியாளர்கள் எத்தனை பேர்? வங்கிகளின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர்?

பதில்: நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள்---60 பேர்
வங்கியை சேர்ந்தவர்கள்---12 பேர்
இத்துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் மற்றும்
கருத்தரங்கு தொடர்பாக பணிபுரிந்த பணியாளர்கள்---14 பேர்
இத்துறை மற்றும் இதர அரசுதுறைகளை சார்ந்த கடன்
அட்டை உபயோகிப்பாளர்கள், பிற நலசஙக
பொறுப்பாளர்கள் & பத்திரிகையில் "இன்றைய நிகழ்ச்சி"
வாயிலாக அறிந்து வருகை புரிந்த பொதுமக்கள்---59 பேர்
பத்திரிகை & தொலைக்காட்சி ஊடகப்பணியாளர்கள்---10 பேர்

மொத்தம் --- 155 பேர்
...

கேள்வி 7. இந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட பயன் என்ன? இந்த நிகழ்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதா? ஆமெனில் பெரும்பான்மையானோர் என்ன கருத்து தெரிவித்தனர்? இல்லை எனில் ஏன் அவ்வாறு கருத்து கேட்கப்படவில்லை?

பதில்: இக்கருத்தரங்கு குறித்த விவரம் முன்னமே தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களது கருத்துகள் / புகார்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்று தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க கொடுக்கப்பட்டன. இவ்விவரங்கள் சம்பந்தப்பட்ட சேவைகள் வழங்கும் வங்கிகளின் அலுவலர்கள், ரிசர்வ் வங்கியின் அலுவலர் மற்றும் கூடியிருந்த அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு அமர்விலும் கடன் அட்டை உபயோகிப்பவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி வாயிலாக கூடுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டுவர தக்க பரிந்துரைகள் இத்துறை வாயிலாக அனுப்பப்படுகின்றன.
...
கேள்வி 8. இந்த கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பிரசினை குறித்து தங்கள் துறை சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டம் என்ன?

பதில்: இத்துறை கடன் அட்டைகள் சேவை உட்பட பொதுமக்கள் "நுகர்வோர்" என்ற முறையில் பெறும் அனைத்து சேவைகளிலும் நேர்மையற்ற வணிக முறைகளில் சிக்கி அல்லல் அடையாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் கருத்தரங்குகள் நடத்தி வருகிறது. இத்தகைய கருத்தரங்குகளுக்கான பொருட்கள் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில்தான் முடிவு செய்யபடுகின்றன. மேற்படி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட தீர்மானங்களை ரிசர்வ் வங்கி வாயிலாக ஆணைகளாக பெறத்தக்க பிரேரணைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...