Wednesday 10 February 2016

மனித உடலின் மகத்துவம்

                                         மனித உடலின் மகத்துவம்


  ஜீரண மண்டலம் (Digestive System)
==============================
அழகான வீட்டை கட்டியவரை பாராட்டும் போது "பார்த்து பார்த்து" கட்டினார் என்கிறோம். அதே போல, நம் உடல் என்ற வீட்டை 'பார்த்து பார்த்து' கட்டியிருக்கிறார் இறைவன். ஒவ்வொரு அவயமும், அவற்றின் தனித்தனி செயல்பாடுகள், பிறகு இணைந்த செயல்பாடுகள் பிரமிப்பானவை.
இந்த அவயம் தான் அதிசயமானது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாமல், எல்லா உறுப்புகளும் அதிசயமானவை. உடலின் ஐந்து உறுப்புகளை முக்கியமானவை என்று, வேண்டுமானால், சொல்லிக் கொள்ளலாம். அதில் ஒன்று வயிறு - அத்துடன் இணைந்த ஜீரண மண்டலம். மற்ற நான்கு முக்கிய அவயங்கள் - மூளை, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம்.
உலகம் ஒரு செல் ஜீவராசியிலிருந்து இன்று பல செல் ஜீவராசிகளாக உருவெடுத்திருக்கிறது. தோன்றிய போதும் சரி, இப்போதும் சரி, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் முதல் தேவை உணவு.
உணவு என்றால் அதை சுவைக்க ஜீரணமாக்க சக்திகள் பெற ஜீரண மண்டலம் தேவை.
இந்த உடல் உயிருடன் இருக்க உணவு தேவை. உணவை ஜீரணிக்க வயிறு, அதை சார்ந்த அவயங்களும் தேவை. உணவுடன், பிராண வாயுவும் தேவை.
ஓய்வில்லாமல் உழைக்கும் ஜீரணமண்டலத்தின் உறுப்பினர்கள்
வாய்
தொண்டை மற்றும் உணவுக்குழாய்
வயிறு (இரைப்பை)
சிறுகுடல்
பெருங்குடல்
மலக்குடல்
ஆசனவாய்.
தவிர இந்த மண்டலத்திற்கு வெளியிலிருந்து உதவும் அவயங்கள் கணையம், கல்லீரல், பித்தப்பை.
உணவின் ஒருவழிப் பயணம்
-----------------------------------------------------
மல்லிகைப் பூ போன்ற சாதத்தில், உருக்கிய நெய்விட்டு, வத்தல் குழம்புடன் அப்பள துண்டையும் சாப்பிடு முன், வாயினில் போட்ட ஒரு கவளத்தை உமிழ்நீர் நனைக்கிறது. பற்கள் அரைக்கின்றன. உமிழ்நீரின் என்ஜைம் (அமைலேஸ்) ஸ்டார்ச்சை, சர்க்கரை சத்தாக மாற்றுகிறது. வாயில் உணவை மெல்ல 5 லிருந்து30 வினாடிகள் ஆகும். மென்ற பின் நாக்கு, வாயில் உள்ள மென்ற உணவை பந்தாக உருட்டி தொண்டையில் தள்ளுகிறது. வாயிலிருந்து உணவு 10 வினாடிகளில் (ஒரு கவள உணவு) தொண்டையில் முழுங்கப்படுகிறது.
வாயைத் தாண்டியவுடன் வத்தல் குழம்பும் ஒன்று தான் வறுத்த மீனாக இருந்தாலும் ஒன்று தான்! வாயை தாண்டியதும் ருசி இல்லை.
தொண்டையிலிருந்து உணவு, உணவுக்குழாயின் வழியே வயிற்றை (இரப்பையை) அடைகிறது. உணவுக்குழாய் தொண்டையையும் வயிற்றையும் இணைக்கும் குழாய். "தொப்" பென்று வயிற்றில் விழாமல், உணவு, உணவுக்குழாய்களின் தசைகளின் பெரிஸ்டாலிசிஸ் (Peristalis) எனும் அசைவுகளால் நிதானமாக வயிற்றுக்குள் நுழைகிறது. உணவுக் குழாயும், வயிறும் சேரும் பகுதியின் உள்ள வளையம் போன்ற ஒரு வழி வால்வு, உணவை வயிற்றுக்குள் விடுத்து மூடிக்கொள்ளும்.
