Wednesday 10 February 2016

                                                        போதிதர்மர்

போதிதர்மர் வாழ்கிறார்
போதிதர்மர் இறப்பதற்கு முன்பே அவரது புகழ்
சீனதேசம் முழுவதும் பரவிவிட்டது. அவர்
இறந்து ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின்
‘சான்’ புத்த மதம் ஜப்பானை அடைந்தது.
‘சான்’, ‘ஜென்’ ஆக பெயர் மாற்றம் பெற்றது.
தாமோ (Damo) தாய்சீ தருமா (Taishi Daruma)
ஆனார். பெயர் மட்டுமா மாறியது? ஜென்னின்
பூர்வீகமே மாறியது.
போதிதர்மர் வரலாறு பலராலும்
காலப்போக்கில் சரமாரியாக பின்னப்பட்டது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில்
பின்னியதால் இன்று எது நிஜம் எது பொய் என
பிரித்தறிய இயலாத குழப்பப் பின்னலாகக்
காட்சியளிக்கிறது.
அதன் விளைவாக ஜப்பானியர்கள் போதிதர்மரை
குறுதெய்வமாக, தெருமுனைக் கடவுளாக,
நோய்நொடி போக்கும் ஆவியாக, வீரிய
சக்தியளிப்பவராக இன்னும்
என்னென்னமோவாக சித்தரித்து
சிங்காரித்துள்ளனர். இவை சிங்காரமா சீரழிவா
என்று நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.
நம்மூர் திருஷ்டி தகடுகளைப் போல் சிகப்பு
நிறத்தில் ஒருவகை தகட்டில் போதிதர்மரது
பயங்கரமான உருவத்தைப் பொரித்து
குழந்தைகளின் கழுத்து, கை, கால்களில்
தாயத்தாக கட்டித் தொங்கவிடுகின்றனர்.
அந்தத் தாயத்து குழந்தைகளை பெரியம்மை
நோயிலிருந்து பாதுகாக்கும் என்பது
நம்பிக்கை. 1850க்குப் பின் அம்மை தடுப்பூசி
அறிமுகமானதால் இந்த வழக்கம் ஜப்பானியர்கள்
மத்தியிலிருந்து சிறிது சிறிதாக மறைந்து
தொலைந்து போனது.
இதைவி போதிதர்மர் பொம்மை என்றொன்று
ஜப்பானியர்கள் மத்தியில் ரொம்பப் பிரபலம்.
இப்பொம்மைகள் கால்கள் இல்லாமல் இந்திய
வீடுகளில் தொங்கும் திருஷ்டி
பூசணிக்காய்களைப்போல் காட்சியளிக்கின்றன.
இவை, கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர்
பொம்மைகள் போன்றவை, தள்ளிவிட்டால்
எழுந்து நிற்கும்.
கால்கள் இல்லாத போதிதர்மர்
பொம்மைகளுக்குப் பின் ஒரு பெருங்கதை
உள்ளது. போன அத்தியாயத்தில்
பார்த்தோமல்லவா, தியானத்தில் இருந்த
போதிதர்மர் அந்தக் குகையில் இருந்து
மாயமாக மறைந்தார் என்று ஜப்பானியர்கள்
நம்புவதாக. அதே கதை இங்கும் தொடர்கிறது.
இரு நூல்களை அங்கு விட்டுவிட்டு மாயமாக
மறைந்தார் என்று பார்த்தோம். அந்நூல்களுடன்
தன் கால்கள் இரண்டையும்கூட அவர் விட்டுச்
சென்றார். ஒரே இடத்தில் பல ஆண்டுகள்
அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்ததால்
அவருடன் அவரது கால்கள் வர
மறுத்துவிட்டனவாம். எனவே, அவற்றை
போதிதர்மர் அங்கேயே விட்டுச்சென்றுவ
ிட்டார். இதனாலேயே போதிதர்மர் பொம்மைகள்
கால்கள் இன்றி காணப்படுகின்றன. அவர் ஆவி
ரூபத்தில் சென்றார் என்று சிலர்
கருதுவதால்தான் இன்றும் அவர் எந்தத்
துன்பத்தினுள்ளும் நுழைந்து அதனைத்
தீர்த்துவைக்கும் ஆற்றல் பெற்றவர் என்று
ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
இன்றைய போதிதர்மர் பொம்மைகள்
கண்களின்றிக் காணப்படுகின்றன. அதற்குப்
பின்னாலும் இருக்கிறது ஒரு கதை.
