Wednesday 10 February 2016

மனித உடலின் மகத்துவம்

                                     மனித உடலின் மகத்துவம்


   கழிவு மண்டலம்
=================
நாம் எத்தனை உணவுகளை உட்கொண்டாலும் தேவையான சத்துக்களை மட்டும் நமது உடலானது எடுத்துக்கொண்டு மீதியுள்ளவற்றை சக்கையாக வெளியேற்றி விடும். அதாவது கழிவுகளாக வெளியேற்றிவிடும்.
இவ்வாறு தேவைக்கு அதிகமானவற்றை கழிவுகளாக வெளியேற்றும் பணியை செய்யும் உறுப்புகள் கழிவு மண்டலம் எனப்படுகின்றன.
கழிவுமண்டலம் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமான ஒரு மண்டலம் என்று நாம் சொல்லவேண்டும். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்நாளை நீட்டிக்க, ஆரோக்கியமாக வாழ எந்த அளவிற்கு செரிமான மண்டலம் மிகச் சிறந்த ஒரு விசயமாகப்படுகிறதோ, அதே மாதிரி ஒரு மனிதனுடைய கழிவுகளும் ஒழுங்காக முறையாக வெளித்தள்ளப்படவேண்டும்.
ஆக என்னதான் சத்தான ஆகாரங்கள் சாப்பிட்டாலும் கூட அதாவது ஒரு நாளைக்கு விதவிதமாக குங்குமப்பூவிலிருந்து, ஆப்பிளிலிருந்து, பேரீச்சம்பழத்திலிருந்து, அன்னாசிபழத்திலிருந்து நல்ல உயர்வான உணவுப்பொருட்களைத் தொடர்ந்து ஒரு ஆணோ பெண்ணோ சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டாலும் கூட அந்த சத்தான உணவுகளில் உள்ள கழிவுகள் ஒழுங்காக முறையாக வெளியேறக்கூடிய நிலை இருந்தால்தான் ஒரு ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக இருக்கக்கூடிய சூழல் இருக்கும்.
ஆனால் இன்றைக்கு நம்முடைய உடல் உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளிலேயே இந்த கழிவுமண்டலப்பிரச்சனை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கான காரணம் நம்முடைய வாழ்வியல் சூழல் மாறிப்போன ஒரு விசயத்தை நாம் கண்டிப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.
அந்த காலகட்டத்தில் பார்த்தோம் என்றால் உணவுகள் ஒழுங்காக முறையாக தரம் வாரியாக பிரிக்கப்பட்டிருந்தது. அன்றைய குடும்ப அமைப்பில் சிறுவர்களுக்கு என்ன உணவு?, வாலிபர்களுக்கு என்ன உணவு?, தோட்டம் மற்றும் காடுகளில் வேலைசெய்யக்கூடிய ஆண்களுக்கு என்ன உணவு?, வீட்டிலேயே குடும்பத் தலைவியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு என்ன உணவு? இப்படியெல்லாம் அவர்களுடைய வேலையின் திறன் அறிந்து உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இன்று மாறிவந்த காலச்சூழல், பணி, இடம்பெயர்வு போன்ற காரணங்களினால் நம்முடைய உணவு முறை மாறியுள்ளது. ஒரு குடும்பம் என்றால் ஒரே வகையில் பிரிக்கப்பட்டது. அதாவது சிறிய வயதிலிருந்து பெரியவயதுவரை எத்தனை வகைப்பட்ட ஆட்கள் இருந்தாலும் கூட எல்லோருக்கும் ஒரே வகையான உணவாகப் பிரிக்கப்பட்டது. சில உணவுகளை நாம் நிறைய எடுக்கக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டோம்.
நிறைய அரிசி கலந்த உணவுகள், மாவு கலந்த உணவுகள், எண்ணெய் கலந்த உணவுகள், செயற்கை உணவுகள், ஒரு உணவில் விரைவில் பூஞ்சை வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக ரசாயனப் பொருட்கள் சேர்க்கக்கூடிய சில உணவுகள் எல்லாமே எடுக்கக்கூடிய காலகட்டம் இருக்கிறதால் நம்முடைய கழிவுமண்டலம் ஒழுங்காக வேலை செய்கிறதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
கழிவு என்பது மிகக்குறைவாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவுகளில் கழிவு என்பது மிக அதிகமாக இருக்கிறது. ஒரு ஆணோ பெண்ணோ மலச்சிக்கல் இல்லாமல் இருக்கிறபொழுதுதான் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதாக நாம் சொல்லலாம்.