இரைப்புக்குள் உணவு வருமுன்பே "சாப்பாடு தயார்" என்ற செய்தி 'வேகஸ்' (Vagus) நரம்பின் மூலம் மூளைக்கு பறக்கிறது. அடுத்த நொடியில் மூளையின் 'பர்மிஷன்' கிடைத்து, பரைட்டல் செல்கள் (Parietal cells), கேஸ்ட்ரீன் (Gastrin), செக்ரடீன் (Secretin) போன்ற ஹார்மோன்களால் தூண்டப்படுகின்றன. இதனால் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சுரக்கத் தொடங்கும். ரென்னின், பெப்சின், லிப்பேஸ் (Lipase) என்ஜைமுகளும் சுரக்கும். அமிலம் வயிற்றில் மழை போல் பொழியும். பெப்சினோடு இணைந்து உணவை ஜீரணிக்க உதவும்.
வயிற்றுள் உணவு சுழட்டப்படுகிறது. ஜீரண நீருடன் உணவு குழம்பாக கலக்கப்பட்டு, தசை அசைவினால் சுழட்டப்படுகிறது. திருப்பி, திருப்பி, வயிறு அலைகள் போன்ற தசை அசைவுகளால் உணவை புரட்டி எடுத்து, சிறு துகள்களாக்குகிறது. 3 - 4 மணிநேரம் இந்த சுழற்றல் நடக்கும். இதனால் இரு உணவுகளுக்கு நடுவே 3 - 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
இங்கிருந்து சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை அடைகிறது. இங்கு வரும் உணவில் நிறைய ஹைட்ரோ குளோரிக் அமிலம் இருக்கும். இந்த அமிலத்திற்கு சிறுகுடலில் வேலை ஏதுமில்லாததால், சிறுகுடலை தாக்கும். இதை தவிர்க்க, உணவுக் கூழ் வரும் முன்பே காரத்தன்மை மிகுந்த கணைய நீர், பித்த நீர், (முறையே கணையம், கல்லீரலிருந்து) வந்து, அமிலத்தை நீர்த்து விடும். இதைத் தவிர சிறுகுடலில் சுரக்கும் நீர்களும், கணையநீர், பித்த நீர் இவற்றுடன் சேர்ந்து உணவுக் கூழை ஜீரணிக்க உதவும். பிறகு உணவு பெருங்குடலுக்கு தள்ளப்படும்.
சிறுகுடலின் சுவர்களில் உள்ள 'விரல்கள்' போன்று துருத்திக் கொண்டிருக்கும் 'வில்லி' (Villi) களால் உணவுச் சத்துக்களும், கழிவுப்பொருள்களும் பிரித்தெடுக்கப்படும்.
பெருங்குடலின் எந்த ஜீரண நீர்களும் இல்லை. இங்கு வருமுன்பே உணவு ஜீரணமாகி சத்துக்கள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன. பெருங்குடலில் Mucus (கோழை) சுரக்கும். இது உணவுக்கூழ் கழிவை இளகிய தன்மைக்கு மாற்றும். பெருங்குடல் உணவுக்கழிவுகளிலிருந்து 80% தண்ணீரை உறிஞ்சுக்கொள்கிறது. உணவுக் கழிவுகள், பெருங்குடலிலிருந்து மலக்குடல் வழியே மலமாக ஆசனவாய் வழியே வெளியேறுகிறது. இதுதான் ஜீரணமண்டலத்தின் செயல்பாடு ஆகும்.
ஜீரணமண்டலத்தின் பாதிப்புகள்
--------------------------------------------------------
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன.
மனித உடலுக்கு உணவில் இருந்துதான் சக்தி கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ‘நாக்குக்கு’ அடிமையானவன்தான். அதனால்தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக சாப்பிடுகிறோம். அதே நேரத்தில், நம் உணவின் தேவையை நம்மால் அனுமானிக்க இயலாதபோது அந்த உணவாலேயே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன.
’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்று’ பெரியவர்கள் சொன்னதில்தான் எவ்வளவு உண்மை உள்ளது.