ஒருநாள், போதிதர்மர் குகையில் தியானம்
செய்துகொண்டிருக்கையில் தூக்கம் அவர்
கண்களைத் தழுவியது. விழித்துப்பார்த
்தவருக்கு பேரதிர்ச்சி. தான் தியானிக்காமல்
தூங்கியதை நினைத்து நினைத்து மனம்
நொந்தார். ‘இந்தத் தூக்கத்துக்குக் காரணம்
எனது கண்களின் இமைகள் தானே?’ என்று
கோபப்பட்டு தன் இமைகளை இலையைப்
பிடுங்குவதுபோல் வெடுக்கெனக் கிள்ளி
எறிந்துவிட்டாராம்.
மண்ணில் விழுந்த அந்த இமைகளிலிருந்து
ஒரு செடி முளைத்து எழுந்தது. அதனைக்
கண்ட மக்கள் செடியின் இலைகளைப் பறித்து
வெந்நீரில் இட்டு அருந்தினர். அருமையான
சுவை. அது போக அவர்களிடம் அண்ட வந்த
தூக்கத்தையும் அது விரட்டி அடித்தது.
தூக்கத்தைப் போக்கும் புனிதம் வாய்ந்ததாகக்
கருதி அந்த நீருக்கு ‘தேநீர்’ என பெயரிட்டனர்.
ஆகையால் அந்தச் செடியின் இலை
தேயிலையானது. இன்றுவரை சீனர்களும்
ஜப்பானியர்களும் மஹாயான பௌத்தர்களும்
‘தேநீரை’ புனிதமாகக் கருதி பயபக்தியுடன்
அருந்துகின்றனர். இது நாம் பாலுடன்
அருந்தும் தூள் தேநீர் அல்ல, அவர்கள்
அருந்துவது சுடுநீரில் இட்டு அருந்தும்
உயிர்ச்சத்து நிரம்பிய ‘பச்சை’ தேநீர்.
போதிதர்மர் இமைகளற்றவர் என்று
ஜப்பானியர்கள் கருதுவதால்தான், போதிதர்மர்
பொம்மைக்கு இமைகள் மட்டுமின்றி கண்களும்
இல்லை. தருமா பொம்மைக்கு கண்கள்
வரைவதென்பது ஜப்பானியர்களுக்குத்
தனிப்படலம். முதலில் தருமா பொம்மையை
எதற்காக ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள்
என்று தெரிந்துகொள்வோம்.
‘போதிதர்மர் பொம்மை’ ஒரேயொரு
பலனுக்காக மட்டும் பயன்படுத்தப்படு
வதில்லை. சிகப்பு என்பது பண்டைய
ஜப்பானியர்கள் மத்தியில் பிணிக்கடவுளின்
இஷ்ட நிறம் என நம்பப்பட்டது. ஆகையால்
போதிதர்மரின் சிவப்பு நிற பொம்மை தங்களை
பிணியிலிருந்து காக்கும் என அவர்கள்
நம்பினர். குறிப்பாக பெரியம்மையிடமிருந்து.
