Wednesday 10 February 2016

மனித உடலின் மகத்துவம்

                                         மனித உடலின் மகத்துவம்


  ஐந்து மண்டலங்கள்
===================
மனிதன், பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன், குழந்தையாகப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருள்களில் நீரைச் சேர்த்து, நெருப்பில் இட்டு சுவையாக அருந்தி, இதமாக வருடிச் செல்லும் காற்றைச் சுவாசிக்கிறான். சந்தோஷமாக,வளமான வாழ்க்கையில் தன்னை மறந்த நிலையில் அவன் ஆகாயத்தில் ஆனந்தமாகப் பறக்கிறான்.
ஒரு மனிதனை, பஞ்ச பூதங்கள் அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான் இல்லையெனில், நிலத்தில் சடலமாக வீழ்கிறான். ஒருவனுடைய உயிர், நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும், நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. மண்ணில் புதைத்தாலும்,எரித்தாலும் உயிரானது காற்றில் கலந்து, ஆகாயத்துக்குச் சென்றுவிடுகிறது.
உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லோரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றால், பாதிக்கிணறு தாண்டிய கதைதான். எனவே, உடலைப் பாதுகாத்து, நோயில்லா நெறியை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சித்தர் பாடல்
===========
:
‘கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே’
மனித உடலில் ரகசியத்தைச் சொல்லும் இந்த எட்டு வரி பாடலில் மனிதனுடைய உடலைப் பற்றிய சித்தர்களின் நுண்ணறிவு துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, அவற்றின் ’இருப்பிடம்’ மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி, உடல் என்ற ஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக மேற்கண்ட சித்தர் பாடல் நமக்கு விவரிக்கிறது.
மேலே உள்ள சித்தர் பாடலின் விளக்கம்
_______________________________________
எலும்புதனை – எலும்பு மண்டலம்
நரம்பினால் – நரம்பு மண்டலம்
இரத்தமதை -ரத்த ஓட்ட மண்டலம்
தோலை மூடி -தசை மண்டலம்
வாய்வுதலை – மூச்சு மண்டலம்
அதாவது, இந்த ஐந்து மண்டலங்களால்தான் தேகம் என்ற உடல், கடமையின் பொருட்டு இந்த உலகில் நடமாடுவதாக சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றும் தமது பணியைச் சரிவர செய்துவந்தால்தான், நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை நாமே உணர முடியும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள உறுப்புகள் அந்த மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும்,வேறு மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும் ஏதாவது ஒரு வகையில் ‘இணைந்திருக்கிறது’. உதாரணத்துக்கு, உடலில் எலும்புகள் உறுதியாகவும், வலுவாகவும் இருந்தால், நரம்புகளும் தன்னளவில் தளர்வில்லாமல் உறுதியாகவும்,வலுவாகவும் இருக்கும்.
நரம்புகளும் எலும்புகளும் உறுதியாக, வலுவாக இருக்கும் பட்சத்தில் ரத்தக் குழாய்களில் ரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் சுற்றி வரும். முறையான ரத்தச் சுழற்சியினால், இதயம் என்றும் இளமையுடன் தனது சுத்திகரிப்பு பணியைச் செய்யும்.
ரத்தச் சுழற்சியை முறையாக இயக்கும் பெரிய பொறுப்பு தசைகளைச் சார்ந்தது. அந்தத் தசை மண்டலத்துக்கு, எலும்பு, நரம்பு, ரத்த ஓட்ட மண்டலங்கள்தான் ஆதாரம்.
ஆக, இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்,எலும்பு, நரம்பு, ரத்தம், தசை இவற்றின் நிலைத்த தன்மை,உறுதி,செயல்படும் தன்மை ஆகியவற்றை வைத்தே வாயு எனப்படும் மூச்சு, உயிராக உடலில் நிலைக்கொள்ளும்.
அந்தவகையில், இந்த ஐந்து மண்டலங்களின் அடிப்படையில் உருவான மனித உடலை உலகில் நிலைநிறுத்தும் உன்னத பணியை இன்னும் சில மண்டலங்கள் செய்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாக இனி காணலாம்
தொடரும்..............
சித்தர்களின் குரல்'s photo.

1 comment:

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...