அதாவது சித்த மருத்துவ நூல்களிலே சொல்வார்கள் மலம் என்பது புழுக்கை, புழுக்கையாக வெளியேற வேண்டும் என்று, அதாவது மலம் என்பது மலவாயில் ஒட்டக்கூடாது. இன்றைக்கும் பறவைகளைப் பாருங்கள், சில பறவைகள் எச்சம் இடுகின்றன. அந்த மாதிரி எச்சம் ஒட்டாது. ஆடு புழுக்கை போடும், வெறும் புல்லையும், இலை தழைகளையும் சாப்பிடக்கூடிய ஆடு புழுக்கையாகப் போடும் போது மலவாயில் ஒட்டுவது கிடையாது.
அதேமாதிரிதான் ஒரு மனிதனுக்கும் மலம் மலவாயில் ஒட்டக்கூடாது. எந்த மனிதனுக்கு மலவாயிலில் மலம் ஒட்டுகிறதோ அவனுக்கு கழிவுமண்டலப்பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
இன்றைக்கு நம்மை சார்ந்து நாம் வளர்க்கக் கூடிய நாயை எடுத்துக்கொண்டாலும் சரி, பூனையை எடுத்துக்கொண்டாலும் சரி, ஏன் காகம் எடுத்துக்கொண்டாலும் சரி, இவை அனைத்துமே நம்மைப்போலவே மலம் கழிக்க ஆரம்பித்துவிட்டன. ஏனென்றால் நம்மை சார்ந்து இருக்கக்கூடிய ஜீவராசிகளையும் மனிதன் கெடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.
மலச்சிக்கல் ஒரு மனிதனுக்கு இருந்தது என்றால் கண்டிப்பாக உடலில் பல பந்தம் வரும். அதனால்தான் நாம் சொல்வோம் மலபந்தம் மனபந்தம் என்று. ஆக ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்றால் தீர்க்கமான சிந்தனைக்கு நாம் வரமுடியாது. ஆக மலம் சிக்கலில்லாமல் இருக்கவேண்டும் என்றால் உணவுகளை தேர்ந்தெடுத்து ஒழுங்காக முறையாக எடுக்கும் பொழுது மலச்சிக்கல் இல்லாத சூழல் உண்டாகும். மலச்சிக்கல் கழிவுமண்டலப் பிரச்சனையில் இருந்தது என்றால் நம்முடைய படைப்புத்திறன் அதிகமாக குறையக்கூடிய வாய்ப்பு உண்டு. நல்ல எண்ணம் எந்த மனதில் இருந்து உதிக்கும் என்றால் கழிவுமண்டலப் பிரச்சனை இல்லாத ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோதான் நல்ல எண்ணங்கள் உதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.
நிறைய காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பித்தம் அதிகரித்த நிலை, குழப்பமான மனநிலை, பதற்றமான நிலை, மன உளைச்சல் ஆகக்கூடிய நிலை, கோபப்படக்கூடிய நிலை எல்லாமே கழிவுமண்டலப் பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த மாதிரி விசயங்கள் ஏற்படுவதற்கான ஒரு சூழல் இருக்கிறது.
பண்டைய காலத்தில் எடுக்கப்பட்டமாதிரியான உணவுகளை ஆணோ, பெண்ணோ சிறுவர்களோ, வயதானவர்களோ இவர்களெல்லாம் தனக்கேற்றமாதிரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து எடுக்கிறபொழுது செரிமான மண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்யும்.
செரிமானமண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்து முழுமையாக செரித்து அந்த உணவில் உள்ள சத்துக்களையெல்லாம் இரத்தத்தில் தாதுக்களாக பிரிக்கப்பட்டு இரத்தத்தில் சேர்ந்து ஒழுங்கான முறையில் உடலெல்லாம் நிரவப்பட்டது என்றால் கண்டிப்பாக பிரச்சனை இருக்காது. செரிமானமண்டலம்தான் கழிவுமண்டல வேலையில் முரண்பாடு உண்டாவதற்கு காரணமாக அமைகிறது.
யார் ஒருவருக்கு செரிமானக்கோளாறு பிரச்சனை இருக்கிறதோ அவருக்கு நரம்பு பிரச்சனை, வாய்வுத்தன்மை, அமிலத்தன்மை, மலப்பிரச்சனைகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலம் எதுவென்று பார்த்தால் உணவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காமல் உண்பதுதான். ஆக எப்பொழுதுமே உணவில் மிதமான உணவை எடுத்துப் பழகவேண்டும்.
கழிவு மண்டலத்தில் நான்கு முக்கிய உறுப்புகள் உள்ளன.