அக்காலத்தில் (15 முதல் 18 ஆம் நூற்றாண்டு
வரை), அந்த அளவுக்கு அம்மை
ஜப்பானியர்களை காவுவாங்கிய கொள்ளை
நோய். ஜப்பானியர்களை மட்டுமல்ல உலகில்
வாழ்ந்த மனித குலத்தையே அந்த நோய் ஒரு
கலக்கு கலக்கியது எனலாம். நாம் ஏற்கெனவே
பார்த்தவாறு இந்த வழக்கம் அம்மைத்
தடுப்பூசி வந்தபின்னர் மறைந்தது.
போதிதர்மர் பொம்மை நல்ல சகுனத்தின்
சின்னமானது. அந்த பொம்மைக்கு
எவ்வளவுக்கெவ்வளவு அழகாக நாம் கண்களை
வரைகிறோமோ அவ்வளவுக்கவ்வளவ
ு அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை.
அரசியல் பதவி, திருமணம், புது வருடப்
பிறப்பு, வேலை, மதிப்பெண் என அனைத்துக்
காரியங்களை தொடங்குவதற்கு முன்பும்
‘போதிதர்மர் பொம்மைக்கு’ விழி திறக்கும்
படலம் நடக்கின்றது. இது ஜப்பானியர்களிடம்
இன்றும் நிலவும் வழக்கம்.
தங்களது எந்த நோக்கம் நிறைவேற
வேண்டுமோ அதை மனத்தில் கொண்டு
ஜப்பானியர்கள் புது வருடத்தன்று போதிதர்மர்
பொம்மையை கடைகளில் இருந்து
வாங்குவார்கள். தங்களது லட்சியத்தை
மனத்தில் தியானித்தபடி பொம்மைக்கு ஒரு
கண் மட்டும் வரைவார்கள். அதுவும்
பெரும்பாலும் இடது கண். மற்ற வலது கண்
அவர்களது நோக்கம் நிறைவடையும்பொழுது
பூர்த்திசெய்யப்படுகிறது. பூர்த்தியடையாவி
ட்டால் அதுவரை போதிதர்மர்
‘ஒற்றைக்கண்ணனாக’ காட்சியளிப்பார்.
ஜப்பானிய அரசியல்வாதிகள் தேர்தலுக்கு
நிற்கும்பொழுது ஒரு போதிதர்மர்
பொம்மையை வாங்கி இடக்கண் வரைவதும்,
தேர்தலில் வென்றுவிட்டால் வலக்கண்ணை
பெரும் ஆரவாரத்துடன் தன் ஆதரவாளர்கள்
முன்னிலையில் வரைந்து தங்கள் செல்வாக்கை
நிரூபிப்பதும் இங்கு சகஜம்.
போதிதர்மர் பொம்மைகள் போதிதர்மர்
திருவிழாக்களில் தான் அதிகம்
விற்பனையாகின்றன. இந்த திருவிழாக்கள் Great
Daruma Fairs of Japan என்று
அழைக்கப்படுகின்றன. மேலும், ‘போதிதர்மர்
திருவிழா’ என்றும் ஒரு திருவிழா
ஜப்பானியர்களால் வருடா வருடம்
கொண்டாடப்படுகிறது. இதில் பூர்த்தி
செய்யப்பட்ட போதிதர்மர் பொம்மைகளை
தீயிலிட்டு பொசுக்குவதுதான் உற்சவ
நிகழ்ச்சியாகும். இந்தத் திருவிழாவைக் காண
விரும்புபவர்கள் மார்ச் 3,4 ஆகிய தினங்களில்,
டோக்கியோவிலுள்ள ஜிந்தாய்ஜி கோவிலுக்குச்
(Jindaiji Temple) சென்றால் உற்சவத்தில்
கலந்து மகிழலாம்.
போதிதர்மர் பொம்மைகளிலும் பல்வேறு
தினுசுகள் உண்டு. போதிதர்மரின் கொடூர
முகம், ஆந்தை முகம், குரங்கு முகம், நாய்
முகம், பெண் முகம் எனப் பல வகைகள். இந்த
பொம்மை கோலிக்குண்டு அளவிலிருந்து
பலாப்பழ அளவுவரை கிடைக்கிறது.
