Monday 11 September 2017

 முக்கிரட்டை கீரை மகத்துவம்

                இன்றைய காலத்தில், பல மூலிகை தாவரங்களின் பெயர் தெரியாமலே போய் விட்டது. ஒவ்வொரு மூலிகைகளின் தன்மையை ஆராய்ந்து, எவ்வாறு மருத்துவத்துக்கு பயன்படுகிறது என்பதை அறிந்து பயன்படுத்தினாலே, பல்வேறு உபாதைகளில் இருந்து, தற்காத்துக் கொள்ள முடியும். இதில், சிறந்ததொரு மூலிகை, மூக்கிரட்டை.
கீழ்புறம் வெள்ளையான, நீள் வட்டமான இலைகளையும் நீளமான தண்டில் கொத்தாக மலரும் சிவப்பு நிறமான பூக்களையும், கிழங்கு போன்ற தடித்த வேர்களையும் கொண்டு, தரையோடு படர்ந்து வளரும் கொடி வகைத் தாவரம் இது. அதிகமான கிளைகள் கொண்டது. ஒவ்வொரு கணுவிலும் இரண்டு இலைகள் காணப்படும்.
ஒன்று மற்றொன்றைவிட பெரியது. இலையின் அடிப்பகுதி உள் வளைந்த விளிம்புகளையுடையது. பழங்கள் சிறியவை. புற்கள் அடர்ந்துள்ள இடங்களிலும் இயல்பாக வளர்கின்றன. மூக்கிரட்டையின் முக்கியமான பண்பு, சிறுநீரை அதிகளவில் வெளியேற்றுவதாகும். மஞ்சள் காமாலை, மேகவெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும் போது, சிறுநீர் எளிதில் வெளியேற இது துணை புரிகிறது. இதன் இந்த மருத்துவக் குணம், மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரத்தசோகைக்கு தீர்வு: கோழை அகற்றும். மலமிளக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; காமாலை, நீர்க்கட்டு, வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றை குணமாக்கும். கீல்வாதம், இரைப்பு, இருதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். இலை, வேர் ஆகியவை, அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை. ரத்த சோகை குணமாக, இதன் இலையை பொரியல் செய்து, வாரம் இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, விரைவில் பலன் தெரியும்.
இலையை, கீரையாக சமைத்து சாப்பிடுவதால், மலச்சிக்கல் குணமாகும். கண் பார்வை தெளிவடையும். உடல் வனப்பாகும். மூக்கிரட்டை இலை, வேர் ஆகியவற்றை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். இலை, வேர், தண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிப்பதால் காய்ச்சல் குணமாகிறது. சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் குடிக்கலாம். இது கண்களுக்கு ஒளியை தருகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்கிறது. உடல் வலியை போக்குகிறது. வீக்கத்தை உடனடியாக கரைக்கிறது.
ஈரலுக்கு பலம்: விளக்கெண்ணெயில் மூக்கிரட்டை இலையை வதக்கி, ஒத்தடம் கொடுத்து வந்தால் மூட்டு வலி, வீக்கம் குறையும். இது அன்றாடம் பயன்படுத்த வேண்டிய கீரை. கெட்டுப்போன ஈரலுக்கு கூட மீண்டும் உயிர் தரக்கூடிய மருந்தாகிறது. தேனீராக்கி குடிப்பதால் ரத்த சுத்தமாகும். காய்ச்சல் தணிந்து போகும். சளி, இருமலை போக்க கூடியது.
வேருடன், சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். இதை காமாலை உள்ளவர்கள் குடிக்கலாம். வாதம், கீழ்வாதத்தால் ஏற்படும் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். வாரம் ஒருமுறை எடுத்துக் கொண்டால் கல்லீரல், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மருந்தாகிறது. 
பெரு மூக்கிரட்டையின் இலைகள், மலர்கள், வேர்கள் மூக்கிரட்டையை விட பெரியதாக இருக்கும். மலர்கள், ஊதா நிறமானவை. வளர் நிலங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும். வேர்கள் மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை, வாத நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...