அவை (1)சிறுநீரகங்கள், (2)தோல், (3)நுரையீரல், (4)பெருங்குடல் ஆகியன ஆகும்.
சிறுநீரகங்கள்
============
சிறுநீரகங்கள் மூத்திரத்தையும் அதாவது சிறுநீரையும், நுரையீரல்கள் கரியமில வாயுவையும், தோல் வியர்வையையும், பெருங்குடல் மலத்தையும் வெளியேற்றுகின்றன.
நமது சிறுநீரகங்கள் மிகவும் மென்மையானவை. தனி மனித நெறிமுறைகளைக் கொண்டே நமது சிறுநீரகங்களின் ஆரோக்கியத் தன்மையை நாம் உணரலாம்.
புகை மற்றும் போதைப் பழக்கம், மாமிச உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது போன்றவற்றால் நம் நுட்பமான உணர்வுகள் மேலும் மேலும் மழுங்கடிக்கப்பட்டு, உடலானது தேய்வை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.
தேவையில்லாத கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், படபடப்பு, பயம் மற்றும் உணவில் அதிகக் காரம் , உப்பு, போன்றவற்றால் நமது உணர்வுப்பூர்வ உறுப்பான சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
நமது உடலின் ரத்த சுத்திகரிப்பு பணியிலும், உடலின் கழிவுகளை முறையாக வெளியேற்றி உடலை நிலைக்கச் செய்வதிலும் நமது சிறுநீரகங்கள்தான் முன்னணியில் இருக்கின்றன.
தோல்
======
உடலின் வெளிப்புறமாக இருக்கும் தோலும் கழிவுத்தொகுதியின் ஒரு அங்கமாகும். தோலினூடாக வெளியேற்றப்படும் வியர்வையும் கழிவுப் பொருட்களான மேலதிக நீர், சிறிய அளவிலான யூரியா, மற்றும் சில உப்புக்களைக் கழிவாகக் கொண்டிருக்கும்
மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும்.
தோலில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின், செபாஷயஸ் சுரப்பிகளும் உள்ளன. அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். செபாஷயஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணை திரவத்தை சுரக்கின்றன. உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.
நுரையீரல்
=========
சுவாசித்தலே அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத பணியாக மிக முக்கியமான பணியாக கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையில் ஓய்வின்றி தொடர்ச்சியாக காற்றுப்பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது.
காற்றிலுள்ள பிராணவாயுவை எடுத்து உடல் உறுப்புகளுக்கு தருவதும், உறுப்புகள் உயிர்க்காற்றினை எடுத்துக்கொண்டு அசுத்த காற்றினை அதாவது கரியமில வாயுவினை வெளியேற்றுவதும் சுவாசம் என்கிறோம். இவ்வாறு காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகின்ற வேலையை நுரையீரல் செய்கின்றது.
பெருங்குடல்
===========
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு.
கழிவுத்தொகுதி (Excretory system) எனப்படுவது உயிரினங்களின் உடலில் இருந்து தேவையற்றதாகவும், மேலதிகமானதாகவும் கருதப்படும் பொருட்களை வெளியேற்றும் ஒரு உயிரியல் தொழிற்பாட்டிற்கான உடல் உறுப்புக்களின் தொகுதியாகும். இந்தத் தொகுதி உடலில் ஒரு சீரான சமநிலையைப் பேண உதவும்.
பொதுவாக உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் அனைத்து உடல் உறுப்புக்களும் கழிவுத்தொகுதியினுள் அடங்குமாயினும், சிறுநீர்த்தொகுதியே மிக முக்கியமான கழிவுத்தொகுதியாகக் கருதப்படுகின்றது. இதனால், சிலசமயம் சிறுநீர்த் தொகுதியையே கழிவுமண்டலம் எனவும் அழைப்பதுண்டு.
வளர்சிதைமாற்றத்தில் உருவாகும் கழிவுப் பொருட்கள், உடலிற்குத் தேவையற்ற, அல்லது மேலதிகமான திண்ம நீர்ம, வளிமப் பொருட்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இந்த கழிவுத்தொகுதிகள் உதவுகின்றது. உடலின் அனைத்து உறுப்புக்களும் வளர்சிதைமாற்றத் தொழிற்பாட்டில் பங்குகொண்டாலும், கழிவுகளை வெளியேற்றுவதில் பங்களிக்கும் உறுப்புக்களே கழிவு மண்டலத்தில் இணைக்கப்படுகின்றன.
சித்தர்களின் குரல்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...