உருண்டை, நீழ்உருண்டை என பல கோண
அமைப்புகளிலும் பொம்மைகள்
விற்கப்படுகின்றன.
போதிதர்மர் பொம்மையின் குரங்கு
முகத்துக்கும் ஆந்தை முகத்துக்கும் நாய்
முகத்துக்கும் பெண் முகத்துக்கும் பல்வேறு
கதைகள் கூறப்படுகின்றன. இதில் பெண்
முகத்துக்காகக் கூறப்படும் கதை சற்று
வித்தியாசமானது.
இப்பொம்மை ‘ஹிம் தருமா’ (Hime Daruma)
என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இளவரசி
போதிதர்மர் என்று பொருள். போதிதர்மர்
ஒன்பது ஆண்டுகள் குகைக்குள் சுவற்றை
வெறித்தபடி அமர்ந்திருந்தது ஒரு பெண்ணின்
ஒன்பது மாத கர்ப்பத்தைக் குறிக்கிறதாம். இது
போக ஹிம் தருமருக்கான கதை இன்னும் பல
கிலோ மீட்டருக்கு நீள்வதால், இத்துடன்
இதனை முடித்துக்கொள்வது சாலச் சிறந்தது.
சுருக்கமாக, போதிதர்மரைப் பெண்ணாக
சித்தரிக்கும் நோக்குடன் செய்யப்படும்
பொம்மை இது அவ்வளவு தான்.
பெண் குழந்தைகள் நோய், நொடி இன்றி
கொழுக்மொழுக் என ‘அழகாக’ வளர்வதற்கான
நேர்த்தியுடன் இவை ஜப்பானியப்
பெண்பிள்ளைகளின் பெற்றோர்களால்
வாங்கப்படுகின்றன. இவற்றுக்கு
விலைமகளிரிடையேயும் பெரும் வரவேற்பும்
உண்டு. இப்பொம்மையில் ‘தள்ளிவிட்டால்
எழுந்து நிற்கும்’ பண்புக்கு பல்வேறு
ஆற்றல்கள் உள்ளனவாம்.
நம்மைப் பீடித்துள்ள நோய்களால் விழுந்து
கிடக்கும் நாம் எழுந்திரித்து நிற்போம்.
விடாமுயற்சி, மனவுறுதி, அச்சமின்மை
ஆகியவற்றை அளித்து நம் உள்ளத்தை எழுச்சி
பெறச்செய்யும்.
காமத்தைத் தூண்டும்.
இழந்த வீரியத்தை மீட்டெடுக்கும்.
வாடிக்கையாளர்களிடம் வீழ்ந்து எழ
விலைமாதர்களுக்கு ஆற்றல் அளிக்கும்.
மலட்டுத்தன்மையை விரட்டி கருத்தரிக்க
உதவும்.
மெய்ஜி (Meiji) காலகட்டமான 1912 வரை
போதிதர்மர் பொம்மை படைப்பாற்றல்
வடிவத்தில் அதாவது லிங்க வடிவில்
செய்யப்பட்டதாம். அதேபோல், டோகுகுவா
(Tokugawa) பரம்பரை அரசாண்ட காலத்தில்
விலைமகளிர் ‘தருமா’ என்ற புனைப்பெயருடன்
அழைக்கப்பட்டனராம். இந்த டோகுகுவா
மன்னர்களின் ஆட்சியில் போதிதர்மர்
கேலிக்குரியவராகவும், நகைப்பிற்குரியவ
ராகவும், ஆபாச பேச்சுக்குரியவராகவும்
அன்றைய கலைஞர்களால் சித்தரிக்கப்பட்டார்
என்பது அப்போதைய ஓவியங்களின் மூலம்
தெரியவருகிறது. விலைமகளிருடன்
இருப்பவராகவும், பெண்ணாகவும், பெண் உடை
தரித்தவராகவும் போதிதர்மரை இவர்கள்
தீட்டியுள்ளனர். ஏன் இவ்வாறு செய்தனர்
என்பதற்கு முரண்பட்ட கருத்துகள் உள்ளன.