உணவால் உடலில் ஏற்படும் மந்த நிலையே அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது. உடலின் மந்தத்தில் இருந்து வாயுவும், வாயு மிகுதியால் மலச்சிக்கலும், மலச்சிக்கலால் உடலில் பல சிக்கல்களும் உண்டாவதாக சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதையே,
‘காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்
காணுமே மந்தம் கடுமா மிசம்மீறல்
காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்
காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே’
என்கிறார் திருமூலர்.
உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும். அரைகுறையாக மென்று வேகமாக விழுங்கினால் மந்தம் உண்டாகும். அதேபோல், மாமிசம் உண்பதும் உடலுக்கு மந்தமாகும். அதையே அதிகம் சாப்பிட்டால் மந்தம் அதிகமாகும். அதேபோல மாவுப்பண்டங்களான (பரோட்டா, கிழங்கு வகைகள் போன்றவைகள்) உணவுப் பொருட்களை அதிகமாகச் சாப்பிட்டாலும், எருமைப் பாலை உணவில் அதிகம் சேர்த்தாலும், உடலில் மந்தம் உண்டாகும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
உணவு என்பது வாழ்வுக்கான ஆதாரம். நம்மில் பலர் உணவினால் வாழ்வின் அச்சாணியையே முறித்துவிடுகின்றனர். உணவைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் நம் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை ஏதும் உண்டாவதில்லை.
உணவில் காரமும், சாரமும் அதிகமானால் ஜீரண உறுப்புகளில் புண், அமிலச் சுரப்பு, வாயு, மலச்சிக்கல், மலக்குடல்களில் கோளாறு, மூல நோய்கள் போன்றவை உண்டாகும். இதனால், உடலின் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளுக்கு வேளைப்பளு அதிகமாகி, உடல் சமநிலைத் தன்மையை இழந்து நோய்வாய்ப்பட நேர்கிறது.
எனவே நாம் சாப்பிடும் உணவு நம் கட்டுக்குள் இருக்கவேண்டும். அதிகமாக சாப்பிடுவதாலும், தேவையான அளவு சாப்பிடாமல் இருப்பதாலும் நம்மை ஏராளமான நோய்கள் துரத்துகின்றன.
செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் யாவை?
உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்.
செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள் என்ன?
வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச்சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.
குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?
உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப்பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
வாயுத் தொந்தரவு என்றால் என்ன?
சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.
வயிற்று வலி வருவது ஏன்?
வயிற்று வலி பெருமபாலும் குடல் புண்ணால்தான் உண்டாகிறது. ஆனால் புண் மட்டுமே காரணம் அல்ல. மேலும் புண் இருக்கும் உறுப்பைப் பொருத்தும் வயிற்று வலி மாறுபடும். இரைப்பையில் புண் இருந்தால் உணவு உட்கொண்டதும் வலி ஏற்படும். சிறுகுடல் முதல் பகுதியில் புண் இருந்தால் உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் வலி ஏற்படும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும். குடல்புண் தவிர செரிமான உறுப்புகளில் அழற்சி குடலில் கிருமிகள் இருப்பது இவற்றாலும் வலி உண்டாகக் கூடும்.
குடல் புண் வருவது எப்படி?
உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.
குடல் புண்ணால் ஆபத்தா?
இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க யோசனைகள் என்ன?
மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்ற அளவிலே இருக்கவேண்டும். உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாவிட்டால் கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் நாம் இப்போது இத்தகைய முறையைக் கடைப்பிடிப்பதில்லை. வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளாததாலும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?
புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.
குடல் புண்ணுக்கு ஹோமியோபதியில் மருந்துகள்
************************************************************************
சிறுகுடலின் முற்பகுதியான டியோடினத்தில் புண் - லைகோ, அனகார்டி, கிராபைடீஸ்.
கடுமையான எரிச்சல் பலவீனம் வாந்தி - சாங்குனேரி.
வயிற்றுப்புண்ணில் இரத்த வாந்தி - ஹாமோமெலி, சீகேல், டிரில்லியம்.
அதிக வாயு உபாதை - லைகோபோடியம், கார்போ-வெஜி, அர்ஜெ- நைட்
அதிக மது அருந்துவதால் புண் - அர்ஜெ- நைட், நக்ஸ்-வோ.
இறைப்பை புண் - காலி-பைக், பாஸ்பரஸ்,
சித்தர்களின் குரல்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...