இப்பிட்ஸூ போதிதர்மர் (Ippitsu Daruma)
என்பது ஒருவகை சித்திரம். கையை
எடுக்காமல் தூரிகையால் போடப்படும்
போதிதர்மரின் ஒற்றை வளையச் சித்திரம்.
இதற்கும் பல்வேறு சக்திகள் உண்டு. பட்டுப்
புழுக்கூட்டினால் செய்யப்படும் மாயூ
போதிதர்மர் (Mayu Daruma) பொம்மைகளும்
உள்ளன. இவை குழந்தைகளுக்கு நல்லதாம்.
ஆக, நிலவில் வடை சுடும் நம் பாட்டியைப்
போல் போதிதர்மர் ஜப்பானியர்களின் வாழ்வில்
ஒன்றிவிட்ட ஒருவர். இன்றைய ஜப்பானிடம்
இருந்து பிரித்தெடுக்க இயலா சின்னம்.
இவ்வளவு மூடநம்பிக்கைகள்
புரையோடியிருக்கும் ஜப்பான் போதிதர்மரது
நோக்கத்தை வரையறுக்க முடியாத
அளவுக்குச் சிதைத்துவிட்டது என்பதில் எந்தச்
சந்தேகமும் இல்லை.
இந்த தருமா பொம்மைகள் உருவெடுத்ததற்கு
மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இது
கொஞ்சம் நம் மனத்துக்கு ஆறுதல் அளிக்கும்
செய்தி.
டக்கசாகி (Takasaki) நகரே போதிதர்மர்
பொம்மைகளை தயாரிப்பதன் முன்னோடி.
முன்னொரு காலத்தில், சுமாராக பதினேழாம்
நூற்றாண்டில் ஜப்பானில் பெரும் பஞ்சம்
ஏற்பட்டது. பஞ்சம் முடிந்தும் மக்களை
பொருளாதார வறட்சி வாட்டியது. அப்போது
அங்கிருந்த கோயிலில் (Shōrinzan Darumaji
Temple) வாழ்ந்த போதிதர்மர் (அவரது
அவதாரமாம்), அம்மக்களை தன்
உருவபொம்மையை உருவாக்கி விற்று அதன்
மூலம் பொருளீட்டும்படி யோசனை
அளித்ததைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள்
இதில் ஈடுபட்டனராம். வறட்சியும்
விலகியதாம்.
போதிதர்மர் கூறியதாகச் சொல்வது
உண்மையோ இல்லை புருடாவோ,
இப்பொம்மைகளால் ஒரு கூட்டம் பெரும்
வறட்சியிலிருந்து தப்பியது மகிழ்ச்சிக்குரிய
செய்தி. எது எப்படியோ இன்றுவரை
‘போதிதர்மர் பொம்மை’ தயாரிக்கும் தொழில்
ஓகோவென இருக்கிறது. சுமார் ஒன்றரை
மில்லியன் பொம்மைகள் டக்கசாகியிலிருந்து
தயாராகின்றன. இது போதிதர்மர் பொம்மையின்
மொத்த உற்பத்தியில் எண்பது சதவிகிதமாகும்.
இப்படியாக, போதிதர்மர் இன்றும் வாழ்கிறார்.
ஜென்னின் மூலமாகவும், குங்ஃபூவின்
மூலமாகவும், புனைக்கதைகளின்
வாயிலாகவும், சடங்கு சம்பிரதாயங்களின்
வாயிலாகவும், மூட நம்பிக்கையின்
வாயிலாகவும், பழமொழிகளின் வாயிலாகவும்,
பொம்மைகள் மற்றும் இன்னபிற
வாயிலாகவும். ஜெய் போதிதர்மா!
சித்தர்களின் குரல்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...